Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, June 18, 2025

மன்னவரே 38


 

             அத்தியாயம் 38


  மருத்துவமனை வளாகத்தில் ஐசியூவின் முன்பு, வேந்தன் மற்றும் மதுவின் மொத்த குடும்பமும், லட்சுமியம்மா கண் முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.


    அவர்களுக்கு சற்று தள்ளி, கண்களில் கண்ணீர் பெருக, ஐ சி யூ வின் கதவுகளை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தால் மது. அவளின் இந்த நிலையை பார்த்து, மனம் நொந்தவாரே வாசல் பக்கம் ஒரு பார்வையும் இவளின் மீது ஒரு பார்வையுமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்.


  இவளை இந்நிலையில் காணப் பொறுக்காமல், மதுவின் தோழியான வினுவிற்கு தொலைபேசியில் அழைத்து, இந்த ஹாஸ்பிடலில் முகவரியைச் சொல்லி, உடனே வந்து பார்க்குமாறு கூறியிருந்தான். அவளுக்காக தான் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 


    இப்போதைய சூழ்நிலையில் தன்னைவிட, அவளது தோழியின் துணையே அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்று உணர்ந்து, வினுவை அழைத்திருந்தான்.


      லட்சுமி அம்மாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து அனைவரையும் சத்தம் போட தொடங்கினார்.


  "நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே, அவங்களுக்கு மேல மேல பிரஷரை ஏத்தக்கூடாதுன்னு, திரும்பவும் ஏன் இப்படி பேசி பேசி அவங்க உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துறீங்க. இப்ப அவங்களை ஐ சி யு குள்ள கண்டிப்பா அட்மிட் பண்ணியே ஆகணும்."


  லட்சுமி அம்மா ஐ சி யு வில் அட்மிட் செய்யப்பட்டார் பல உபகரணங்களின் உதவியால் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.


    நடந்ததை நினைத்துப் பார்த்த மதுவிற்கு தன்நிலையை எண்ணி, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.


    பிறருக்கு நன்மை செய்ய வேண்டி ஒரு பொய்யை சொல்ல போக, அது தனக்கே இப்படி வினையாக முடியும் என்று, அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.


  அதைவிட தனது குடும்பம், தன் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா என்று என்னும்போது, அவளுக்கு மனம் கனத்துப் போனது.


  தனது வாய்மொழியாகவே கேட்டாலுமே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள்  என்று கூற வேண்டாமா? இது தான் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையா? என்று அவள் மனது அவளிடமே கேள்வி கேட்டது.


    அது மட்டுமா தன் உடன் பிறந்தோனும் தன்னை பெற்றெடுத்தவருமான தந்தையுமே, தன்னிடம் இன்னும் இது பற்றி, ஒரு வார்த்தை கேட்கவில்லையே, அவர்களும் என்னை நம்பவில்லையோ? என்று மனம் வெதும்பினால்.


    அமுதனால் இன்னும் நம்ப முடியவில்லை கோயிலில் பேசியது தனது தங்கைதானா என்று. அதுவும் தங்களுக்கு தெரியாமல் அவள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்று அவனால் நம்பவே முடியவில்லை.


  பூவுப்பாட்டிக்கு வடிவுப்பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, தளர்ந்து போய் அமர்ந்திருந்த, தனது தந்தையை ஆறுதல் படுத்த அவரோடு அமர்ந்திருந்தான் அமுதன். இதனால் தன் தங்கையிடம் சென்று பேச அவனால் முடியவில்லை.


  ஒருவேளை தனது தங்கைக்கும் வேந்தனுக்கும் முன்பே அறிமுகம் இருக்குமோ, என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமல் இல்லை.


    அவசரமாக மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த வினு, நேராக மதுவிடம் சென்று அமர்ந்தாள்.


    "என்னாச்சு மது?"


    "யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அது தெரிஞ்சதால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு."


