அத்தியாயம் 24
வேந்தன் அறையில் நுழைந்ததிலிருந்தே அவனின் முறைப்பைக் கூட சட்டை செய்யாமல், அவனை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.
"மாப்ள ம்ம்ம்...ரெண்டு பேரும் கண்ணாலையே பேசுக்கிறீங்க போல, ஆனாலும் ஹாஸ்பிட்டல்ல வெச்சு இவ்வளவு பப்ளிக்கா சைட் அடிக்க வேண்டாம் டா."
"போலீஸ்காரன்னு கூட பார்க்க மாட்டேன். உதைச்சே உருட்டி விட்ருவேன் வாயை மூடிகிட்டு நில்லு."
இங்கு தீபன் வேந்தனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்க, அந்தப் பக்கம் மூர்த்தி ரோசாப்பாட்டியோடு போராடிக் கொண்டிருந்தான்.
"பாட்டி அவரு வார்டு பாய் இல்ல, அவர் தான் டாக்டர்."
சந்துருவை மேலிருந்து கீழாக பார்த்த ரோசா பாட்டி, வேலப்பன் அய்யாவிடம் திரும்பி,
"ஏய்யா வேலு இந்த ஆஸ்பத்திரியில டாக்டர்களுக்கு ஒரு வெள்ளை கோட்ட கூடவா கொடுக்க மாட்டாங்க, என்ன ஆஸ்பத்திரியின்னு இதுல வந்து சேர்த்திருக்க?"
"அய்யய்யோ ரோசாப்பாட்டி, இந்த ஹாஸ்பிடலோட ஓனரே இவர்தான்."
இனியாவது தனக்கு மரியாதை கொடுப்பார் என்று எதிர்பார்த்த சந்துருவுக்கு, திரும்பவும் பல்பு தான் கொடுக்கப்பட்டது ரோசாப்பாட்டியால்,
"அப்படியாய்யா, நீ தான் இந்த ஆஸ்பத்திரி ஓனரா? மத்த ஆஸ்பத்திரியிலே எல்லாம் இருக்கிற மாதிரி டிவி, பிரிட்ஜ்ன்னு ரூம்ல வெச்சிருக்க மாட்டீங்களா.
கிரகம் இந்த ஆஸ்பத்திரியில சிக்னலே கிடைக்க மாட்டேங்குது, நானும் ரொம்ப நேரமா நாடகம் பார்க்கறதுக்காக போனை நோண்டிக்கிட்டே இருக்கேன், நெட்டே வர மாட்டேங்குது. உன் ரூம்ல டிவி இருக்காய்யா? அதுல நாடகம் எல்லாம் வருமா?"
சந்துரு வேந்தனை முறைக்க, வேந்தன் மூர்த்திக்கு கண்காட்டியதும் மூர்த்தி முன்வந்து,
"அட ரோசாப்பாட்டி, ஊர்ல இருக்கிறவங்க பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கிற, உங்களுக்கு ஒரு பிரச்சனையா?
கீழ கேண்டின்ல டிவி இருக்கு. அங்க நான் வரும்போது நாடகம் தான் ஓடிக்கிட்டு இருந்தது. அதுல கூட மாமியாரும் மருமகளும் இப்பதான் சண்டை போட ஆரம்பிச்சு இருக்காங்க."
மூர்த்தி ரோசா பாட்டியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். போவதற்கு முன் ரோசாப்பாட்டி சந்துருவை எட்டிப் பார்த்து,
"மறக்காம அந்த டப்பாவை மாத்திருப்பா."
சந்துரு போகும் ரோசாப்பாட்டியை பார்த்து முறைத்து விட்டு பூவுப்பாட்டியிடம் சென்று, டேபிளின் மேல் இருந்த அவரது கோப்பினைப் பார்த்தான்.
வேலப்பன் அய்யாவும் மற்றவர்களும் பதைபதைப்புடன் அவனைப் பார்த்து நின்றனர்.
அப்போதுதான் மாறன் தன் தங்கையை காணவில்லை என்று கவனித்து, அவன் அன்னையிடம் சென்று கேட்டான்.
ஏதோ தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தனது தோழி கீழே வந்திருக்கிறாள் அவளை சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றதாகவும் கூறினார்.
சந்துரு மற்றவர்களிடம் பூவுப்பாட்டியின் நிலைமையை பற்றி, எடுத்துக் கூற ஆரம்பித்தான்.
"அவங்க வழுக்கி விழுந்ததில உடம்புல அவ்வளவா காயம் ஏதும் இல்லை தான். ஆனா டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்ததுல அவங்க ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்கன்னு தெரியுது. கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது. ஒரு ரெண்டு மூணு நாள் இங்க தங்கி இருந்து ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டி இருக்கும்.
அதுவரைக்கும் இவ்வளவு பேர் இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல, ஒருத்தர் இருந்தா போதும்.
