அத்தியாயம் 18
"சார் இதுல எங்களோட ஹெல்ப் என்ன இருக்கு?"
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க. எங்களால முடிஞ்சா, கண்டிப்பா செய்யறோம்."
"அவங்க, அவங்களோட கம்பெனி கணக்குகளை எல்லாம் ஒரு டைம் ரீவைண்ட் பண்ணி பாக்கணும்னு சொல்றாங்க ம்மா.
அதுக்கு யாராச்சும் நம்பிக்கையான ஒர்க்கர்ஸ் கிடைப்பாங்களான்னு என்கிட்ட கேட்டு இருந்தாங்க.
நான் உங்க ரெண்டு பேரை தான் ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன். இது உங்களுக்கு கிடைச்ச ஒரு நல்ல சான்ஸ்.
அது ஒரு பெரிய கம்பெனி. வெளிநாட்டு கம்பெனியோட வியாபாரம் செய்றவங்க, இங்கேயே அவங்களோட கம்பெனிஸ் ரெண்டு மூணு இருக்கு."
"சார் இவ்வளவு பெரிய கம்பெனின்னு சொல்றீங்க, கண்டிப்பா அதுக்கு தனியா ஆடிட்டர்ஸ் வச்சிருப்பாங்களே?"
"இவ்வளவு நாளா அதோட ஓனரே பார்த்துட்டு வந்தாங்களாம். இவரோட வேலை பிசில அதுல நிறைய பெண்டிங் வச்சுட்டாராம்.
மத்தவங்க கிட்ட வெளியே கொடுத்தா, முதல்ல இருந்து பார்க்க ஆரம்பிக்கணும். ஏதாவது டவுட்ஸ்னா இடையில் இவரால போயிட்டு இருக்க முடியாது.
அந்த பெண்டிங் ஒர்க்ஸ் எல்லாம் முடிச்சு கொடுக்க, யாராவது கிடைப்பாங்களான்னு கேட்டாரு. நான் உங்களை சிபாரிசு பண்ணி இருக்கேன். மேக்ஸிமம் நீங்க அவங்க ஆபீஸ்ல இருந்து வேலை பார்க்கிற மாதிரி இருக்கும்.
கவலைப்படாதீங்க நம்ம ராகுலும் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிற்காக உங்க கூடவே இருப்பாரு. நீங்க அங்கேயே உங்களோட ஒர்க் எல்லாம் வச்சுக்கலாம்.
அப்பறோம், நான் என்னதான் உங்களை ரெகமெண்ட் பண்ணி இருந்தாலும், அவங்க உங்ககிட்ட சில கேள்விகள் கேட்டு திருப்தியா இருந்தா மட்டும் தான், வேலைக்கு எடுத்துக்கறதா சொன்னாங்க, இதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே."
"இதுல என்ன சார் இருக்கு எல்லா கம்பெனியிலும் இருக்கிறது தானே, ஸ்டாப்ஸ் புதுசா எடுக்கும்போது அவங்களோட திறமை என்னன்னு தெரிஞ்சா தானே, அவங்களுக்கான வேலையை கொடுக்க முடியும். ஆனா சார் அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாரே"
"உங்க அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் மதுமா. முதல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் சம்மதமான்னு சொல்லுங்க"
மதுவும் வினுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க
"சரி நீங்க வேணும்னா இன்னைக்கு வீட்ல போய், டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து நாளைக்கு உங்க பதிலை சொல்லுங்க. ஆனா உங்களுக்கான நல்ல வாய்ப்பு இது, தவற விட்டுறாதீங்க."
அவரிடம் தலையை தலையை ஆட்டிக் கொண்டு, வெளிவந்தனர் தோழிகள் இருவரும்.
"என்ன வினு பண்ணலாம்?"
"ஒருவேளை நாம வெளிய வேலை தேடிட்டு இருந்த விஷயம், நம்ம ஓனர்க்கு தெரிஞ்சிருச்சோ? அதான் அவரே நம்மள பிளாக் பண்ணி வேற ஆபீஸ்க்கு தள்ளி விட்டுட்டாரோ?"
"ஆமா அவருக்கு வேற வேலை இல்ல பாரு, உன்னையும் என்னையும் கண்காணிக்கிறது தான் வேலை. ஐயோ எங்க அப்பா கிட்ட போய் சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே தெரியலையே.
ஒருவேளை நீ வேலைக்கே போக வேண்டாம் சாமி, வீட்டிலேயே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருன்னா?
இதுதான் சாக்குன்னு என் ஜாதகத்தை கையில் தூக்கிடுவாங்களே, நானே என் அப்பா அம்மாகிட்ட கெஞ்சி, ஒரு வருஷம் டைம் வாங்கி வேலைக்கு வந்துட்டு இருக்கேன், அதுவும் போச்சா."
