அத்தியாயம் 3
"டேய் அஜ்ஜு எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை, அவங்க அப்பா ஊர் சைடுல எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அதோட இப்போ அரசியல் அவதாரம் வேற எடுக்க போறாராம்."
"இருந்துட்டு போறாரு அதுக்காக உண்மையான காதலை எப்படியோ போகட்டும்னு விட்டுட சொல்றியா?
நான் அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்திருக்கேன். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்ன்னு."
சற்று நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து அவர்களை அழைக்க, அடுத்தடுத்து பதிவுத் திருமணத்திற்கான வேலைகள் ஆரம்பமானது.
நண்பர்களின் துணையோடு நல்லபடியாக பதிவு திருமணமும் நடந்து முடிந்தது. பதிவேட்டில் தனது கையொப்பத்தை இட்ட அர்ஜுன், தனது பாக்கெட்டில் இருந்த தங்கத் தாலியை எடுத்து, அருகே கழுத்தில் பூ மாலையோடு நின்று கொண்டிருந்த இளைஞனின் கைகளில் கொடுத்தான்.
ஆம் அங்கு வேறொருவருக்கு தான் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
"அடேய் ஆனா ஊர் உலகத்துல உன்னை மாதிரி ஒருத்தனை பார்த்ததே இல்லடா, உனக்கு கல்யாணத்துக்கு பார்த்த பொண்ணை அவளோட லவ்வரோட சேர்த்து வைக்கிறதுக்கு, அவங்க வீட்டை எதிர்த்து நிற்கிற பார்த்தியா அங்க நிக்கிற டா நீ."
அர்ஜுனுக்கு பெண் பார்த்த இடத்தில் தனியாக பேச வேண்டும் என்று அந்த பெண்ணோடு சென்றவன். அவளது காதல் கதையையும் அவர்கள் வீட்டில் அவள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதையும் கேட்டு, அவளது காதல் கை கூடுவதற்காக உதவி செய்து கொண்டிருக்கிறான்.
இதோ மணப்பெண் மகிமாவின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் புடை சூழ, கையில் உருட்டு கட்டையோடு ரிஜிஸ்டர் ஆபீஸினுள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்குப் பின்னால் தனது மகனை காப்பாற்ற அர்ஜுனின் தாய் தந்தையரான கிருஷ்ணனும் விஜயலட்சுமியும் வேகமாக வருகிறார்கள்.
"யோவ் உனக்கு என் தங்கச்சியை பிடிக்கலைன்னா அதோட விட்டிட வேண்டியது தானே, அதை விட்டுட்டு இப்படி மாமா வேலை பார்த்துட்டு இருக்க.
அவ காதலிச்ச பையனோட சேர்த்து வைச்சு ஊர்க்காரங்க உறவுக்காரங்க முன்னாடி எங்களை தலை குனிஞ்சு நிற்க வெச்சுட்டியேடா?
அவளை கூட விட்ருவோம், ஆனா இப்படி எங்க குடும்ப மானத்தை வாங்குன உன்ன விடவே மாட்டேன் டா."
என்று கூறியபடி மகிமாவின் அண்ணன் அவனை நோக்கி உறவுகளோடு தாக்க வர, அவர்களுக்கு இடையே கேமராவை பிடித்த படி வந்து நின்றவர்கள், தொடர்ந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.
கோபத்தோடு தாக்க வந்தவர்கள் தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்பே, மைக் பிடித்த மாடன் மங்கை ஒருத்தி பேசத் தொடங்கினாள்.
"நீங்க இப்ப நேரடியா பார்த்துட்டு இருக்கிறது ஆளும் கட்சி எம் எல் ஏ கேன்டிடேட்டா அறிவிச்சிருக்க மிஸ்டர் காசிநாதனோட ஜாதி வெறியைத் தான்.
தன் பொண்ணு வேற மதத்தை சேர்ந்தவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதை தாங்க முடியாம, அவங்களை ஆணவ கொலை செய்ய முயற்சி செய்யறாங்க.
அவங்களை சேர்த்து வெச்ச நண்பர்களை கொல்ல உறவுக்காரங்க மற்றும் அடியாட்களோடு வந்திருக்காங்க.
இதையெல்லாம் பார்த்துகிட்டு இன்னும் போலீஸ் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு? இவங்களோட முகத்தை எல்லாம் பாருங்க மக்களே, அவங்களோட ஜாதி வெறி அப்படியே தெரியுது.
