அத்தியாயம் 35
திக்கு தெரியாமல் நெடுஞ்சாலைதனில் ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சனா, தூரத்தில் ஏதோ வாகனம் வரும் வெளிச்சப் புள்ளி தெரிய, அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
வழியெங்கும் மரங்கள் சூழ்ந்த இருளின் நடுவே, குத்து மதிப்பாகதான், அந்த தார் சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள்.
அதே ரோட்டில்தான் எதிர் திசையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அடங்கிய மினி வேனினை, ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான், மதுவினால் கூகுள் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ராகுல்.
கட்டுமான பொருட்கள் அடங்கிய மினி வேனை, பத்திரமாக தமது கம்பெனியின் அருகே இருக்கும் குடோனில் நிறுத்திவிட்டுதான், ஆபீஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பைக்கை எடுத்துக்கொண்டு இவனது இல்லம் செல்ல வேண்டும். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்.
வண்டியை ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்த ராகுலுக்கு, யாரோ ரோட்டில் ஓடி வருவது போல் தெரிந்தது.
அருகே வரவர தான் அது ஒரு பெண் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
வேனினை கண்டவுடன் கைநீட்டி அதை நிறுத்த முயற்சி செய்தால் நிரஞ்சனா, அந்த முயற்சிக்கு பலனாக வேனும் நின்றது.
அதிலிருந்து இறங்கிய ராகுல், அவளின் தோற்றத்தை கண்டு அதிர்ந்து நின்றான்.
இவ்வேளையில் உடையெங்கும் இரத்தப் புள்ளிகள் சூழ்ந்திருந்த அவளது தோற்றத்தை கண்டு, இந்த குளிர்கால இரவு நேரத்திலும் அவனுக்கு வியர்வை பூத்தது.
"சார் சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. இங்கிருந்து என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ். என்னை கடத்தி வச்சிருந்தவங்க என்னை காணோம்னு துரத்திட்டு வந்தாலும் வந்துடுவாங்க."
ராகுலுக்கு அவளின் தோற்றம் வித்தியாசமாக பட்டாலும், அவள் வேதனையில் அழும்போது, அவனால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
இந்த இரவு நேரத்தில் பணம் பறிப்பதற்காக, இவ்வாறு சிலர் நடிப்பதை அவன் கேள்விப்பட்டதுண்டு. சில சமயம் அவனும் கூட அதில் ஏமாந்து போனதும் உண்டு.
பாவம் பார்த்து வண்டியை நிறுத்தியதனால் ஏற்பட்ட, பல வழிப்பறிகள் பற்றிய செய்திகள், ஏனோ இந்த சமயம் அவன் நினைவுக்கு வந்தது.
இருந்தும் அவளின் முகத்தில் தெரிந்த பதட்டமும் கவலையும் இவனுக்கு உண்மை என்றே கூறியது.
"முதல்ல பதட்டப்படாம தெளிவா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க."
நிரஞ்சனா அழுகையினூடே கூறத் தொடங்கினாள்.
"யாரோ மந்திரவாதிங்க சிலர் என்னை கடத்திட்டு வந்துட்டாங்க. நான் எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியல. என் ஃபேமிலி கிட்ட போகணும், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்."
பதட்டத்தோடு இவள் வந்த பாதையினை திரும்பி திரும்பி பயத்தோடு பார்த்துக் கொண்டே, இவனிடம் பேச, ராகுலும் அவளை வண்டியினுள் ஏறுமாறு கூறினான்.
அவளை வேனின் பின்பக்கத்தில் பொருட்களோடு பொருட்களாக ஏறி அமர்ந்து கொள்ள சொல்லி, வெளியே தெரியாத வண்ணம் அவளின் மீது, ஒரு தார்பாயை போட்டு மூடினான்.
"இந்தக் காட்டத் தாண்டுற வரைக்கும் இப்படியே இருங்க, வெளியே என்ன சத்தம் கேட்டாலும் சரி, வண்டி நின்னாலும் இல்ல ஏதாவது பேச்சு குரல் கேட்டாலும் சரி, தயவு செய்து இந்த தார்பாயை விலக்கிப் பார்த்திடாதீங்க."
ராகுல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வண்டியினை கிளப்பி சிறிது தூரமே சென்றிருப்பான், அப்போது சில கட்டுமஸ்தான ஆட்கள் காட்டுப் பாதையில் இருந்து ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வந்தவர்கள் இவனது வண்டியை நிறுத்தி,
"இந்த வழியா ஏதாவது ஒரு பொண்ணு போனதை பார்த்தியா?"
