அத்தியாயம் 23
"பாட்டி கவனிச்சதால பரவால்ல, ஒரு வேலை கவனிக்காம விட்டிருந்தா, நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு மாமா."
"இதை வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லலாம்னு நான் அண்ணன் கிட்ட அப்பவே சொன்னேன். அண்ணா தான் வேண்டான்னு சொல்லிட்டான்."
"மாமா இவங்கள நம்ப முடியாது. அண்ணனும் தங்கச்சியும் தனக்கு ஒரு ஆபத்துன்னு வந்தா, எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவாங்க.
இதனால குடும்பத்தில் இருக்கவங்களோட மனசு காயப்படறத பற்றியும் கவலைப்பட மாட்டாங்க. அதனால தான் நான் மணி கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்."
"நீ சரியா தான் சொல்ற மகி, நீங்க எதும் கவலைப்படாதீங்க இனி நான் பாத்துக்குறேன்."
வேந்தன் ஜி எம் ஹாஸ்பிடலில் டாக்டராக பணிபுரியும், தனது நண்பன் சந்துருவிற்கு அழைத்தான்.
"என்னடா அதிசயமா இருக்கு, நீயா எனக்கு கூப்பிட்டு இருக்க, பிசினஸ் மேன் இப்போ பிஸியா இல்லையோ?"
"சந்துரு நான் இப்போ உங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். நீ எங்க இருக்க, நான் இப்பவே உன்னை பார்க்கணும்."
வேந்தனின் குரலிலேயே மாற்றத்தை கண்டுகொண்ட சந்துரு, அவனுக்கு தான் இருக்கும் இடத்தை கூறினான்.
தீபனுக்கும் மூர்த்திக்கும் பூவுப்பாட்டியின் விஷயம் தெரிந்து, அவர்களும் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
ரிசப்ஷனில் வேந்தனை கண்ட இவர்கள், அவன் மூலமாக நடந்ததை அறிந்து கொண்டு, பள்ளி தோழனான சந்துருவைக்காண சென்றனர்.
ஜீ எம் மருத்துவமனை சந்துருவின் அப்பா, டாக்டர் சந்திரசேகருடையது. கடந்த ஒரு வருடமாக தான், மருத்துவமனையின் பொறுப்புக்களை சந்துருவிடம் கொடுத்துவிட்டு, குடும்பத்தாருடன் ஐக்கியமாகிவிட்டார்.
"என்னடா முப்பெரும் தேவர்கள் சேர்ந்து வர்றீங்க, விஷயம் கொஞ்சம் பெருசோ."
"இங்க பூவாத்தாள்ன்னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்கள அட்டன் பண்ண டாக்டரை, நான் கொஞ்சம் பார்க்க முடியுமா?"
சந்துரு போனில் தனது உதவியாளரை அழைத்து விவரங்களை கேட்டறிந்து, அவர்களை தன்னை வந்து பார்க்குமாறு கூறினான்.
வேந்தன் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தவன், நடந்தவற்றை கூறி முடித்தான்,
"நான் இப்ப சொல்ல போறதை தான், அவங்க பேமிலி கிட்ட, டாக்டர் சொல்லணும்."
என்று சில விஷயங்கள் கூற ஆரம்பித்தான்.
"என்னடா சொல்ற அப்பாக்கு மட்டும், விஷயம் தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். எப்படி அவருக்கு தெரியாமல் இதை செய்யறது."
"அடேயப்பா! தீபா கேட்டியா, சார் அவரோட அப்பாக்கு தெரியாம எதுவுமே செஞ்சதில்லையாம். அப்போ அந்த லாவண்யா விஷயம் உங்க அப்பாக்கு தெரியுமோ?"
லாவண்யா சந்துருவின் உயிர் காதலி. காதல் என்றால் ஒன்று இரண்டு வருட காதல் அல்ல, பதினைந்து வருட பள்ளி காதல்.