வாசுதேவன் சிவராமனுக்கு அழைத்து இது பற்றி பேசினார். அவர் சற்று தயங்கினாலும் ஏற்கனவே, புதிதாக தன் மகளின் திறமைக்கு கிடைத்த நல்ல வேலையை, வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.
சரி, இதற்காவது அனுப்பி வைப்போம் என்று, தன் நண்பன் மேல் உள்ள நம்பிக்கையில் இதற்கு சிவராமன் ஒத்துக் கொண்டார்.
அவர் கூறிய நிறுவனமும் தற்போது வளர்ந்து வரும், நற்பெயர் எடுத்த நிறுவனம்தான். தன் மகளின் திறமைக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரமாகவே இதை நினைத்தார்.
அதனாலேயே அவர் ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதற்குப் பின், அவர் மனம் ஒரு நிலையில் இல்லை.
மது பிறந்த அந்த கோவிலில் இருந்தார் சிவராமன். அந்த தெய்வத்தின் முன்பு கண்களை மூடி அமர்ந்து விட்டார். முற்பகல் நேரம் என்பதால் அவ்வளவாக மக்கள் கூட்டம் அங்கு இல்லைபோலும்.
அவரின் விழி மூடியிருந்தாலும், மனதில் வாதிட்டுக் கொண்டிருந்தார், எதிரில் சிலையாக அமர்ந்திருந்த மாகாளியம்மனோடு.
"தாயே காளியம்மா நீ சொன்ன ஒரு காரணத்துனாலே தான், என் பொண்ணோட படிப்பிலிருந்து இப்ப பார்க்கிற வேலை வரைக்கும் என்னோட கண்காணிப்பில் இருக்கிற மாதிரி பார்த்துகிட்டேன்.
இப்போ அவ திறமைக்கேற்ப வேலை கிடைக்கும் போது மறுக்கவும் முடியல, போன்னும் சொல்ல முடியல.
நான் சரின்னு சொல்லிட்டாலும் என் மனசு ஏனோ பதட்டமாவே இருக்கு. அதுதான் உங்களை தேடி வந்து இருக்கேன்.
பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு நாங்க ஆசைப்படறோம். நீ தான் அதுக்கு ஒரு நல்வழி காட்டணும் தாயே."
தன் கண்களை மூடி மனதில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிவராமன் கண்விழித்துப் பார்த்தபோது எதிரே அன்று மது பிறந்த போது கண்ட அதே வயதான பெண்மணி மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய பொட்டோடு புன்னகை மின்ன அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னப்பா மத்தவங்க குறைதீர்க்க பிறந்த மகராசிய பெத்துட்டு, இப்படி மருகி நிற்கலாமா?"
அவருக்கு பேச வாய் வரவில்லை. அந்த தாய் பேசுவதை மட்டும் பயபக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
"எந்த ஒரு விஷயமும் காரணம் இல்லாம நடப்பது இல்ல மகனே, இது அவள் சென்று சேர வேண்டிய பாதை தான். விதியை யாராலும் மாற்ற முடியாது நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றே நினைத்து கொள்.
கூடிய சீக்கிரமே உன் மகளின் திருமண செய்தி உன்னை வந்து எட்டும்.”
“செய்தி கிட்டுமா? அப்போ, பொண்ணோட திருமணத்த பார்க்குற கொடுப்பினை, அவளைப் பெத்த எங்களுக்கு இல்லையா?"
அந்த தாய் சிரிக்கும் கண்களில், கூர்மையுடன் அவரை நோக்கி,
"அந்த கொடுப்பினையை, உன்னை பெற்றவர்களுக்கு நீ கொடுத்தாயா?"
தன்னை யாரோ உலுக்கியதை போல இருக்க, கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தார்.
தன் மனைவி, அருகில் காபி கோப்பையுடன் இருக்கவே அப்போதுதான் புரிந்தது, அவருக்கு தான் கண்டது கனவு என்று.
இனி அந்த தாய் விட்ட வழி என்று மதுவின் வரவிற்காக காத்திருந்தார்.
மது வந்ததும் அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவர்
"மதுமா வாசு மதியம் எனக்கு கூப்பிட்டு இருந்தான்."
மதுவிற்கு என்ன சொல்லப் போறாரோ என்று மனதிற்குள் பயபந்து உருண்டு கொண்டிருந்தது.
"உனக்கு அந்த புது வேலைக்கு போக விருப்பமா?"
"உங்க இஷ்டம் தான் பா. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன் பா."
சிவராமனுக்கு மனது நெகிழ்ந்து போனது தனது மகளை நினைத்து,
"அப்பாக்கு சம்மதம் தாம்மா. உனக்கு பிடிச்சிருந்தா, நீ அங்க போய் வேலை செய்."
மதுவிற்கு இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை. தான் சற்றும் எதிர்ப்பாராத இந்த முடிவை, தன் தந்தை எடுப்பார் என்று அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.
No comments:
Post a Comment