அத்தியாயம் 34
அடப்பாவி மனுஷா, நின்னுட்டு இருந்த உன் வண்டி மேல வந்து மோதுனது ஒரு குத்தமாய்யா, நானும் காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவேன். இவர் சொல்ற எத்தனை பொய்க்குதான் நான் ஒத்து ஊதுவேன். நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது
ஆண்டவா, இவர் என்ன எனக்கு மேல இருப்பார் போலயே, கோவில்ல நின்னுகிட்டு இப்படி புளுகுறாரே,பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, இவர் உருட்டற உருட்டுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காது போலயே, மது தன் கால்களை உந்தி வேந்தன் காதில் கிசுகிசுத்தால்,
"மிஸ்டர் எம்டி சார் இன்னும் எனக்கு எத்தனை பட்டத்தை தான் வாங்கி கொடுக்க போறீங்க, காலையில ஹாஸ்பிடல்ல எனக்கு கர்ப்பம்னு சொல்லி தான் லாவண்யா மேடமை பார்க்க கூட்டிட்டு போனீங்க, இப்போ உங்களை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணகிட்ட பொண்டாட்டின்னு என்னை சொல்றீங்க, அடுத்து என்ன வளைகாப்பா? இல்ல டைரக்டா லேபர் வார்டுக்கு பிரசவத்துக்காக என்னை கூட்டிட்டு போக போறீங்களா?"
மது பற்களின் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, வேந்தன் ஒரு அசட்டுப் புன்னகையை மட்டுமே அவளுக்கு பதிலாக கொடுத்தான்.
பெரியவர் இவர்களை சந்தேகமாக பார்க்க,
"அதுப்பா நீங்க யார்ன்னு கேட்கறா? இன்னைக்கு காலையில நடந்த, நம்ம கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டானே சந்துரு, அவனோட அப்பா தான்மா இவரு"
மது ஒரு சைஸாக, அவனை முறைத்துக் கொண்டே தலையை உருட்டி வைக்க,
"பாத்தீங்களாப்பா எங்களுக்காக சாட்சி கையெழுத்து போடத்தான் சந்துரு அங்கே வந்திருந்தான்."
"இல்லப்பா வேந்தா, ஏற்கனவே ஹாஸ்பிடலையே ரெண்டு பேர் சொன்னாங்க, இவன் ஏதோ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறதா போன்ல பேசிட்டு இருந்தானாம். நான் அதை நம்பல. ஆனா, இப்போ எனக்கு சந்தேகமா இருக்கு. எனக்கு உன்ன பத்தி தெரியும்ப்பா, நீ உன் குடும்பத்துக்கு தெரியாம கண்டிப்பா இப்படி கல்யாணம் பண்ணிக்க மாட்டே, நீ உன் ஃப்ரெண்டை காப்பாத்தறதுக்கு வேண்டி பொய் சொல்லாத."
இப்போது மது அவரிடம் பேச ஆரம்பித்தால்,
"சார் அவர் சொல்றது உண்மைதான் எங்க ரெண்டு பேத்துக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு சாட்சி கையெழுத்து போடுறதுக்காக தான், அவர் அங்க வந்திருந்தார். நீங்க வேணா உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்தா கேட்டு பாருங்க, உங்க பையன் மட்டும் இல்ல, அவரோட சேர்த்து இவரோட பிரண்ட்ஸ்ங்க இன்னும் ரெண்டு பேர் அங்க வந்திருந்தாங்க."
"அப்ப உங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொல்றீங்க அப்படித்தானே?"
"ஆமா சார் ஆமா."
"அப்போ வாங்க, இப்பவே என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் தாலி கட்டி தம்பதியர் ஆகிடுங்க, என்ன? ரெண்டு பேரும் திருதிருனு முழிக்கிறீங்க வாங்க."
மது அவர் கூறியதில் அதிர்ச்சியாகி பிரம்மை பிடித்தது போல் நின்றுவிட, வேந்தன் அவளுக்கு பின்னால் சென்று நின்று கொண்டு, அவன் ஏற்பாடு செய்த சந்துருவின் போலி அப்பாவை நோக்கி கட்டைவிரலை உயர்த்தினான்.
கோயிலினுள் அடித்த மணி சத்தமே மதுவை தன்னிலைக்கு கொண்டு வந்தது. தனக்கு முன், நின்று கொண்டிருந்த அந்த பெரியவரை பார்த்து தெளிவாக பேச தொடங்கினாள்.