இவனுக்கு பிடி கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்த லாவண்யாவை, அவளின் கடைசி வருட கல்லூரி படிப்பின் போது, போராடி காதலிக்க வைத்து விட்டான்.
இருந்தும் தங்களது இரு குடும்பங்களையும் நினைத்து, இவனைத் தவிர்த்து வந்த லாவண்யாவை, எப்படியோ ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் செய்யும் அளவிற்கு கொண்டு வந்து விட்டான்.
அடுத்த வாரம் யாரிடமும் சொல்லாமல், அவளை திருமணம் செய்து கொள்ள போகின்றான். இதற்கு அவளை சம்மதிக்க வைப்பதற்குள் ஒருவழி ஆகி விட்டான்.
"அடேய் மூர்த்தி, ஏண்டா கத்துற. வெளிய எவனுகாச்சும் கேட்டுச்சுன்னா, நேரா எங்கப்பன் கிட்ட போய் பத்த வச்சுடுவானுங்க."
"நானே இப்பதான் லாவண்யா கிட்ட அதை இதை சொல்லி, வீட்டுக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு கெஞ்சி, சம்மதம் வாங்கி இருக்கேன். நீங்க ஏதாச்சும் பேசி குடும்பத்துக்குள்ள ஏழரையை கூட்டி விட்டுட்டு போயிடாதீங்கடா ராசாக்கலா."
"எது ரிஜிஸ்டர் மேரேஜா? அப்போ திருட்டு கல்யாணமா, ஏண்டா வேந்தா அப்போ கண்டிப்பா சாட்சி கையெழுத்து போட ஆளுங்க வேணும்ல."
"ஆமா தீபா நாமலே வேணும்னா, போட்டு விட்டுருவோமா!"
ஆஹா இவனுங்க பேசுற மாடுலேஷனே சரியில்லையே, தெரியாத்தனமா கல்யாணத்தை பத்தி நானே வாயை விட்டுட்டனே என்று நினைத்த சந்துரு,
"இப்போ என்ன டா உங்களுக்கு, அந்த டாக்டர்ஸ்க்கு பதிலா நானே நேரா வந்து உங்க குடும்பத்துக்கிட்ட பேசுறேன், வாங்க ராசாக்கலா போகலாம்."
சந்துரு தன் உதவியாளரை அழைத்து, தானே நேரடியாக அந்த பேஷண்டை பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு, பூவுப்பாட்டி உள்ள அறையை நோக்கி, இவர்களுடன் நடந்தான்.
இவர்கள் பூவுப்பாட்டியின் அறையை நெருங்கும் போதே, ஒப்பாரி சத்தம், சாத்தியிருந்த அறையின் கதவைத் தாண்டியும், வெளி வரண்டா வரை கேட்டுக் கொண்டிருந்தது.
"டேய் வேந்தா இது நம்ம சரோசா(ஜா) கிழவி சத்தம் டா, உன் மச்சான் மாறன், காசு கொடுத்து இந்த கிழவியை ஏற்பாடு பண்ணி இருப்பான் போல இருக்கு.
இந்த கிழவியை பத்தி சும்மா நினைச்சுடாதீங்கடா ராமலட்சுமனன் மாதிரி ஒத்துமையா இருக்கற குடும்பத்தையே, இந்த கிழவி சண்டையை மூட்டி விட்டு பிரிச்சு விட்டுட்டு போயிரும். இப்ப என்னத்த போட்டு விட இங்கே வந்திருக்கோ.
இது கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சிட்டா போதும். அதை வெற்றிகரமா முடிக்கிற வரைக்கும் அந்த இடத்தை விட்டு நகராது."
"என்னடா கூலி படை மாதிரி பேசிட்டு இருக்க?"