"கியா? தும் கியா பாத் கரேகோ, ஹமே ஹமே சமஜ்னையாத்தா?"
"என்னடா இவன் கியாமுயாங்கிறான் ஆள பாத்தா வெளியூர்க்காரன் மாதிரி இருக்கிறான், கண்டிப்பா அந்த பொண்ணு இவன் வண்டியில ஏறி இருக்காது. பின்னாடி எல்லாம் ஒரே கட்டிட பொருளுங்களா தான் கிடைக்குது. அது எங்கயாவது இந்த காட்டுக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கனும்."
"அதுதான் பாதிப்பேர் காட்டுக்குள்ள தேடிக்கிட்டு இருக்காங்களே, வா நாம அந்தப் பக்கம் போய் தேடி பார்க்கலாம்."
அவர்கள் இவன் வண்டியை தாண்டி மறுபக்கம் இருந்த காட்டினுள் தேட சென்றனர்.
ராகுல் வண்டியை இயக்கி அங்கிருந்து நகரத் தொடங்கினான்.
அங்கிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் தாண்டி தான் வண்டியை நிறுத்தினான்.
வண்டியின் பின்புறம் வந்து தார்ப்பாயை விளக்கியவன்,
"வெளிய வாங்க பயப்படாதீங்க, நாம அங்க இருந்து தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்சம் தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும். உங்க பேரன்ட்ஸ் நம்பர் இருந்தா சொல்லுங்க நான் போன் பண்ணி தரேன்."
"அது எனக்கு நினைவுல இல்லயே, எல்லாரோட நம்பரும் என் போன்லதான் இருக்கு. நான் எதையும் மனப்பாடம் செஞ்சு வச்சுக்கல."
"என்னங்க இது, ஒருத்தரோட நம்பர் கூடவா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரல? எப்பவும் கையிலயே போனை வச்சுக்கிட்டு இருப்பீங்களோ?"
தான் கூறியதைக் கேட்டு அவள் முகம் போன போக்கை பார்த்து அதற்கு மேல் எதுவும் அவனால் கூற முடியவில்லை.
"சரி இன்னும் கொஞ்ச தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும் நான் உங்களை அங்க இறக்கி விட்டுடவா? இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல வேணா விட்டு விடவா?"
"வேண்டாம் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பயமாதான் இருக்கு, ப்ளீஸ் சார் என்னை நீங்களே என் வீட்டில் கொண்டு போய் விட்டுடறீங்களா?"
ராகுலுக்கும் அவளின் இக்கட்டான நிலமை புரிந்தது. ஆனாலும் தன்னிடம் உள்ள கட்டுமான பொருட்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே, இதை இப்படியே வைத்துவிட்டு எவ்வாறு இவளுடன் செல்ல முடியும்.
அத்தோடு அவள் இருக்கும் கோலத்தை முதலில் கலைக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே சுற்றி முற்றி தேடினான்.
அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தூரம் தள்ளி ஒரு கோயில் இருந்ததை கண்டான்.
அங்குள்ள நீரால் முதலில் இவள்மேல் உள்ள ரத்த துளிகளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அவளை அழைத்துக்கொண்டு அக்கோவிலை நோக்கி சென்றான்.
கோவிலை நெருங்கும்போது ஏனோ நிரஞ்சனாவால் தெளிவாக நடக்க முடியவில்லை. அவள் மேல் உள்ள செய்வினை விளைவால் நிற்க முடியாமல் தள்ளாடத் தொடங்கினாள்.
சரியாக கோயிலின் வாசற்படியை மிதிக்கும் போது மயங்கி சரியப் போனவளை ஒரு கை கொண்டு ராகுல் பிடித்துக் கொண்டான். அவளின் மற்றொரு புறத்தை கோவிலின் உள்ளிருந்து வந்த இன்னொரு கரம் தாங்கியது.
ராகுல் நிமிர்ந்து பார்த்தபோது அங்கே மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய குங்குமம் வைத்து தெய்வம்சம் பொருந்திய ஒரு பெண்மணி கோவிலின் உள்ளிருந்து நிரஞ்சனாவை ஒரு புறம் தாங்கிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ."
No comments:
Post a Comment