அத்தியாயம் 26
"அவருக்கு ஒர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்குதாம், அதனால டெம்ப்ரவரியா என்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க அவ்வளவுதான்."
"அதுக்காக நாம வந்த வேலையையும் பார்த்துட்டு,எக்ஸ்ட்ரா வொர்க்கும் பார்க்க போறியா? வேண்டாம் மது, நாம எப்படியாச்சும் பணம் அரேஞ்ச் பண்ணி செட்டில் பண்ணிடலாம் டா.
மது, என்ன பாத்து சொல்லு நிஜமா இங்க ஒர்க் பண்ண, உனக்கு பிடிச்சிருக்கா?"
காலையில் தன்னிடம் இங்கு சேர்ந்தே தீர வேண்டும் என்று இவள் மன்றாடியதென்ன, ஆனால் இப்போது தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், எதை பற்றியும் யோசிக்காமல் இவ்வேலையை தூக்கிப் போட துணியும் இந்த நட்பை பெற, தான் என்ன தவம் செய்திருக்க வேண்டுமோ, என்று எண்ணிய மது வினுவிற்காகவாவது, தான் இங்கு இருந்தே தீர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.
"வினு இது நமக்கு கிடைச்ச புது வாய்ப்பு, இதை மிஸ் பண்ணனும்னு சொல்றியா? கண்டிப்பா இங்க ஒர்க் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அன்னைக்கு நான் தானே அவர் வண்டி மேலே போய் மோதினேன். கார் ஹெட் லைட்டையும் நான்தானே கல்லை வீசி ஓடச்சேன், தப்பு என் மேல தானே, அதுக்கு பதிலா இங்க பி.ஏ ஒர்க் பார்த்து அதை சரி பண்ணிட போறேன் அவ்வளவுதானே, அதுதான் நீயும் என் கூடவே இருக்கயில்ல செல்லம்."
மதுவை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்த வினு,
"அன்னைக்கு நம்ம மேல தானே தப்புன்னு, நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னதுக்கு, செத்துப்போன என் கொள்ளு பாட்டி மொதக்கொண்டு தோண்டி எடுத்து இல்லடி திட்டினே
இப்போது மட்டும் எப்படி தங்களுடைய ஞானக்கண் திறந்தது என்ற உண்மையை கூற முடியுமா மன்னா?"
"அப்படி கேளும் என் மங்குனி , உம்மோடு சேர்ந்து சேர்ந்து என்னுடைய மூளையும் அடிக்கடி வேலை செய்ய மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கின்றதே."
" ஆனால் மன்னா அப்படி ஒன்று தங்களுக்கு இருந்தால் தானே வேலை செய்ய, அப்படி இருந்திருந்தால் இப்படி ஆறிப்போன காப்பியை இவ்வளவு நேரம் ஊதிக்கொண்டு இருப்பீரா?"
இருவரும் ஒருவாராக ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். மதுவின் வீட்டில் அவளை இறக்கி விட்ட வினு, காலை தானும் அவளுடன் வருவதாக கூறினாள்.
மதுவிற்கு தெரியும், வினு கண்டிப்பாக தன்னை தனியாக செல்ல அனுமதிக்க மாட்டாள் என்று.
"சரிடி தாயே சரி, ஆனாலும் உன் பாசத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணும்மா, மழை காலத்துல உன்னோட ஓவர் பாசத்தால நான் எங்காவது வழுக்கி விழுந்திட போறேன்."
"ஐய்யே உனக்கு வேண்டி யார் வர்றது? உன்கிட்ட இருந்து அந்த ஓனரை காப்பாத்த தான், நான் உன் கூட வரேன்னு சொன்னேன்."
அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அமுதன்,
"அட என்னதிது எங்க வீட்டு வாசல்ல குள்ளவாத்து கூட்டமா இருக்கு? அட நம்ம தங்கச்சிங்க தானா. என்ன மகளிர் அணி மாநாடு வீட்டு வாசல்ல நடக்குது?"
"யாரைப் பார்த்து வாத்துன்னு சொன்ன?"
"அட என் அறிவு கெட்ட உடன் பிறப்பே, உங்களை சுத்தி யாராவது இருக்காங்களா? இல்லல்ல, அப்போ கண்டிப்பா உங்களை பார்த்து தான் சொல்றேன்.
இப்படி வழியை மறைச்சிட்டு நிக்காம, அந்த பக்கம் குட்டையா பார்த்து போய் சுத்துங்க போ போ."