"டேய் தீபா, இந்தக் கிழவியெல்லாம் அதுக்கும் மேல, நீ பார்க்க தான போற உள்ள வா. உன்னால முடிஞ்சா இதை புடிச்சு ஜெயிலுக்குள்ளையாவது போடு, ஊருக்குள்ள இருக்கிற குடும்பங்களாட்சும் சந்தோசமா இருக்கும்."
இவர்கள் உள்ளே நுழையும் போதே, ரோசா பாட்டி சுவர் ஓரம் காலை நீட்டி அமர்ந்தபடி, வெத்தலையை இடித்துக் கொண்டே வாயில் மருத்துவமனையை பற்றி மென்று துப்பி கொண்டிருந்தார்.
"ஏன்டா இன்னுமா உன் பொண்டாட்டி கண்ணு தொறக்கல? என்ன ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்க நீ? ஒரு நர்ஸைக் காணோம், ஒரு வார்டு பாயை காணோம், ப்ரிஜ் இல்ல, ஒரு டிவி பொட்டி கூட இல்லையேடா இங்க, அப்பப்ப வந்து செக் பண்ணிட்டு மட்டும் போறாய்ங்களே தவிர, ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாய்ங்க.
சரிரிரி... இவே இன்னும் கண்ணயே திறக்கலயே, ஏதும் சீரியஸா இருக்குமோ என்னமோ?
அவ கண்ண மூடுறதுக்கு முன்னவே, அவ பேத்தி கல்யாணத்தையாச்சும் பார்த்துட்டு போகட்டும். இந்த திருவிழா முடியிறதுக்குள்ள கல்யாணத்தை வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்போவ். அதுதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் இங்கே தானே இருக்காங்க."
தம்மை விட வயதில் மூத்தவர் என்பதால், வேலப்பன் ஐயாவும் மூர்த்தி ஐயாவும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, எதுவும் பேசாமல் நின்றிருந்தனர்.
அவர்களுக்கே அந்த கதி என்றால், மற்ற குடும்ப உறுப்பினர்களை பற்றி சொல்லத்தான் வேண்டுமா? தான் ஏதாவது பேச, இந்த கிழவி உருமாற்றி சண்டையை மூட்டி விட்டு விட்டால், தமக்கு ஏன் வம்பு என்று அனைவரும் தமது வாயை இறுக மூடிக்கொண்டு, டாக்டர்கள் என்ன சொல்வார்களோ என்று பதைப்பதைப்புடன் காத்திருந்தனர்.
"அடடா இது என்ன ஹாஸ்பிட்டல்லா இல்ல சந்தை கடையா? ஒரே கூட்டமும் கூச்சலுமா, இப்படி இருந்தா பேஷண்ட் எப்படி ரெஸ்ட் எடுப்பாங்க. முதல்ல எல்லாரும் வெளியே போங்க."
"ஏய்யா வார்டு பாய்யி, நீ என்ன இப்ப வாயால கொட்டாவியா விட்டுட்டு இருக்கே? உன் சத்தத்துல மட்டும் அவங்களுக்கு ஒன்னும் ஆகாதா? வந்ததே லேட்டு, போ போய் அந்த பாத்ரூமுல பைப்பு ஒழுகுது, அதை சரி பண்ணிட்டு, டப்பா வேற உடைஞ்சு கிடக்கு அதை மாத்தி வைய்யி."
நண்பர்கள் படுத்தியபாட்டில் சந்துரு தனது டாக்டர் கோட்டை எடுத்து வர மறந்து, ப்ளூ அண்ட் ப்ளூ யூனிபார்மில் வந்திருந்தான்.
"ஆஸ்பத்திரியின்னா ஆளும் சனமும் வந்து போயிட்டு தான் இருக்கும். வந்துட்டான் பெருசா நாட்டாமை பண்ண சொம்பை தூக்கிக்கிட்டு."
நம்ம ரோசாப்பாட்டி போட்ட போடல சந்துரு அரண்டே போயிட்டான்.
No comments:
Post a Comment