அத்தியாயம் 15
"காட்டுக்குள்ள யாரு கண்ணுலையும் படாம எப்படியாவது நுழைஞ்சாகனும் ."
"எது? டேய் வேந்தா, இவன் என்ன சொல்றான்னு பாருடா?"
"தீபன் சொல்றது சரிதான், அவங்க பேசிட்டு இருந்தத கேட்ட தானே, இப்ப விட்டுட்டா நம்மால, இந்த வழியா போக முடியாது. இனியும் இந்த ஊர்ல, ஒரு உயிர் கூட அவனுங்களாள அநியாயமா போகக்கூடாது.
நானும் தீபனும் அந்த சுரங்க பாதை வழியா உள்ள போறோம்.
வெற்றி நீ அந்த பாதைக்கு வெளியே நில்லு, உள்ள ஏதாச்சும் பிரச்சனைனா உனக்கு சிக்னல் கொடுக்கிறோம், மூர்த்தி நீ அவனுங்க திரும்ப வந்தா உள்ள வராமல் இருக்க, எதையாச்சும் பண்ணி அவனுங்களை திசை திருப்பி விடு."
"எது, ஏன்டா என்னை மட்டும் அந்த கொலைகார பயலுகளோட கோர்த்து விடுறே? இந்த வெட்டிப் பயல அனுப்ப வேண்டியது தானே?"
"உன் அளவுக்கு அவனால சமாளிக்க முடியாது மாம்சு. நீதான் பேசியே சமாளிப்பதுல பட்டம் வாங்கினவன் ஆச்சே, பேசுறதுக்கு டைம் இல்ல, அவனுங்க திரும்ப வர்றதுக்குள்ள நாங்க நுழைஞ்சாகணும். சரி சரி நாங்க கிளம்புறோம்."
"டேய் டேய்ய்ய் போயிட்டான், எனக்குன்னே தனியா உக்காந்து ஸ்கெட்ச் போடுவானுங்க போல.
சும்மாவா சொல்றாங்க, பேய்க்கு வாக்கப்பட்டா, அர்த்த ராத்திரியில அலைஞ்சு தானே ஆகணும். இவனுங்க கூட சேர்ந்ததுக்கு எம்புத்திய..."
"மச்சான் ஏதாவது ஹெல்ப் வேணுமா? என் செருப்பு வேணா தரவா?"
"மரியாதையா ஓடிரு, அவனுங்க சொன்னது போல அந்தக் குழிக்கிட்ட போய் நில்லு போ."
"நண்பன் ஆச்சேன்னு உதவி செய்ய நினைச்சேன், வேண்டாட்டி போ. என்ஜாய் தி மொமெண்ட் மச்சான். டாடா பைய் பைய்."
"கொழுப்பு தாண்டா உனக்கு. அய்யய்யோ, தனியா விட்டுட்டு போயிட்டானுங்களே, சமாளிப்போம் என்ன பண்ணிட போறானுங்க."
தீபனும் வேந்தனும் சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக்கொண்டே அந்தப் பாதையை நெருங்கினர்.
சமதளமாக இருந்த பாதை, ஒரு சருக்கு பாதை போன்று உள்ளே இறங்கியது.
அதன் வழியாக சென்றபோது, ஒருவர் மட்டுமே குனிந்து செல்லுமாறு பாதை உருவாக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் இருவரும் செல்பேசியிலுள்ள டார்ச்சின் உதவியுடன், அடிமேல் அடிவைத்து எச்சரிக்கையாக அப்பாதை வழியே முன்னேறி சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும், அப்பாதையின் முடிவில் மண்ணால் ஆன படிக்கட்டு போன்ற திட்டுக்களை கொண்டிருந்தது.
அதில் ஏறி மேலே சென்றால், காட்டின் உட்பகுதியை காண முடிந்தது.
அங்கு நெடுந்துயர்ந்த மரங்கள் வானை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருக்க, அவ்விடம் முழுவதும் மை இருளில் மூழ்கியிருந்தது.
பாதையின் முடிவில் இருந்து சற்று தூரம் தள்ளி, பேச்சு குரல்களும் சிறு வெளிச்சமும் தென்பட்டது.
காட்டினை நெருங்கும் போதே வேந்தனுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு மனதை ஆட்கொண்டது.
அது எதனால் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மூச்சினை இழுத்து விட்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தீபனுடன் சென்று கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திலேயே கண்களுக்கு இருட்டு பழகிவிட்டதால் அந்த வெளிச்சப் புள்ளியை நோக்கி இருவரும் நகர்ந்தனர்.
"தீபா நாம முதல்ல அந்த குறிப்பையும், அவன் சொன்ன அந்த சிலையோட படத்தையும் கைப்பற்றி ஆகணும்.
என்ன நடந்தாலும், நாம அது இல்லாம இந்த காட்டை விட்டு வெளியேற கூடாது."
"ம்ம்ம், நீ சொல்றதும் சரிதான்."
அவர்கள் கண்ட அந்த வெளிச்சமானது கொற்றவை தேவி கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள கூடாரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.
இருவரும் ஒரு மரத்திற்கு பின் நின்று கொண்டு, அங்குள்ளவர்களை கண்காணிக்க தொடங்கினர்.
