Search This Blog

Followers

Powered By Blogger

Friday, May 30, 2025

மன்னவரே 19

 


             அத்தியாயம் 19


  அமைச்சர் பொன்னுரங்கத்தின் வீட்டில் தனக்கு முன் நிற்கும், தனது அடியாட்களிடம் கத்திக் கொண்டிருந்தார் அமைச்சர்.


      அவருக்கு சற்று தள்ளி யோசனையுடன் அமர்ந்திருந்தார் அமைச்சரின் குருஜி.


      "அறிவு கெட்டவனுங்களா, நீங்க எல்லாம் ஒரு வேலைக்கு கூட லாயக்கில்ல, உங்கள நம்பி இந்த வேலையை கொடுத்தேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்.


   அந்த போலீஸ்காரன் காட்டச்சுத்தி கேமரா மாட்டறவரைக்கும், நீங்க என்ன புடுங்கிட்டா இருந்தீங்க.


      எனக்கு இன்னும் ஒரு வாரத்துல பொருள் கைக்கு வந்தாகணும்.”


  "தலைவரே கேமரா மட்டும் இல்ல, ஊர் காவல் படைன்னு சொல்லி ஒரு பத்து இளவட்ட பசங்கள, காட்டச்சுத்தி காவலுக்கு விட்டு இருக்காங்க. இதெல்லாம் அந்த ஊர் தலைவரோட வேலையாம்."


  ஆம், சுந்தரமூர்த்தி அய்யாவிடம் ஊர் மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறி, ஒரு கம்ப்ளைன்ட்டை ஃபைல் பண்ண சொல்லியிருந்தார்கள் வேந்தனும் தீபனும்.


      அத்தோடு ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி, திருவிழா முடியும் வரைக்கும், ஊர் மக்களின் பாதுகாப்பு அவர்கள் பொறுப்பு என்று, ஊர் காவல் படையை உருவாக்கி இருந்தனர். 


      அதில் தைரியமான சிலரை தேர்ந்தெடுத்து காட்டை சுற்றி காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.


  "அந்த காட்டுக்குள்ள இருக்குறவங்களை கூட, இப்போ எப்படி வெளிய கூட்டிட்டு வர்ரதுன்னே தெரியல தலைவரே."


      "அவனுங்களையெல்லாம் அப்படியே சாக சொல்லு, இத்தனை நாளா ஒரு வேலையாச்சும் முடிச்சானுங்களா?"


    "பொறு ரங்கா, இந்தத் திருவிழா முடிவதற்குள், அந்த பொருள் உன் கைக்கு வந்து சேரும், இதற்கு நான் பொறுப்பு.


      நாம கண்காணிக்கிறது இருக்கட்டும், முதல்ல நம்மள யாராவது கண்காணிக்கிறாங்களான்னு உன் ஆளுங்கள பார்க்க சொல்லு. நாம எங்கேயோ சறுக்குறோம், அது எந்த புள்ளினு முதல்ல கண்டுபிடிக்க சொல்லு."


  "ஆகட்டும் குருஜி அப்படியே பண்றேன்.


    டேய் குருஜி சொன்னது கேட்டீங்கள்ள, எவனாது சந்தேகப்படுற மாதிரி உங்களை சுத்தி இருந்தானுங்கன்னா, அவனுங்க டீடெயில்ஸை கலெக்ட் பண்ணிட்டு சொல்லுங்க."


  அப்போது அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அதை திரையில் கண்டு விட்டு குருஜீயிடம் சென்று கொடுத்தார்.


  "சொல்லு விஜயா, எப்படி இருக்கிறாய் நலம்தானே?"


    "குருஜி, என் பொண்ணு அந்த பள்ளத்துக்குள்ள கஷ்டப்பட்டு இருக்கும்போது, நான் எப்படி நலமா இருக்க முடியும்.


  இன்னும் எவ்வளவு நாள் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை, இதுக்கு என்ன தான் தீர்வு?


