Search This Blog

Followers

Powered By Blogger

Monday, June 2, 2025

மன்னவரே 22


 

           அத்தியாயம் 22 


அதிகாலையிலேயே எழும் பூவுப்பாட்டி நேராக சென்று நிற்பது, வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கால்நடை தொழுவத்தில் தான்.


  வீட்டில் உள்ள மனிதர்களைவிட, இங்கு தன் அன்பை எதிர்பார்த்துக் காத்து கிடக்கும், இந்த ஐந்தறிவு ஜீவன்களே தேவலாம் என்று பூவுப்பாட்டிக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.


  வீட்டுப் பொறுப்பை மருமகள்களிடம் கொடுத்துவிட்டு, வீட்டு ஆண்கள் வெளியே கிளம்பும் வரை, இந்த ஜீவன்களுடன் தான் பொழுதை போக்குவார்.


  அவர் முற்றிலுமாக தவிர்க்க நினைப்பது, தன் கணவரையும் பெற்றெடுத்த இரு மகன்களையும் தான்.


தன் கணவர், தனது இரண்டாவது மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய போது, தான் பெற்ற மற்ற இரு பிள்ளைகளும் தனக்கு துணையாக நிற்கவில்லையே என்ற வருத்தம்,  இன்னும் அவர் மனதில் உள்ளது.


    அவரின் மகன்களே வலிய வந்து இவரிடம் பேசினாலும், பெற்றெடுத்த பாவத்திற்காக, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அளவாக பேசுவார். தன் கணவரிடம் அது கூட இல்லை. 


  ஆரம்ப காலத்தில் ஒரு மனைவியாக, கணவனுக்கு செய்ய வேண்டிய தேவைகளை செய்துவிட்டு, விலகி நின்று கொள்வார்.


    சில வருடங்களாக அதுவும் இல்லை. அவரைப் பார்ப்பதையே முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.


  வீட்டுப் பெண்களிடமும் பேரக்குழந்தைகளிடமும் மட்டுமே அவரின் பேச்சுவார்த்தை உள்ளது.


  மூத்த மகனின் பிள்ளைகள் இருவரும் அதில் விதிவிலக்கு. என்னதான் சிறுவயதில் இருந்தே புத்தி கூறினாலும், தன் கணவரின் குணத்தைக் கொண்டு பிறந்துள்ள அவர்களை பூவுப்பாட்டியால் திருத்த முடியவில்லை. மனபாரத்தோடு அவர்களிடமும் தனது பேச்சுவார்த்தையை குறைத்துக் கொண்டார்.


  தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி, தன் மருமகளை பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம், இன்னும் அவர் மனதில் நெருஞ்சிமுள்ளாக குத்திக் கொண்டிருக்கின்றது.


  அவருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், தனது நாத்தனார் வடிவின் வருகை மட்டுமே, மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் தனது அண்ணியை பார்க்க வந்து விடுவார்.


    தனது மகள்களை இங்கு திருமணம் செய்து கொடுத்த பின்னும், தனது அண்ணியை காணவே, இங்கு ஆவலாக வருவார்.


    பிறந்ததிலிருந்தே தன் பாட்டியுடன் ஒட்டிக்கொண்ட வேந்தன், இங்கும் அவருடனே இவ்வீட்டிற்கு வந்து விடுவான். பூவுபாட்டிக்கும் இவன் என்றால் கொள்ளை பிரியம்.


    எப்போதும் முகம் கொள்ளா புன்னகையுடன், இவரை காண வரும் வேந்தன், இப்போதெல்லாம் இங்கு வருவதையே தவிர்த்து வந்தான்.


      வாசலிலேயே வடிவுப்பாட்டியை இறக்கி விட்டு விட்டு, வேலை இருப்பதாக சொல்லிச் செல்பவன், கிளம்பும் நேரத்தில் சரியாக வந்து வடிவு பாட்டியை வீட்டிற்கு அழைத்துச் கொண்டு போவான்.


      வாழ்க்கை பாடத்தில் பல அனுபவத்தை கண்ட பூவுப்பாட்டிக்கு, வேந்தனது ஒதுக்கம் ஏன் என்று தெரியாமல் போகுமா?


  தனது பேத்தி நிரஞ்சனாவின் பார்வை மாற்றமும், உரிமை பேச்சுமே இதற்குக் காரணம் என்று அறிந்தவர், அவளிடமே இதைப் பற்றி கேட்க, அவள் நாகரீகம் இல்லாது நடு வீட்டிலேயே, கத்த ஆரம்பித்தால்,


  "நீ உன் வேலைய பாரு கிழவி. நான் கட்டிக்க போறவர நான் பார்த்தா, உனக்கு என்ன வலிக்குது? நான் பேசாம வேற எவ அவர்கிட்ட பேசுவா?"


        அவளுடைய அண்ணன் மாறன் அதற்கும் மேல்,


    "வயசான காலத்துல நீ எதுக்கு இவங்கள கண்காணிச்சிட்டு திரியிற? அதுதான் உன் சோட்டு கிழவி வருதில்ல, அது கூட ஒக்காந்து ஊர் கதைய பேச வேண்டியதுதானே, உனக்கு என்ன அங்க பார்வை? இதை எல்லாம் ஒரு விஷயமுன்னு வேற எடுத்துட்டு வந்து, நடு வீட்டுல பஞ்சாயத்து வச்சுக்கிட்டு இருக்க."

