அத்தியாயம் 17
மதுவும் வினுவும் வாசு புரமோட்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் என்னும் பதாகையை தாங்கிய கட்டிடத்திற்கு முன்பு, தம் ஸ்கூட்டியில் வந்து இறங்கினர். இதுதான் அவர்கள் பணிபுரியும் அலுவலகம்.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு தகுந்த முறையில் வீடு கட்டித் தருவதோடு, பேங்க் லோன் வேண்டுமென்றால் அதற்கான அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, குறிப்பிட்ட பேங்க்களில் இருந்து பைனான்ஸ் வாங்கிக் கொடுத்து, இஎம்ஐ ஆப்ஷனில் வீடு கட்டித் தரப்படும்.
அதற்காக சரிபார்க்கப்படும் அக்கவுண்ட் செக்ஷனில் தான் தோழிகள் இருவரும் பணி புரிகின்றனர்.
ஒரு சில சிறிய கடைகளில், வருடக் கடைசியில் ஏற்படும் ஆடிட்டிங் பிரச்சனைகளும், இவர்களிடம் வருவதுண்டு.
அதையும் இவர்கள் இருவரும் தான் சரி பார்த்துக் கொடுக்கின்றனர். இங்கு இவர்களோடு சேர்த்து இன்னும் நான்கு பேர், அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்.
வெளிவட்டாரத்தில் கமிஷன் அடிப்படையில், நிறைய பேர் வெவ்வேறு துறையில் வேலை செய்கிறார்கள்.
இங்கு வாடிக்கையாளர்களிடம் அக்ரீமெண்ட் போடப்பட்டு, வேலைக்கான முன்பணத்தை பெற்றுக்கொண்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.
ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு இவர்களின் வேலை பிடிக்காமல், வேலையை நிறுத்த சொல்லி விட்டு கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கேட்டால், நிறுவனத்தில் இருந்து கொடுக்கும் செக்குகள் அனைத்தும் பவுன்ஸ் ஆகி தான், திரும்ப வரும்.
அதையும் மீறி சிலர் அலுவலகம் தேடி வந்து கலர் கலர் வார்த்தைகளால் சண்டையிட்டால், வாசுதேவனிடமிருந்து வரும் ஒரே வார்த்தை,
"வேறொரு பார்ட்டியை, இங்க சேர்த்து விட்டுட்டு, நீ உன் பணத்தை வாங்கிக்கோ. அதைத் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்ல."
இங்கு தினம் தினம் தொலைபேசியிலும் நேரிலும் கேட்கும் கலர் கலர் பொன்மொழிகளாலேயே, தோழிகள் இருவரும் வெளியில் வேறு நல்ல வேலையாய் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
வாசுதேவன் மதுவின் அப்பாவான சிவராமனுக்கு நல்ல நண்பர். வேலை விஷயத்தில் எப்படியோ, ஆனால் பழக்கவழக்கத்தில் நேர்மையான மனிதர்.
அதனால்தான் தன் மகளின் பாதுகாப்பிற்கு ஒரு குறையும் இருக்காது என்று, இங்கு தன் மகளை வேலையில் சேர்த்துள்ளார்.
இவர்கள் அலுவலகத்தினுல் நுழையும் போதே, பணம் திரும்ப கிடைக்க பெறாத வாடிக்கையாளர் ஒருவர், சாபத்தையும் நிறைய கலர் கலர் வார்த்தைகளையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.
அத்தனையும் கேட்டுக் கொண்டு, அவரை தாண்டிக் தான் இவர்களுடைய இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
"காலையிலேயே நல்ல வார்த்தைங்களா...கேட்டாச்சு, இன்றைய நாள் அமோகமா இருக்கும் போ."
"ஆமா, ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு மது, அது எப்படி டி உங்க அப்பா இந்த மாதிரி ஒரு இடத்தில உன்னை வேலைக்கு சேர்த்து விட்டு இருக்காரு.
ஓனர் உங்க அப்பாவோட ஃப்ரெண்டுனா, இவர் செய்ற எல்லா போர்ஜரி வேலையும் உங்க அப்பாக்கு தெரிஞ்சிருக்குமே. அதையும் மீறி உங்க அப்பா எப்படி, இங்க உன்னை சேர்த்தார்?"