  "கண்டிப்பா இருக்காது, எங்களுக்கு தெரியாம இதை நீ செஞ்சிருக்கவே மாட்டே, ஏதாவது ஒரு சிச்சுவேஷனா இருந்திருக்கலாம். அதனால நீ பொய் சொல்லி இருக்கலாம், அது தெரியாம அம்மா இதை உண்மைனு நினைச்சுட்டாங்களா? சரி விடு அம்மா திரும்ப வந்ததும் நம்ம சொல்லி புரிய வச்சுக்கலாம்."


  ஐ சி யூ வின் கதவுகளை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் பார்வை, வினுவிடம் திரும்பியது. அவளை கட்டிக்கொண்டு கதறி அழ  தொடங்கினாள்.


  வினு பேசியதை கேட்ட கனியமுதனுக்கு, தான் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை என்று, மனது உறுத்தியது.


    "அடடா மது குட்டி, எதுக்காக இப்போ டேமை இப்படி ஓபன் பண்ணிட்டு இருக்க, லட்சும்மா ரொம்ப தான் உன்னை திட்டிட்டாங்களோ, விடு அவங்க வந்ததும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அவங்களை ஒரு கை பார்த்துக்கலாம் சரியா அழக்கூடாது."


  தோழியை தனது சேய்யாக்கி தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் வினு. அவள் மன பாரம் போக்க, வேறு கதைகளை பேசி அவளை திசைதிருப்பத் தொடங்கினாள்.


வினுவின் வரவால் தனது மனதை நிலைப்படுத்திக் கொண்ட மதுவிற்கு, அப்போதுதான் நினைவு வந்தது.


  "ஆமா வினு நான் உனக்கு கால் பண்ணவே இல்லையே? உனக்கு எப்படி தெரியும், நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு? அண்ணா கூப்பிட்டு இருந்தானா?"


    தன் அண்ணன் தனக்காக வினுவை வரவழைத்து இருப்பானோ என்று ஆர்வத்தோடு மது கேட்க,


"இல்ல மது, வேந்தன் சார் தான் எனக்கு கூப்பிட்டு இருந்தாரு. உடனே இங்க என்னை வர சொன்னாரு."


  அப்போதுதான் மதுவிற்கு வேந்தனின் குடும்பமும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி வேந்தனை தேடியவள், தனக்கு சற்று தள்ளி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் வேந்தனை கண்டால்.


    அவனைக் கண்டவுடன் மறுபடியும் நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர, கண்களில் மீண்டும் கண்ணீர் சூழ்ந்தது. தனது உதட்டை கடித்த அழுகையை அடக்கி கொண்டவளை வேந்தன், சூழ்நிலை அறிந்து கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூற தொடங்கினான்.


    வேந்தன் அவனது வலது கையை நெஞ்சில் வைத்து, கண்களை மூடி திறந்து அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக விழி வழியே அவளுக்கு செய்தி அனுப்ப, புரிந்து கொண்டு சரியென்று அவளும் தலையை அசைத்தால்.


  இடது கையால் இதழ்களுக்கு நேராய் வைத்து ஸ்மைலி என்று சைகை அனுப்ப, அவளும் மென்னகை புரிந்தால்.


  இவர்களின் விழி மொழியினை அங்குள்ளவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஆனால் அனைவரின் மனதிலும் தோன்றியது ஒன்றுதான், ஒருவேளை லட்சுமி அம்மா கூறியது உண்மை தானோ என்று.


    இவ்வளவு நேரமும் ஒருவேளை லட்சுமி அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே தெரிந்தது, இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்.


  அப்போதே சுந்தரமூர்த்தி ஐயா ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை பற்றி மதுவின் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள, அவரை நோக்கி சென்றார்.


  வினு உள்ளே நுழையும் போதுதான் வேந்தனின் நண்பர்களும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.


    விஷயம் அறிந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேந்தனை முறைத்துக் கொண்டே அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.


    ஆனால் வேந்தன் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் மதுவின் மீது மட்டுமே இருந்தது.

No comments:

Post a Comment