      அதோடு, அடுத்த வாரம் குருந்த மரத்துக்கு அடியில் இருந்து மண் எடுக்க போறாங்க, அந்த காட்டுப் பிச்சிக்கு சிலை செய்ய, அவளுக்கு சக்தி கிடைத்துவிட்டால் பிறகு என்ன நடக்கும் என்று, நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா குருஜி."


    அவர் கூறிய செய்தியில் திடுக்கிட்ட குருஜி, சிறிது யோசனைக்கு பின், மர்ம புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.


    "விஜயா இதில் நமக்கான வாய்ப்பும் ஒளிந்துள்ளதை கவனிக்க தவறினாயா?"


    "குருஜி?"


    "அங்கிருந்து மண் எடுத்து விட்டால், அவளுக்கு தற்போதுள்ள கொஞ்ச சக்தியும் போய் விடும் அல்லவா?


    திரும்பவும் அங்கு சிலை பிரதிஷ்டை செய்யும் வரை, அங்கு எந்த சக்தியும் காவலுக்கு இருக்காது அல்லவா?"


  உன் மகள் உயிர்த்தெழ போகும் நாள், வெகு தூரத்தில் இல்லை விஜயா.


    வேந்தனுக்கு முற்பிறவி ஞாபகம் வருவதற்கு முன், அவன் உன் மகளுடன் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்.


  இல்லையேல், அவன் அவனின் காதல் மனைவியை தேடி, சென்றடைந்து விடுவான்.


  அந்தக் காட்டு ராணி, ஊரினுள் நுழைந்தால் வரலாறு திரும்பும். வேந்தனின் ராணியாக இரு மடங்கு சக்தியுடன், அனைவரையும் தவிடு பொடி ஆக்கி விடுவாள்."


    "அவளை இந்த ஊரினுள் நுழைய விடமாட்டேன் குருஜி, அதற்காகவே எங்கும் சொல்லாமல் இந்த ஊரிலேயே தவம் கிடக்கிறேன். ஒருவேளை அவள் திரும்பி விட்டால், அவளின் சாவு என் கைகளால் தான். "


  வினு திறந்த வாயை மூடாமல் ஆச்சரியமாக மதுவை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.


  "நீ நெஜமா தான் சொல்றியா, உங்க அப்பா நீ வேற ஆஃபீஸ்க்கு போக ஒத்திகிட்டாரா?"


  "நீ வேற வினு என்னாலையும் தான் இதை நம்பவே முடியல. எங்க அண்ணன் இதை கேட்டு உறைஞ்சு போயே நின்னுட்டான். அதைவிடு, உன் வீட்டில் என்ன சொன்னாங்க."


  "எங்க வீட்டில் எல்லாரும் செம ஹேப்பி. அது நல்லா ஃபேமஸான கம்பெனியாம். நானும் வெளியே விசாரிச்சேன், நல்லா விதமா தான் சொல்றாங்க.


  அவங்க கம்பெனில இங்கயே ஜாயின் பண்ணிக்கறீங்களான்னு கேட்டால், கண்ணை மூடிட்டு சரின்னு  சொல்லச் சொல்லி அப்பா சொல்றார்."


    தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசுதேவன் ராகுலுடன் அலுவலகத்தில் நுழைந்தார். இவர்களையும் அழைத்துக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தவர்,


  "என்ன முடிவு பண்ணிருக்கீங்க ரெண்டு பேரும்?"


  "எங்களுக்கு சம்மதம் சார்."


    "ஓகே, அப்ப நீங்க ரெண்டு பேரும், ராகுல் கூட அந்த ஆபீஸ் போங்க. நான் நேத்தே சைட்டுக்கு போகல, அங்க போயிட்டு நேரா அங்க வந்துடறேன்.


  உங்க ரெண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. நம்ம கம்பெனிக்கு நல்ல பேரை வாங்கி கொடுங்கனும் ரெண்டு பேரும்."


  இவர்கள் அனைவரும் கிளம்பி சென்று, சுந்தரம் குரூப் என்ற பதாகையை தாங்கிய கட்டிடத்தினால் நுழைந்தனர்.