"மது உங்க அண்ணன் பேச்சில கொஞ்சம் திமிர் தெரியுதில்ல?"
"ம்ம்ம்.... மொத்தமா குறைச்சிடுவோம்."
வேகமாக உள்ளே வந்த மது, தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்த அமுதனை பார்த்து, ஒரு மடித்து வைத்த பேப்பரை தூக்கி எறிந்தால்,
"டேய் அண்ணா அந்த நாலாவது வீட்டில மூணாவது மாடியில இருக்கற அந்த பொண்ணு, உங்க அண்ணன் கிட்ட என்னோட இந்த பதில் லெட்டரை மறக்காம கொடுத்திடுன்னு சொல்றா. என்னை பார்த்தா போஸ்ட் மேன் மாதிரி இருக்கா இல்ல, ப்ரோக்கர் மாதிரி இருக்கா?"
"டேய் அமுதா என்னடா சொல்றா இவ? யாருடா அந்த பொண்ணு? எத்தனை நாளா இந்த வேலை நடக்குது?"
"ஐயோ அம்மா அது யாருன்னே எனக்கு தெரியாதும்மா. இவ ஏதோ பொய் சொல்லிட்டு இருக்கா."
"எது நான் பொய் சொல்றனா? அந்த பொண்ணு தெளிவா சொல்லுது பதில் லெட்டர்னு, நீ லெட்டர் கொடுக்காமயா அது திருப்பி பதில் லெட்டர் கொடுக்கும்."
லட்சுமி எதிர் தரப்பு வக்கீலாக மாறி, தன் மகனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க, மது பார்வையாளராக அக்காட்சியை ரசித்துக்கொண்டே அருகில் இருந்த பொறியை மென்று கொண்டிருந்தாள்.
அமுதன் தன் தங்கை சிரிப்பதைக் கண்டு அவசரமாக அந்த லெட்டரை எடுத்து பிரித்துப் பார்க்க, அதில் ஒன்றுமேயில்லை வெற்றுக் காகிதம்.
"என்னடி இது, ஒன்னுத்தையும் காணோம். "
"எனக்கென்ன தெரியும், அதை நீ அந்த பொண்ணு கிட்டயே கேளு"
அப்போதுதான் லட்சுமியம்மா நினைவு வந்தவராக,
"ஆமா நாலாவது வீட்டில் தான் மாடியே இல்லையே, அது ஓட்டு வீடாச்சே."
அப்பறம் என்ன, லட்சுமியம்மாவும் அமுதனும் மதுவை துரத்த, அவள் ஓட என்று வீடு அதகளப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த சிவராமன், இது எதனையும் கண்டுகொள்ளாமல் நேரே தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
அவரைக் கண்டு மூவரும் தன் நிலைக்குத் திரும்பி விட, லஷ்மியம்மா சிவராமனை காண அவர்கள் அறைக்குச் சென்றுவிட, அமுதனும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"டேய் அண்ணா, என்ன அதிசயமா இருக்கு, நம்ம வீட்டு நாட்டாமை எதுவுமே சொல்லாம உள்ள போயிட்டாரு, அட அட்லீஸ்ட் ஒரு முறைப்பு கூட இல்ல, என்னவா இருக்கும்?"
"ம்ம்ம்…,ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியிது, அப்பாவோட முகமே சரியில்ல, அம்மா வரட்டும் கேட்போம். "
தலைக்கு கை கொடுத்து, விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்த சிவராமனின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. அவர் கண்களை சிமிட்டிய போது, தெறித்து விழுந்த இரு துளி கண்ணீரைக் கண்டு, பதறிப்போய் அவர் அருகில் வந்தார் லட்சுமியம்மா.
"என்னங்க ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி இருக்கீங்க?"
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் லட்சுமி, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம். எனக்கு அவங்கள இப்பவே பார்க்கணும் போல இருக்கு. ஆனா அப்பா தான் என்னை அவர் முகத்துலயே முழிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரே."
"அச்சோ அத்தைக்கா? நீங்க ஏதும் கவலைப்படாதீங்க, அத்தைக்கு ஒன்னும் ஆகாது, நீங்க தைரியமா இருங்க.
மாமா என்ன சொன்னாலும் பரவால்ல, நாளைக்கே நாம போய் அத்தைய பார்த்துட்டு வரலாம்."
சிவராமன் தனது மனைவியின் மடியில் முகம்தனை புதைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
No comments:
Post a Comment