Search This Blog

Followers

Powered By Blogger

Monday, June 16, 2025

மன்னவரே 36


 

              அத்தியாயம் 36


      "எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ. "


    ராகுல் அவரை புரியாமல் பார்க்க, அவர் புன்னகை சிந்தினார்.

   

"தவறி விழப் போறா பாருப்பா, கெட்டியா பிடிச்சுக்கோ"


      "நல்லா தான் பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு தெரியலம்மா."

 

      "முதல்ல அவள தூக்கிட்டு கோவிலுக்குள்ள வாப்பா. அந்த மரத்தடியில் இருக்கிற பைப்கிட்ட அவ கையையும் காலையும் நல்லா அழுத்தி கழுவு. அவள பிடிச்சது நீரோட போகட்டும்."


    அவர் சொன்னது போலவே செய்தவன், பிறகு நிரஞ்சனாவை கைகளில் தூக்கிக் கொண்டு கோவிலினுள் நுழைந்தான்.


  "இப்படி மண்டபத்துல அவள படுக்க வைப்பா, நான் இதோ வரேன்."


    ராகுலும் அவர் கூறியபடியே கோவில் மண்டபத்தில் அவளைப் படுக்க வைத்தான். அவனுக்கு அவளை எங்கோ பார்த்தது போன்று நினைவு, தன் நினைவடக்குகளில் எவ்வளவு தேடியும், எவ்வளவு யோசித்தும் விடைதான் கிடைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் அருகே அமர்ந்து விட்டான்.


      "அவ தலையை எடுத்து உன் மடிமேல வச்சு, அந்த அம்மனை வேண்டிக்கிட்டு, இந்த தீர்த்தத்தை அவளுக்கு புகட்டுப்பா."


  அவனும் அவர் கூறியது போலவே நிரஞ்சனாவிற்கு தீர்த்தத்தை புகட்டினான்.


    அவர் கண்களை மூடிக் வேண்டி கொண்டு, தன் கையில் இருந்த நீரை அவள் முகத்தினில் தெளிக்க, நிரஞ்சனாவின் இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் அசயத் தொடங்கியது.


  பின்பு சிறிது நேரத்திலேயே மெதுவாக நிரஞ்சனா தன் கண்களை திறந்தால். அவள் கண் திறந்ததும் முதலில் பார்த்தது, தன் தலையை மடிமீது தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த ராகுலைத்தான்.


    பதறி எழ முயன்றவள், தன் உடலின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், மீண்டும் அவன் மடியையே தஞ்சம் அடைந்தால்.


    "என்னம்மா உடம்புல தெம்பு வந்ததும், உதறிட்டு போலாம்னு பாத்தியோ. எல்லா நேரமும் தாங்கி பிடிக்க தம்பி இருக்குமுன்னு தைரியமா? எப்பவும் அவசரம் கூடாது, நிதானமாவே துணையோடு எழுந்து நில்லும்மா"


  "முதல்ல இந்த சேலையை வாங்கிக்கோம்மா, அதோ அந்த மறைவுக்கு பின்னாடி போய் மாத்திக்கிட்டு வா போ."


  அவள் புடவையை வாங்கிக் கொண்டு செல்ல, ராகுல் தனது அலைபேசியிலிருந்து ஓனரான வாசுதேவனுக்கு அழைத்தான்.


    அவரிடம் சுருக்கமாக நடந்தவைகளை கூறினான்.


    "நீ இருக்கிற இடத்தை எனக்கு லொகேஷன் அனுப்பு ராகுல், நான் உடனே என் வீட்டு டிரைவரை கார் எடுத்துட்டு அங்க அனுப்பி வைக்கிறேன்.


    அவன் கிட்ட வேனை கொடுத்துட்டு நீ அந்த பொண்ணை கூட்டிட்டு, அவங்க ஊர்ல கொண்டு போய் பத்திரமா இறக்கி விட்டுட்டு வா. பார்த்து பத்திரம், ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கூப்பிடு."


  அவன் அவருக்கு நன்றி கூறி அழைப்பை துண்டித்து விட்டு, வாட்ஸ் அப்பில் அவன் இருந்த லொகேஷனை அவருக்கு அனுப்பி வைத்தான்.


    பிறகு அவனது தாய்க்கு அழைத்தான், எங்கே நடந்தவற்றை கூறினால் அவர் பயந்து விடுவாரோ என்று நினைத்து, வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், அதனால் தனக்காக காத்திருக்காமல் உணவினை உண்டு விட்டு, நிம்மதியாக உறங்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.