எரிந்து கொண்டிருந்த நெருப்பினை சுற்றி, ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர்.
கூடாரத்திலிருந்து வந்த ஒருவன், காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுக்க, அதை உண்டு கொண்டே எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"இந்த மாரி இருந்திருந்தா ஊருக்குள்ள இருந்து, நமக்காக நேரா நேரத்துக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பான்.
அவன் இல்லாதனால, இந்த காட்டுக்குள்ள கிடைக்கிறதை வெச்சு தான், நம்ம பசியை போக்கிக்க வேண்டியிருக்கு."
"இந்த ஊருக்குள்ள எவனாவது, மாரிய போல உதவிக்கு கிடைக்கிறானுங்களானு பாருங்கடா."
"ஓய் என்னடா மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மாதிரி பேசிகிட்டு இருக்கே.
நாம இங்கே என்ன டூருக்கா வந்திருக்கோம்? கூடிய சீக்கிரம் இந்த வேலையை முடிச்சு கொடுத்துட்டு, எப்படியாவது இங்கிருந்து கிளம்பியாகனும். இல்லைனா மாரியோட கதி தான் நம்மளுக்கும்."
"அட ஏன்டா அதை ஞாபகப்படுத்துற, ஒழுங்கா சிலையை தேடிட்டு இருந்த நம்மள அந்த குருஜி, குருந்த மரத்தை அழிச்சா தான் சிலை இருக்கிற இடம் தெரியும்னு, அங்கே அனுப்பினாரு. நடந்ததை பார்த்த இல்ல?
இந்த சிலை நமக்கு கிடைச்சிருந்தா இப்படி அங்க நாம போய், மரண பயத்தை கண்ணுல பாத்துட்டு வந்திருப்போமா?"
"என்னடா நீயும் பாஸ் மாதிரியே புரியாம பேசிட்டு இருக்க."
"நாம என்ன முயற்சி செய்யாமையா இருக்கோம், இந்தக் காடு எந்த பக்கம் போனாலும் ஒரே மாதிரி இருக்கு.
இதுக்கு இடையில, இந்த காட்டு மிருகங்கள் வேற, அடிக்கடி வந்து பயமுறுத்திக்கிட்டு கெடக்கு. மாரிக்கு நடந்ததை நேர்ல பார்த்ததுல இருந்து தூக்கமே இல்ல. இப்போ உருப்படியா ஒரு வாய் சோத்துக்கும் வழியில்ல."
"அட ஏண்டா புலம்பிக்கிட்டே இருக்க, அது தான் நம்ம பாஸ் சாப்பாடு கொடுத்து விடறேன்னு சொன்னார் இல்ல."
நண்பர்கள் தமக்குள் கண்காட்டி விட்டு மரத்திற்கு பின்னே பதுங்கிப் பதுங்கி, ஒருவர் பின் ஒருவராக கூடாரத்தை நோக்கி சென்றனர்.
கூடாரத்தினுள்ளே மது பாட்டில்கள் துணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று குப்பைகளாக அங்கங்கே சிதறிக் கிடக்க, அவைகளுக்கு நடுவே இருந்த பெட்டியை நோக்கி சென்றனர்.
திறந்திருந்த அந்தப் பெட்டியில் இருந்து, இரண்டு சுருள் காகிதங்களை எடுத்துக்கொண்டு திரும்ப முனையும் போது, கூடாரத்தின் வாயிலின் அருகே பேச்சு குரல் கேட்டது.
சட்டென்று தீபனை இழுத்துக் கொண்டு குப்பையோடு குப்பையாக தரையில் படுத்துக் கொண்டான் வேந்தன்.
எதுவோ பேச முனைந்த தீபனது வாயை, தம் கைகளால் மூடிக்கொண்டே இருண்ட பகுதியை நோக்கி சென்றான்.
ஒருவன் உள்ளே வந்து, மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான், இவர்கள் தவழ்ந்து கொண்டே வாயிலை நோக்கி சென்றனர்.
"இந்தக் கண்றாவிக் குப்பைகளுக்குள்ள என்னைய ஏன்டா இழுத்துவிட்ட, நாத்தம் தாங்க முடியல. என் மூக்கு வேற கீழ எதுலயோ இடிச்சுகிச்சு"
"ம்ம்ம், உசுரு முக்கியமா மூக்கு முக்கியமா அப்போ மூடிகிட்டு வா மூதேவி பின்னாடி."
"இதெல்லாம் போலீஸ் ட்ரைனிங்ல செஞ்சது, இத்தனை வருஷம் கழிச்சு, இப்பதான்டா யூஸ் ஆகுது."
பேசிக்கொண்டே இவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து விட்டனர்.
எழுந்து நிற்க முயலும் போது மூவர் கூடாரத்தை நோக்கி நடந்து வருவதை கண்டனர்.
இங்கு மறைந்து கொள்வதற்கும் இடமில்லை. எப்படியும் அவர்கள் கண்ணில் சிக்கிக் கொள்வோம். எதைக் செய்து தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே தடதடவென்று பூமி அதிர ஏதோ சத்தம் கேட்டது.
No comments:
Post a Comment