Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, May 25, 2025

மன்னவரே 14

 


              அத்தியாயம் 14


  முள்ளு காட்டிற்கு சற்று தள்ளி இருந்த மரத்தின் மறைவான இடத்தில்,   கீழே அமர்ந்து கொண்டு வேந்தன் தீபன் வெற்றி மற்றும் மூர்த்தி ஆகிய நால்வரும் காட்டை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.


    "வெற்றி நீ சொல்றது நிஜமா? கண்டிப்பா அவங்களை பார்த்தயா?"


      "நிஜமாதான் சொல்றேன்  வேந்தா,இன்னைக்கு காலைல மாறன் வாட்ட சாட்டமான மூணு ஆசாமிங்களை  கூட்டிட்டு கோவிலுக்கு வந்தான். அவங்க மூணு பேரையும் பாக்குறதுக்கு ஏனோ சந்தேகமாவே இருந்தது.


    கொற்றவைக் கோயிலுக்கு போற பாதையை சரி செய்வதற்காக கூட்டிட்டு வந்ததா மாறன் சொன்னான்.


    ஊருக்கு வெளியே காட்டை ஒட்டி இருக்கிற ஒரு வீட்ல, ஊர் சார்பாக இவங்களை தங்க வெச்சு, நாளைக்கு காலைல இருந்து வேலையை ஆரம்பிக்க சொன்னாங்க ஊர் பெரியவங்க.


    அவங்களை பார்க்கும்போது எனக்கு டவுட்டா இருந்துச்சு. அதனால அங்கே மறைவா இருந்து கண்காணிச்சிட்டு இருந்தேன்.


    சரியா நைட்டு ஒரு ஏழு மணி இருக்கும், அவனுங்க மூணு பேரும் முகத்த மூடிக்கிட்டு இந்த காட்டுக்கு பின்னாடி போனாங்க.


    நானும் பின்னாடியே  அவங்களுக்கு சந்தேகம் வராது போல ஒளிஞ்சு ஒளிஞ்சு போனேன்.


      ஆனா எப்படி சட்டுனு அவங்க மூணு பேரும் மறைஞ்சு போனானுங்கன்னு தெரியல, அங்க இருந்து வெளியே வந்த மாதிரியும் எனக்கு தெரியல, அதனால தான் உனக்கு உடனே போன் பண்ணி கூப்பிட்டேன்."


      வெற்றி வேந்தனுக்கு போன் செய்யும்போது தீபமும் மூர்த்தியும் உடன் இருந்தனர். அதனால் அவர்களும் அவனுடன் புறப்பட்டு வந்தனர்.


      "ஏன்டா உங்க இன்வஸ்டிகேஸன பகல்ல வச்சுக்க மாட்டிங்களா? ஒருத்தன் மொகரையும் தெரியல, குத்து மதிப்பா தான் ஒரு சைடு பார்த்து பேசிட்டு இருக்கேன். இந்த இருட்டுல காலுக்கு அடியில பாம்பு போனா கூட தெரியாதுடா."


   "அய்யய்யே இந்த பெருச எதுக்குடா வேந்தா கூட்டிட்டு வந்தே? வயசான காலத்துல அமைதியா இல்லாம எப்ப பாரு ஒரே புலம்பல்."


        "எதே, அடேய் வெட்டிப் பயலே, இத நீ மட்டும் எம் பொண்டாட்டி முன்னாடி சொல்லி இருந்த."


          "சொல்லியிருந்தா தங்கச்சியும் சேர்ந்து ஆமாண்ணேன்னு சொல்லி இருக்கோம்."


  வேந்தன் ஏதோ நினைவு வந்தவனாக தனது மொபைலை எடுத்து, அதில் அன்று தீபனை கண்காணித்த பைக் ஆசாமியின் புகைப்படத்தை வெற்றியிடம் காட்டினான்.


    "அந்த மூணு பேருல இந்த ஆள் இருந்தானான்னு பாரு?"


"ஆமாம் டா, அதுல இவனும் ஒருத்தந்தான். கூட இருந்த மத்த ரெண்டு பேரும் இவன் சொன்னதை தான் கேட்டு நடந்துக்கிட்டாங்க. ஆமாம் வேந்தா இவன் போட்டோ உன்கிட்ட எப்படி வந்தது?"


தீபன் கண்காணிக்கப்பட்ட அந்த நிகழ்வை வெற்றியிடம் கூறத் தொடங்கினான் வேந்தன்.


    வேந்தன் அன்று அந்த பைக் ஆசாமியையும் அவன் பைக் நம்பரையும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். அதை வைத்து அவனின் பின்புலத்தை அறிந்து கொண்டான்.

   

        அமைச்சரின் கையாலாக இருந்து கொண்டு, எதற்காக ஒரு போலீஸ் அதிகாரியை பின் தொடர்கிறான் என்று குழப்பத்தில் இருந்தான். 


        அன்று மாரியப்பனோடு இருந்தவன் இவன் தானோ என்ற சந்தேகத்தை முனியண்ணணிடம் காட்டி, இவன்தான் என்பதையும் தெளிவு படுத்திக் கொண்டான். 


      ஆனால் இதெல்லாம் எதற்காக, அப்படி இந்த காட்டிற்குள் என்னதான் ரகசியம் பொதிந்து இருக்கின்றது என்பது மட்டும் விளங்கவில்லை.


      இப்போது வந்த இம்மூவரும் கூட அமைச்சரின் ஆட்களோ? அவர்கள் திருவிழாவை நிறுத்த வந்தவர்களோ? என்று வினாவும் மனதில் எழ தவறவில்லை. இதே எண்ணங்கள் தான் தீபனின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.


