அத்தியாயம் 37
குருஜியின் ஆசிரமத்தில் விஜயன், தன்னைச் சுற்றி, தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த, குருஜியின் சீடர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.
"இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி அந்த பொண்ணை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே, இதுதான் நீங்க பொறுப்பா இருக்கற லட்சணமா?"
"அந்தப் பொண்ணு பத்திரமா பாத்துக்கிறதை தவிர, உங்களுக்கு என்னடா வேலை? அப்படி என்ன வேலையை பார்த்து கிழிச்சீங்க?"
"பொறு விஜயா சற்று அமைதி கொள்."
"எப்படி குருஜி அமைதியா இருக்கிறது. நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள். அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமுன்னு உங்களுக்கே தெரியும். இவனுங்க இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறானுங்களே இனி எப்படி என் பொண்ணு நினைச்சதை சாதிப்பா.
இதுக்காக நம்ம எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், கோயில்ல இருக்கிற சாமியை மந்திர கட்டால அடக்கி வைச்சிருக்கோம்.
அந்த காட்டு பிச்சியை, அந்த காட்டை விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதபடி, மந்திரத்தால கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.
அது மட்டுமா அந்த கோயில்ல சாமி ஆடுற பூசாரியை, குருந்த மரத்தடியில் இருந்து மண் எடுக்கணும்னு சொல்ல சொல்லி, மண்ணு எடுக்கிறது மூலமா அந்த காட்டு பிச்சியோட மிச்சம் இருக்கிற சக்தியை எல்லாம் முடக்கப் போறோம்.
இத்தனையும் எதுக்காக, என் பொண்ணோட ஆசைக்காக தான், ஆனா அதுவே நடக்காம போயிடும் போல இருக்கே."
"விஜயா நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேள். ஏற்கனவே அந்த பெண் நிரஞ்சனாவின் உடலில், உன் பெண்ணின் ஆன்மா ஒப்புவதற்கான வழிமுறைகளை செய்து விட்டேன்.
இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி, நாளை உன் மகள் அந்த மோகினி பள்ளத்தில் இருந்து வெளிப்படும் போது, இந்த நிரஞ்சனா அந்த ஊரில் இருக்க வேண்டும்.
இந்தப் பெண் நிரஞ்சனாவை, உன் மகளுக்காகவே உருவேற்றி வந்துள்ளோம். அவளைத் தவிர வேற யார் உடலிலும் உன் மகளின் ஆன்மாவால் உட்புக முடியாது.
எனது கணிப்பு சரி என்றால் நம்மிடமிருந்து தப்பித்த அந்த பெண், நிச்சயமாக அவளது ஊரிற்குதான் சென்று கொண்டிருப்பாள்.
அதனால் கவலை ஏதும் இல்லை, நீ அமைதி கொள் விஜயா, நிச்சயம் வெற்றி நமதே."
லட்சுமியம்மாவுக்கு மதுவை வேந்தனுடன் கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறிக் கொண்டிருக்க, அவர் முற்றிலுமாக உடைந்து போனார்.
நிரஞ்சனாவை பற்றி பூவுப்பாட்டி காலையில் தான் அவரிடம் கூறியிருந்தார். ஏற்கனவே தன்னால், தனது புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீராமல் அப்படியே இருக்க, மீண்டும் தான் பெற்ற மகளால், புதிதாக உருவாகி இருக்கும் இந்த பிரச்சினையை எண்ணி மனம் துவண்டார்.
சரி விதி ஆடும் ஆட்டத்தில், யாருக்கு யார் என்பது இறைவன் போட்ட முடிச்சு, அதை யாரால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேலும் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றார்.
அதுவும் அவள் தாலி மற்றும் குங்குமத்தை பற்றி கூறியது, தனது வளர்ப்பு பொய்த்து விட்டதோ என்று அந்த தாய் மனது நொறுங்கிப் போனது..
அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கோவிலில் சரிந்தவரை, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இது அவருக்கு மைல்டு அட்டாக் என்று கூறினர்.
அவரின் மன அழுத்தமும், எதிர்பாராத அதிர்ச்சியும் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறினர். மீண்டும் இது போன்று அதிர்ச்சியான தகவல்கள் எதுவும் அவரை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மியம்மாவை காண உள்ளே செல்ல, மெதுவாக கண்விழித்தவர் தன் மகளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு, கத்த தொடங்கினார்.
"அவள வெளிய போக சொல்லுங்கத்தே. நான் யாரையும் இப்ப பார்க்க தயாரா இல்லை, என்னோட வளர்ப்பு சரியா இல்ல போல, அதனாலதான் பெத்தவங்க கிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்க அவ முடிவு பண்ணிட்டா.
அது மட்டுமா, எந்த நாட்டுல பிறந்துட்டு தாலியும் நெற்றி நிறைய வைக்கிற குங்குமமும் மதிப்பில்லைன்னு சொல்லிட்டா? எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, வெளியே போக சொல்லுங்க."
"அம்மா நான் சொல்றதை கேளு, அவர்கிட்ட சும்மா விளையாட்டுக்காக தான் சொல்லிட்டு இருந்தேன்."
"எது விளையாட்டு, தாலி உனக்கு விளையாடும் விஷயமா? குங்குமமும் மாங்கல்யமும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரியுமா? இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் அது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா?"
"அம்மா நான் சொல்றத கேளு."
"இனி கேட்க என்ன இருக்கு, அதுதான் நீ சொன்னது எல்லாத்தையுமே என் காதால கேட்டுட்டேனே."
"ஐயோ அம்மா..., நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு, நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. சில விஷயத்துக்காக நான் பொய் சொன்னேன்."
வடிவுப்பாட்டி தான் மதுவிற்கு ஆதரவாக பேசினார்,
"லட்சுமி மொதல்ல புள்ள சொல்றத, கொஞ்சம் காது கொடுத்து கேளு. அதுக்கு முன்னவே நம்ம புள்ளைய நாமலே சந்தேகப்படலாமா?"
"இதுக்கு மேல என்ன கேட்கிறது. கண்ணால பாத்தாச்சு, அவ வாய்மொழியாகவே கேட்க வேண்டிய அளவுக்கு கேட்டாச்சு. இதுக்கு மேலயும் அவ என்ன சொல்லி, நான் என்னத்த கேட்க. இன்னைக்கு காலையில அவ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனது உண்மையா, பொய்யான்னு மட்டும் என் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க"
"நான் போனது உண்மைதான். ஆனா…"
"போதும் இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் கேட்க வேண்டாம். அத்தை நான் தான் சொல்றனே அவள வெளியே போக சொல்லுங்க. இங்கயே இருந்து என்னை உயிரோட கொல்ல வேண்டாமுன்னு சொல்லுங்க.
அவள பெத்ததுக்கு எனக்காக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய சொல்லுங்க, என்னோட கடைசி ஆசையும் இதுதான்.
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் மாங்கல்யம் என்கிறது புனிதமானது. அதை கட்டிக்காம குடும்பம் நடத்துவது ஒரு தப்பான முறையா போய்விடும். தயவு செய்து அவர் கையால, இவ கழுத்துல மாங்கல்யம் வாங்கிட்டு, என் பொணத்தை வந்து பார்க்க சொல்லுங்க.
அப்படி இல்லைனா, அவ என்னை பாக்கவே வரவேண்டாம் வெளிய போக சொல்லுங்க."
பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, மூச்சுக்களை பெரிது பெரிதாக இழுத்து விட ஆரம்பித்தார்.
உடனே டாக்டரும் நர்ஸ்களும் அழைக்கப்பட்டு, அவருக்கு மறுபடியும் சிகிச்சை ஆரம்பமானது.
No comments:
Post a Comment