அதுவும் அவங்க மன அழுத்தத்தை குறைக்கிற மாதிரி ஆளா இருக்கணும். பார்த்த உடனே, டென்ஷனை அதிகம் ஆக்குற மாதிரி ஆட்களா இருக்க கூடாது.
ஃபுட் எல்லாம் பேஷண்ட்க்கும், கூட இருக்கவங்களுக்கும் இங்கேயே ப்ரொவைட் பண்ணிடுவோம். நீங்க அவங்களுக்கு தேவையான டிரஸ்ஸஸ் மட்டும் கொண்டு வந்து கொடுத்தா போதும்.
மூணு நாள் கழிச்சு வந்து எல்லாரும் பாருங்க அது வரைக்கும் தயவு செஞ்சு அவங்கள எதுவும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க."
வடிவுப்பாட்டி முன்வந்து அந்த பொறுப்பை தனதாக்கி கொண்டார்.
மறுத்துப் பேசியவர்களை,
"அவங்க என்னோட அம்மா. அவங்கள என்னால் மட்டும் தான் நல்லா பாத்துக்க முடியும். இதுக்கு மேல யாராவது பேசினா அண்ணண்னும் பார்க்க மாட்டேன், மாப்பிள்ளைனும் பார்க்க மாட்டேன்."
அதற்கு மேல் எவரும் பேச முன்வரவில்லை, அவர்களுக்குத்தான் தெரியுமே, வடிவு பாட்டிக்கு எல்லாமே அவர்தான் என்று.
வேலப்பன் அய்யா தளர்ந்த நடையுடன் திரும்பி சென்று விட்டார். அவருக்கு தான் தெரியுமே, மனைவியின் மன அழுத்தம் எதனால் என்று, ஆகவே பூவுப்பாட்டிக்கு மேலும் வருத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்.
மாறனுக்கும் தாம் ஒன்று நினைக்க நடப்பது வேறாக உள்ளதே என்ற வருத்தம் தான். ஆனாலும் பிறகு பார்த்து கொள்ளாம் என்று விட்டு, தனது தங்கைக்கு தொலைபேசியில் அழைத்தான். ஆனால் அது அனைத்து வைக்கப்பட்டுயிருப்பதாக கூற குழப்பத்துடன் அவளை தேடி கீழே சென்றான்.
மற்றவர்களும் கிளம்பி விட, வடிவு பாட்டியோடு தான் இருப்பதாக கூறி, வேந்தன் அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும், வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
தவறாமல் ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடமாறு சொல்லிவிட்டு தான் அவர்களும் கிளம்பி சென்றனர்.
அனைவரையும் அனுப்பிவிட்டு பூவுப்பாட்டி அருகில் வந்த வேந்தன் அவரிடம்,
"எல்லோரும் கிளம்பிட்டாங்க பாட்டி."
என்று கூறியது தான் தாமதம், பூவுப்பாட்டி எழுந்து வேந்தனை கட்டிக்கொண்டு, அழ தொடங்கி விட்டார்.
அனைவரும் சென்றதும், வடிவுப்பாட்டியிடம், நடந்தவற்றைக் கூறித்தான் அறையின் உள்ளே, அழைத்து வந்திருந்தான் வேந்தன்.
அவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்த குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்தவருக்கு, இப்படி ஒரு நிலையா என்று, அவரின் கைகளை பிடித்து கொண்டு வடிவுப்பாட்டியும் கதறி விட்டார்.
"என்ன ஆத்தா வெளியே உங்க வீட்டுக்காரர் உட்பட அத்தனை பேரையும் அதட்டி துரத்தி விட்டுட்டு, இப்ப இப்படி வந்த அழறீங்க. நீங்க தானே உங்க அம்மாக்கு சமாதானம் சொல்லணும்."
"முடியலையே ராசா, பாவி பய அவிங்க செஞ்ச வேலையை நினைச்சாலே, எனக்கு ஈரக்குலையே நடுங்குது. அவங்களோட சுயநலத்துக்காக அண்ணி உயிரை பணயம் வைக்க பார்த்தாங்களே. இன்னமும் என்னென்னவெல்லாம் செய்ய காத்திருக்காங்களோ தெரியலையே?"
"அதை நான் பார்த்துக்கிறேன் ஆத்தா, நீங்க ரெண்டு பேரும் அதெல்லாம் மறந்துட்டு, ரெண்டு நாள் ஜாலியா உங்க பையன் வீட்டுல போய் இருந்துட்டு வர்றீங்க சரியா."
"என்ன ராசா சொல்ற புரியலையே? நான் அந்த வீட்ல தானே சாகுற வரைக்கும் இருந்தாகணும். ஆனா இப்போதைக்கு அங்கு இருக்கிறவங்கள பார்க்க எனக்கு விருப்பம் இல்ல ராசா"
"ஐயோ பூவுப்பாட்டி, நான் உங்க ரெண்டாவது பையனை பத்தி சொல்லிட்டு இருக்கேன், அவரை நீங்க பார்க்க வேண்டாமா? வேண்டாம்னா விடுங்க."
No comments:
Post a Comment