 

  அதற்கு மேல் என்ன பேச, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து ஒதுங்குவதே மேல் என்று, அண்ணன் தங்கையுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டார் .


    வடிவுப்பாட்டியை கோவிலிலேயே சந்திக்க ஆரம்பித்தார்.


  அன்று அதிகாலை வழக்கத்திற்கு மாறாக, சிறிது நேரத்திற்கு முன்பே எழுந்து விட்டார் பூவுப்பாட்டி.


  நேராக தொழுவத்திற்கு சென்றவர் சற்று தூரம் தள்ளி ஏதோ சத்தம் கேட்க, அங்கே எட்டிப் பார்த்தார்.


  மாறனும் நிரஞ்சனாவும் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே, கையில் ஒரு கிண்ணத்தை வைத்துக்கொண்டு, பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.


    "ஏன்ணே, நாம இங்க கொட்ட போற எண்ணெயில, வேற யாராவது வழுக்கி விழுந்துட்டா?"


    "இந்தப் பக்கம் யாரும் வர மாட்டாங்க ரஞ்சி, அந்த கெழவி மட்டும் தான் விடியும் முன்னவே பின்னாடி வந்திடும், அதனாலதான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்." 


        "இது சரிவரும்னு நினைக்கிறியாண்ணா?"


      "கண்டிப்பா, அந்த கெழவி இங்க வழுக்கி விழுந்தா, எப்படியும் அடிப்படும். ஏற்கனவே அது நோவில் தானே கிடக்கு.


    இதை காரணமா வெச்சே, இது சாகறதுக்குள்ள உன் கல்யாணத்தை நடத்தணும்னு சொல்லி, வேடந்தூர்காரங்க கிட்ட அடி போடலாம்."


    "சூப்பர்ண்ணே, அரசியல்ல சேர்ந்ததிலிருந்து, நீ நல்லாவே கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சுட்ட."


    "சரி ரஞ்சி நீ அங்க யாராவது வராங்களான்னு பாரு, நாம இதை இங்க ஊத்திட்டு, உள்ள போய் படுத்துக்குவோம்." 


      "கிழவியோட அலறல் சத்தம் கேட்டு தான், நாம ரூமை விட்டே வெளிய வரணும் புரிஞ்சுதா, அதுக்கு முன்னாடியே ஓடிவந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு காட்டிக் கொடுத்திடாத."


  அண்ணனும் தங்கையும் வந்த வேலையை முடித்துவிட்டு, கிளம்பி விட்டார்கள்.


    இவர்கள் பேசியதை கேட்ட பூவுப்பாட்டி, உறைந்து போய் நின்று விட்டார். ஏற்கனவே இவர்களைப் பற்றி தெரிந்தாலும், தன் சொந்த பாட்டியின் உயிரையே இவர்களின் சுயநலத்திற்காக பணயம் வைப்பார்கள் என்றுநினைத்துக் கூட பார்க்கவில்லை.


    பூவுபாட்டிக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாகவும் நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போலவும் இருந்தது.


      கண்களை சிமிட்டி தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றார் பூவுப்பாட்டி.


  எக்காரணம் கொண்டும் இந்த சுயநல பிசாசுகளை, தூய உள்ளங்கள் நிறைந்த அந்த குடும்பத்தினுள் நுழைய விடக்கூடாது.


    அது மட்டுமா ஊர் மக்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த, குலதேவியின் சொத்துக்கள் இந்த நயவஞ்சகர்களின் கைக்கு கிடைத்தால்? நினைத்துப் பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது.


  ஒரு முடிவோடு அவர்கள் கொட்டி சென்ற எண்ணெயின் மீது தன்முழு உடலும் படும்படி படுத்துக்கொண்டவர்.


    தன் அருகில் உள்ள பொருட்களை தட்டி விட்டபடி, பெருங்குரல் எடுத்து கத்த ஆரம்பித்தார். வீட்டில் உள்ளே இருந்து, காலடி சத்தங்கள் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்து, கண்களை  இறுக மூடிக்கொண்டர்.


  சத்தம் கேட்டு வந்து பார்த்த குடும்பத்தார், பூவுப்பாட்டியின் நிலைக்கண்டு அதிர்ந்து நின்றனர்.


  பெண்கள் அனைவரும் அவரை எழுப்ப முயற்சித்துவிட்டு, நீர் எடுக்க உள்ளே சென்றனர்.


    ஆண்கள் பூவுப்பாட்டியை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான வேலையில் ஈடுபட்டனர்.


  தன் அருகில் யாருமில்லை என்பதை உணர்ந்த பூவுப்பாட்டி, தன் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த இளைய பேரனிடம் சுருக்கமாக நடந்ததை கூறினார். 


    வேந்தனிடம் இங்கு நடந்ததை கூறுமாறு சொல்லிவிட்டு, யாரோ வரும் அரவம் கேட்கவே கண்களை மூடிக்கொண்டார்.


  கலங்கிய விழிகளுடன் நடந்தவைகளை கூறிய, தன் அத்தை மகன்களை பாசத்துடன் அணைத்துக் கொண்ட வேந்தனுக்கு, மாறனை பற்றி நினைக்கையில் அவனின் கோபம், எல்லையை கடந்தது.


    இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, நிதானத்திற்கு வந்தவன். உள்ளே நடக்க போகும் நாடகத்தை, தெரிந்தே எதிர்கொள்ள தயாரானான்.

No comments:

Post a Comment