"இங்க பாருங்க சார் தாலி கட்டி, மாலை மாத்தி கல்யாணம் பண்ணனும்னா, நாங்க அதை அங்க ரிஜிஸ்டர் ஆபீஸ்லயே பண்ணி இருப்போமே? எங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனாலதான் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து மட்டும் போட்டு, எங்க திருமணத்தை உறுதி பண்ணிக்கிட்டோம்.
இவருக்காக தான் நான் கோயிலுக்கே வந்திருக்கேன். எனக்கு இந்த தாலி கட்டிக்கிறது, குங்குமம் வச்சிக்கிறது இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை போதுமா.
இதுக்கு மேல நீங்க நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி, நான் சொல்றது ஒன்னு தான், எனக்கும் இவருக்கும் இன்னைக்கு காலைல தான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் நடந்தது. அதுக்கு சாட்சி கையெழுத்து உங்க பையனோட சேர்த்து இவரோட பிரண்ட்ஸ் ரெண்டு பேர் தான் போட்டாங்க போதுமா."
"மதூஊஊஊஊ...."
தனக்கு பரிச்சயமான அந்த குரலைக் கேட்டு திரும்பிய மது, அங்கே தன் அன்னையைக் சற்றும் எதிர்பார்க்காததால் அவரை கண்டு அதிர்ந்து நின்றாள்.
வேந்தனும் கூட இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை,அவன் போலி அப்பாவை ஏற்பாடு செய்ததே மதுவின் நெற்றியில் தன் கைகளால் குங்குமம் இட வேண்டும் என்ற காரணத்தால் தான், அவன் ஒன்று நினைத்து செய்ய போக இப்படி ஆகும் என்று, அவன் கனவிலும் எண்ணி பார்க்கவில்லை.
இவள் தன் அன்னையை நெருங்கி செல்லும் முன்னேயே, லட்சுமியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிய தொடங்கியிருந்தார். கீழே விழ போனவரை பூவுப்பாட்டி தன் கைகளில் தாங்கிக் கொண்டார்.
மதுவின் குடும்பம் மட்டுமல்ல வேந்தனின் ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தது.
காரிருள் பூசிய நெடுஞ்சாலைதனில், கண்களில் கண்ணீர் பெருகி பாதையை மறைக்க, அதைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, நிரஞ்சனா தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு முன் தான் அவள் கண் விழித்திருந்தால், தான் எங்கிருக்கிறோம் என்று, அந்த இருட்டில் எரியும் தீபங்களின் உதவியோடு பார்த்தாள்.
ஒரு கொடூரமான சிலையின் முன்னால் தான் படுக்க வைக்கப்பட்டு இருப்பதையும், தன்மீது ஏதோ துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்தாள்.
நன்கு கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தபோது தான் தெரிந்தது, அங்கு இருப்பது அத்தனையும் ரத்தம் என்று.
எப்படி தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று யோசித்தபோது எதுவுமே புரிபடவில்லை.
மனமானது தான் எப்போதுமே உதாசீனப்படுத்தும் தன் குடும்பத்தின் அருகாமையை தேடியது.
கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது. இது அழுவதற்கான சூழல் அல்ல என்று புரிந்து கொண்டு, யாரோ வரும் அரவம் கேட்டு கண் மூடி படுத்துக் கொண்டால்.
அரை கண்ணை திறந்து அவள் பார்த்தபோது மந்திரவாதிகள் போன்று இருந்த சிலர், அங்குள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
வந்தவர்களில் சிலர் இவளை தூக்கி சென்று, ஒரு காரில் படுக்க வைத்துவிட்டு அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
அவர்கள் அனைவருமே உள்ளே சென்றது இவளுக்கு வசதியாக போக, உடனே கார் கதவினை திறந்து கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு ஓட ஆரம்பித்தாள். திக்கு தெரியாமல் கிடைத்த வழிதனில் கண்ணுக்குத் தெரிந்த வழியில் ஓடினாள்.
அந்தப் பாதை நேராக ஒரு நெடுஞ்சாலையை சென்று சேர, அங்கு யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று அந்த சாலையில் தொடர்ந்து ஓடத் தொடங்கினாள்.
No comments:
Post a Comment