  தோழிகள் இருவரையும் வரவேற்ப்பறையில் அமர வைத்துவிட்டு, ராகுல் ரிசப்ஷனில் தங்களது வரவை பதிவு செய்ய சென்றான்.


  வரவேற்பறையே ஒரு கலை பொருட்களின் கூடம் போன்று இருந்தது.


      விதவிதமான வடிவங்களில், நுணுக்கங்களுடன் கூடிய அழகிய வேலைப்பாடுகள், மனதை கொள்ளை கொண்டன.


    "மது ரொம்ப அழகா இருக்கில்ல, உனக்கு தெரியுமா? இவங்க தென்னை நார் வச்சு கலைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வச்சிருக்காங்க. அவங்களோட பெஸ்ட் கலெக்ஷன்ஸ் தான் இதெல்லாம். 


  அதோட கயிறு, தென்னை நார், நார்கட்டித்துகளோடு இந்த கலைப் பொருட்களையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்க.


  சுந்தரம் இவரோட தாத்தா பேராம். அதே பேர் தான் எல்லா கம்பெனிஸுக்கும் வச்சிருக்கார். இதோட எம்டி யுவேந்திர பாண்டியன். ஆள் சிங்கிள் தான், எல்லா ஒர்க்குக்கும் இவர் தான் மேற்பார்வையாம். இந்த ஐடியாஸ் எல்லாமே இவரோடதுதானாம். இதுதான் அவங்களோட மெயின் ஆபீஸ்.


      இவங்களுக்கு தனியா கருப்பட்டி தொழிற்சாலையும் இருக்காம்."


    மது வினுவை மேலிருந்து கீழாக பார்த்து,


    " நீ எதுக்கு இப்போ ரியல் எஸ்டேட் விளம்பரத்துல வர லேண்ட் விக்க வந்த ஆக்டர் மாதிரி, இந்த ஆபீஸ்க்கு விளம்பரம் பண்ணிகிட்டு இருக்க."


      "அது..., நல்ல கம்பெனி நாம இங்க வேலைக்கு இருந்தா, நமக்கு தானே பெருமை. "


  "நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் மன்னா, நாம் வந்திருப்பது இன்டர்வியூக்காக. இதில் தேர்வு பெற்றால் தான் நமக்கு இங்கு வேலை.


  அதுவும் நாம், நம் ஆபீசின் சார்பில் தான் வேலை செய்ய வந்திருக்கிறோம். புரிந்ததா என் மங்குனி மன்னா."


"என்னடி மது?"


  "என்ன நொன்னடி, இவ்வளவு விஷயம் சொன்னியே, அதிலிருந்தே உனக்கு தெரிய வேணாம்.


      இவ்வளவு பெரிய கம்பெனிஸ்ல ஆடிட்டிங் இல்லாம இருக்குமா? அதுவும் வெளிநாட்டு லெவல்லனா கண்டிப்பா, அவங்க வெச்சிருப்பாங்க.


எனக்கு தெரிஞ்சு நம்மளை இவங்க கூப்பிட்டதற்க்கு இரண்டே காரணம் தான், ஒன்னு அவங்களோட ஆடிட்டர்ஸ் மேல சந்தேகம் வந்து கணக்குகளை உறுதி பண்ணிக்கவா இருக்கலாம்.


  இல்லைனா கணக்குகளை மாத்தி எழுதி, பங்குதாரருக்கு தெரியாம, கள்ளக்கணக்கு எழுதவா இருக்கலாம்."


    எம்டி அறையில் இருந்து, இவர்களை கட்டிடத்தினுள் நுழைந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே, நீர் அருந்தி கொண்டிருந்த வேந்தனுக்கு  மது பேசியதை கேட்டு புரை ஏறியது,


  "அடி என் அத்த மகளே, நீ இவ்வளவு விவரமா இருந்தா, நான் எப்படி என் திட்டத்தை செயல்படுத்துறது."

No comments:

Post a Comment