"என் அப்பாக்கு இவர் மட்டும் தெரிஞ்சவங்க இல்லை, நம்ம பில்டிங்க்கு அடுத்த பில்டிங்லா இருக்க டீக்கடை அண்ணாச்சியும், இரண்டு கடைக்கு அந்த பக்கம் இருக்க பழமுதிர் நிலைய ஓனரும்,நம்ம ஆபீஸ்க்கு எதிர்ல இருக்க பேக்கரி ஓனரும், அடுத்த தெருவுல தள்ளு வண்டியில பழம் விற்கிறவரும் தெரிஞ்சவங்க தான்.
வேலைக்கு சேர்ந்த மறுநாளே, எங்க அப்பா என்னை கூட்டிட்டு போய், இவங்க எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சு, என்னை பாத்துக்க சொல்லிட்டு தான் விட்டுட்டு போனார்."
"அப்போ, உன்ன சுத்தி உங்க அப்பா ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வெச்சிருக்கார்னு சொல்லு."
"தவறு மன்னா, தங்கள் கூற்றில் பிழை உள்ளது. ஒரு நல்ல பாதுகாப்பு வளையமா பார்த்து, என்னை பொருத்தி வச்சிருக்கார்ன்னு சொல்லலாம்."
"நான் உன்ன கூண்டுக்கிளின்னு சொல்றதுல தப்பே இல்ல. சரி முறைக்காதே...முறைக்காதே..."
அப்போது வாசுதேவன் அலுவலகத்திற்கு விஜயம் புரிந்து, நேராக அவருடைய அறைக்கு சென்றார்.
அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அதை ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.
"என்ன அதிசயமா இருக்கு. இன்னைக்கு இவர் சைட் விசிட்டிங் போற நாள் தானே? எப்பவும் இந்த மாதிரி, சைட் விசிட்டிங்கை விட்டுட்டு ஆபீஸ்க்கு வந்ததில்லையே."
"வினு நம்ம ஆபீஸ் கூகுளை கூப்பிட்டு விசாரி, ஏதாவது பிரச்சனையா, இல்ல புதுசா பெரிய வாத்தா ஏதாச்சும் இவர்கிட்ட மாட்டி இருக்கான்னு?"
இவர்கள் ஆபீஸ் கூகுள் என்று கூறுவது, இங்கு பணிபுரியும் ராகுலை தான், இவனுக்கு ஆபீஸின் உள்ளும் வெளியேவும் நடைபெறும் விஷயங்கள் அத்தனையும் அத்துப்படி.
எங்கு என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவன். அதனாலயே இவர்கள் வைத்த பெயர் ஆபீஸ் கூகுள்.
ராகுலின் குடும்பத்தார் அவர் அப்பாவின் காலத்திலேயே, வட இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக இங்கு புலம்பெயர்ந்தவர்கள்.
அவன் தந்தையின் இறப்பிற்கு பின், குடும்ப வருமானத்திற்காகவும், தம் அக்கா தங்கையின் திருமணதிற்காகவும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கிடைத்த வேலையில் சேர்ந்தான்.
சிறிது காலத்தில் வாசுதேவனிடம் வேலைக்கு சேர்ந்தவன்,இதன் நுணுக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் தெரிந்து கொண்டு, இந்த தொழிலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அலுவலகத்தில் உள்ள பெண்களை உடன்பிறப்பாக நினைப்பவன். அதனாலேயே இவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கருதுபவன்.இவனை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து இங்குள்ளோருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
"என்ன கூகுள் அண்ணே, அதிசயமா இருக்கு. உங்க குருஜி சைட் விசிட்ட விட்டுட்டு, ஆஃபீஸ் பக்கமா வந்து இருக்காரே, ஏதாச்சும் பிரச்சனையா?"
"பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லம்மா, ஒரு பெரிய பார்ட்டியோட ப்ராஜெக்ட் நம்மகிட்ட வந்திருக்கு. அதுதான் சார் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண இங்க வந்திருக்கார்."
வாசு தன் கேபினில் இருந்து இவர்கள் மூவரையும் அழைக்க, அங்கு சென்றனர்.
"மது, வினோதினி உங்க ரெண்டு பேத்துக்கும் உங்களுக்கு பிடிச்ச துறையில், உங்களை நீங்களே நிரூபிக்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு."
மதுவும் வினுவும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.
"ராகுல் உங்ககிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். ஒரு பெரிய கம்பெனியோட கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் பண்ற வாய்ப்பு, இப்போ நமக்கு கிடைச்சிருக்கு.
அது இனி அடுத்தடுத்து கண்டின்யூ ஆகிறது, உங்க ரெண்டு பேரு கையில் தான் இருக்கு."
No comments:
Post a Comment