கேமரா மேன் எல்லாத்தையும் ஜூம் பண்ணுங்க நேரடி டெலிகேஸ்ட் தானே போய்கிட்டு இருக்கு."
அவ்வளவு தான் பெண்ணின் குடும்பத்தை தவிர மற்ற உறவுகள் அனைத்தும் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, சிதறியபடி அந்த கட்டிடத்தை விட்டு வெளியே போய் விட்டனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி தம்பதிகளை பாதுகாப்போடு வெளியே அனுப்பி வைத்தனர்.
அப்போது அர்ஜுனை நோக்கி வந்த அவனது தாய், அவன் முதுகில் அடிக்க தொடங்கினார்.
"மலை மாடு மலை மாடு எப்ப பாரு இந்த மாதிரி பிரச்சனையை இழுத்துகிட்டு வர்றதையே வேலையா வச்சிருக்கே.
ஏண்டா எங்க உசுர வாங்கற? மொட்டை பையனா சுத்தறியே அதோட பார்க்குற பொண்ணுங்க பின்னாடியே போய் லவ்வு லவ்வுன்னு அலையிறியேன்னு, ஒரு புள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சா, எங்களை ஏன் தான் இப்படி உசுர வாங்கற?
அப்படி தான் போன முறை பொண்ணு பார்க்க போனப்போ, அந்த வீட்டு பாத்ரூம் செவுரு வழியா எகிரி குதிச்சு அப்படியே வெளியே ஓடிட்டே.
நாங்க தான் அதை இதை சொல்லிட்டு அங்கிருந்து வெளிய வர வேண்டியதா போச்சு. இப்ப இதோ இவங்க வீட்ல உன் மூஞ்சியையும் உன் வேலையையும் ஒத்துக்கிட்டு அவங்களா சரின்னு சொன்னாங்க.
அப்படியும் அந்த பொண்ணுக்காக இந்த மாதிரி ஒரு வேலைய பார்த்து எங்களை தலை குலைய வச்சுட்டியேடா?
உனக்கெல்லாம் கடைசி வரைக்கும் பொண்ணே செட்டாகாது டா, அப்படியே உன் பிரண்ட்ஸோடவே போய் தொல, அகழ்வாராய்ச்சி சிலையை தோண்டனும்னு அப்படியே ஓடிடு, வீட்டு பக்கம் வந்த விளக்கமாறு பிஞ்சிடும்.
நீங்க என்ன அவன் முகத்த முகத்த பார்த்துகிட்டு இருக்கீங்க? கிளம்பி வாங்க உங்க அருமை புள்ள எப்படியும் வீட்டுக்கு தான் வருவான்.
எப்படியும் இவன் தான் கை காசு போட்டு இங்க அவசர அவசரமா ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு தயார் பண்ணி இருப்பான். காசு இருந்தா அவன் கையில கொடுத்துட்டு வாங்க.
இல்லாட்டி கடன்க்காரங்க நம்ம வீட்டு வாசல்ல தான் வந்து நிற்பாங்க. துரைக்கு வாய்விட்டு கேட்கறதுக்கு அவ்வளவு சங்கடம், நா முன்னாடி போறேன் சீக்கிரமா வாங்க."
அவர் கோபமாக அங்கிருந்து செல்ல தனது தந்தையின் தோள் மீது கை போட்டவன்,
"என்ன தகப்பா, குடியிருந்த கோயில் வழக்கத்தை விட அதிகமா சூடா இருக்க மாதிரி தெரியுது. நான் கொஞ்சம் அதிகமாவே வேலையை காட்டிட்டனோ?"
தனசேகர் அவசரமாக தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து மகனின் கைகளில் திணித்தவர்,
"நல்ல சிறப்பான வேலை செஞ்சுட்ட டா மகனே, உன்னால இனி ஒரு வாரத்துக்கு உங்க அம்மா இதை சொல்லியே என்னை திட்டுவா.
சும்மாவே உங்க அம்மாக்கு என்னைய திட்டுறதுக்கு காரணம் கேட்க வேண்டாம், இப்போ பெத்து வெச்சிருக்கீங்க பாரு இப்படியொரு புள்ளையைன்னு அர்ச்சனை பண்ண தொடங்குவா.
என்னமோ எனக்கு மட்டுமே சம்பந்தம் இருக்கிற மாதிரி சொல்லி சொல்லி திட்டுவா டா. தயவு செஞ்சு அடுத்த எக்ஸ்பிரிமெண்டுக்கு கொஞ்சம் கேப் விடுடா, அப்பாவால முடியல."
No comments:
Post a Comment