  திடீரென்று பூமிக்கடியில் இருந்து சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவது போல தோன்றியது 


  "அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? சூரியன் எப்போ இந்த சைடுல இருந்து  உதிக்க ஆரம்பிச்சது?" 


    "அடேய் கூமுட்ட மூர்த்தி, நல்லா பாருடா அது தீபந்த வெளிச்சம்." 


    "அதான் வெளிச்சம் கம்மியா இருக்குது. என்னடா இது நான் நம்ம ஊர்ல தான் இருக்கேனா? பதுங்க குழி  எல்லாம் வச்சிருக்கானுங்க?"


  "எனக்கு தெரிஞ்சு இது சுரங்கப்பாதையா தான் இருக்கணும். இது நேரா காட்டுக்குள்ள போகும்னு நினைக்கிறேன்."


"இப்பவே இவனுங்கள கையும் களவுமா புடிச்சு, ஊர் முன்னாடி நிறுத்தணும் வேந்தா."


  "இல்ல நாம அவசரப்பட கூடாது. நமக்கு முதல்ல அவங்களோட திட்டம் என்னன்னு முழுசா தெரியணும்.


  அதுவரைக்கும் நாம பொறுமையா தான் இருந்தாகணும்."


  அந்த பைக் ஆசாமிக்கு முன் ஒருவன் தீப்பந்தம் பிடிக்க அவனுக்கு பின்னே வரும் நால்வரையும் திட்டிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.


  "இன்னும் எவ்வளவு நாள் தாண்டா அந்த சிலையை தேடுவீங்க? தலைவர் அங்க கத்திக்கிட்டு இருக்காரு பார்ட்டிக்கு வேற சரக்கு அனுப்பியாகணும்.


    உங்க எல்லார்கிட்டயும் அந்த சிலையோட போட்டோ இருக்கில்ல. அந்தக் கொற்றவை கோயில சுத்தி தான் ஏதோ ஒரு இடத்துல அந்த சிலை இருக்கறதா குறிப்பில் இருக்கு.


  இந்த ஊர்காரனுங்க கோவிலுக்கு வர்றதுக்குள்ள, நாம அதை எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும். அவனுங்க  வரப்போக இருந்தானுங்கன்னா, நம்மளால இதுக்கப்புறம் அந்த சிலையை கண்டுபிடிக்கவே முடியாம போயிடும்."


      "அண்ணே நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். எங்க சுத்தினாலும் ஒரே இடத்துலயே வந்து நிக்கிற மாதிரி இருக்கு. இதுக்கும் நாங்க எல்லோரும் பிரிஞ்சு வேற வேற திசையில போய்  தான் தேடுறோம்.


      அதோட அந்த மாரியப்பனுக்கு நடந்ததை நேர்ல பார்த்ததிலிருந்து, பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்க..."


      "அறிவு கெட்டவனுங்களா உங்களை யாரு அந்த மோகினி பள்ளத்து வழியா போக சொன்னது. குருஜி தான் சொல்லி இருக்காரு இல்ல. அம்மாவாசை நைட்டு அந்த பள்ளத்தை நெருங்க கூடாதுன்னு, அப்புறம் எதுக்குடா போனீங்க."


  "மாரிதான் இதுதான் பக்கமுன்னு கூட்டிட்டு போனான். அன்னைக்கு நடந்தது இன்னும் எங்க கண்ணுக்குள்ளேயே இருக்குங்கண்ணே.


     நாங்க பள்ளத்த நெருங்கும்போதே கருப்பா ஒரு உருவம் பள்ளத்துல இருந்து வெளியே வந்துச்சு. அது நாக்கு ஒரு அடிக்கு மேல தொங்கிட்டு இருந்ததுண்ணே, நாங்க எல்லாரும் ஓட ஆரம்பிச்சிட்டோம் ஆனா மாரி மட்டும் அது கிட்ட மாட்டிகிட்டான். மாரிக்கு என்ன நடந்ததுன்னு அடுத்த நாள் காலையில தான் எங்களுக்கெல்லாம் தெரியும்."


        "இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல இனியாவது ஜாக்கிரதையா இருந்து தொலைங்க."


        "அண்ணே பசங்க பயப்படுறாங்கண்ணே."


  பொலேர் என்று ஒரு அரை விழுந்தது பேசியவனுக்கு,


        "கட்டு கட்டா பணம் வாங்கும் போது மட்டும் இனிச்சுதோ, வாய மூடிக்கிட்டு சொல்ற வேலைய பாக்கணும். அவனுங்க உசுருக்கும் சேர்த்து தான் பணத்தை வாங்குறானுங்க.


  புரிஞ்சுதா? என்னடா மண்டைய மண்டைய  ஆட்டறே?"


    "புரிஞ்சதுண்ணே."


    "இப்ப தற்காலிகமா இந்த பாதையை எதையாச்சும் போட்டு மறைச்சு விடுங்க. நாளைக்கு கொற்றவை கோயிலுக்கு பாதை அமைக்கிற வேலை ஆரம்பிக்கிறதால ஊர்காரங்க கண்டிப்பா காட்ட சுத்தி வருவானுங்க. எவன் கண்ணுலையும் இது பட்டுற கூடாது.


      கூடிய சீக்கிரம் ஊர்ல எவனையாச்சும் புடிச்சு கழுத்தறுத்து அந்த பக்கம் போட்டு விடுவோம், அதுக்கப்புறம் எவனும் அங்கிட்டு வரமாட்டான்."


    கேட்டுக் கொண்டிருந்த நம்மவர்கள் நால்வருக்கும் இங்கு நடந்த கொலைகளுக்கான காரணம் புரிய தொடங்கியது.

No comments:

Post a Comment