  நிரஞ்சனா தான் அணிந்திருந்த தாவணியை கலைந்து விட்டு, புடவை உடுத்தி வந்தாள்.


  "ரெண்டு பேரும் இப்படி அம்மன் முன்னாடி வந்து நின்னு, கெட்டது எதுவும் நெருங்க கூடாதுன்னு நல்லா மனதார வேண்டிக்கங்க."


  அவர்களும் அவர் சொன்னது போலவே செய்தனர். அவர் அவர்கள் இருவரின் கைகளிலும் ஒரு தாயத்தினை கட்டினார்.


    "எந்த நேரத்திலும் இது உங்க கைய விட்டு, எப்பவும் நீங்க கூடாது. இது உங்க கையில இருக்கிற வரைக்கும், எந்த கெட்டதும் உங்க ரெண்டு பேரையும் நெருங்காது, நல்லபடியா ஊர் போய் சேருங்க."

 

    திருநீற்றினை இருவரது நெற்றியிலும் வைத்து ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பி வைத்தார். 


    வாசுதேவன் ராகுலுக்கு அழைத்து தனது கார் டிரைவர் அங்கு வந்து விட்டதாக கூறினார். உடனே ராகுல் அங்கு சென்று, டிரைவரிடம் நன்றி கூறி வேன் சாவியை கொடுத்துவிட்டு, கார் சாவியை வாங்கி வந்தான்.


    பிறகு இருவரும் அம்மனை நன்றாக வேண்டிக்கொண்டு தமது பயணத்தினை தொடங்கினர்.

  நிரஞ்சனாவிடம் அவளது ஊர் பெயரினை கேட்டு அறிந்து கொண்ட ராகுல் தமது அலைபேசியில்  அங்கு செல்வதற்கான வழியினை மேப் மூலம் அறிந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


வழியில் நிரஞ்சனாவிற்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் அவன் மறக்கவில்லை.

 

    வேடந்தூரில் மாலையில் ஆரம்பித்த ஊர் மக்களின் பொதுக்கூட்டமானது, சச்சரவுகளினோடே இன்னும் நடந்து கொண்டிருந்தது.


    "அட நிறுத்துங்கப்பா இன்னும் எவ்வளவு நேரம் தான் இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்க போறீங்க. சாயந்திரம் ஆரம்பிச்ச கூட்டம் அர்த்த ராத்திரி ஆயிடும் போல இருக்கு, எப்ப தான்யா முடிப்பீங்க?"


  "சுந்தரம் ஐயா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல, அவரு வெளியூர் போயிருக்கிறதுனால தானே, இப்போ யோசிக்க வேண்டியதா இருக்கு."


    "ஆமா பின்ன என்ன பண்றது அவர் ஏதோ அவசரம்னு வெளியூர் போனவர் இன்னும் திரும்பல."


    "நாளைக்கு வேற, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண் எடுக்க வேணும். ஏற்கனவே நாள் குறிச்சிட்டோமே அதனால நீங்களே பாருங்கன்னு அவர் சொல்லிட்டாரு."


    "அவர் ஹாஸ்பிடல்ல இருக்கிறதால இப்போதைக்கு அங்கிருந்து வர முடியாதாம். நம்ம வேலப்பன் ஐயா குடும்பத்திலயும் அந்த பொண்ணு ஓடிப் போனதால எல்லாரும் சங்கடத்தில் இருக்காங்க, அவங்களும் யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்." 


    "அதுதான் ஐயாவே சொல்லிட்டாரே அதனால கண்டிப்பா நாளைக்கு, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண்ணெடுத்து, நம்ம குல தேவிக்கு சிலை செய்யப் போறோம், எல்லாருக்கும் இதுல சம்மதம் தானப்பா?"


  "அப்புறம் என்ன நாளைக்கு இங்க கோவில்ல வேலை முடிஞ்சதும், நேரா கொற்றவை கோயிலுக்கு போய் அங்க பார்த்துட்டு வந்துடலாம், என்னப்பா சொல்றீங்க? ஏற்கனவே அவங்க பாதை போடுற வேலையெல்லாம் முக்கால்வாசி முடிஞ்சிடுச்சு."


    "நாம எல்லாரும் கோயில் வரைக்கும் போய், வேற என்ன தேவைப்படுதுன்னு ஒரு பார்வை பாத்துட்டு வந்துடுவோம் அப்பதான் திருவிழாவின் போது என்ன தேவைப்படும் என்கிறது தெரியும்."

No comments:

Post a Comment