அத்தியாயம் 13
மது தன் கண் மட்டும் வெளியே தெரியுமாறு முழுவதுமாக துப்பட்டாவால் முக்காடிட்டிருந்தால்.
கீழே உணவருந்திக் கொண்டிருந்த கனியமுதன், இவளைப் பார்த்துக் கொண்டே தன் அன்னையிடம் கேட்டான்.
"ஏம்மா எனக்கு தெரியாம இவளை பக்கத்து வீட்டு சலீம் மாமாக்கு தத்துக்கான கொடுத்துட்டியா?"
"என்னடா உளர்ற?"
"உளர்றனா? அங்க பாரு, உன் பொண்ணு மதினா பேகமாவே மாறி நிற்கறா."
"வெயிலுக்காக புள்ள இப்படி போட்டு இருக்காடா."
"இவ்வளவு நாளா இல்லாம இப்ப என்ன திடீர்னு? நம்ப முடியலையே."
“அய்யய்யோ இவன் இன்னும் கிளம்பலையா, வினு அவன் ஏதாவது உன்கிட்ட வாயை புடுங்கறதுக்கு பேச்சு கொடுப்பான், எதையும் உளறி தொலைச்சுராத. என்னடி மண்டைய மண்டைய ஆட்டுற ஏதாவது சொதப்புன கொன்னுடுவேன் உன்ன.”
"வினும்மா என்னடா இது? ஆபீஸ்ல ஏதாவது ஹாலோவன் பங்க்ஷனா? இல்ல, பேன்சி டிரஸ் காம்பெடிஷன்னா? இப்படி பேய் வேஷம் போட்டு சுத்துறீங்க ரெண்டு பேரும்?
"அப்படியெல்லாம் எதுவும் இல்லண்ணா இது இது வெயிலுக்காக. இப்பல்லாம் ஸ்கின் ரொம்ப எரியுதுன்ணே, அதான் ரெண்டு நாளா இப்படி துப்பட்டா போட்டிருக்கோம்."
"அப்படியாம்மா ரெண்டு நாளா சூரிய பகவான் கருமேகத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்காரு, இந்த குளிர்ல உங்களுக்கு ஸ்கின் எரியறது போலவா வெயில் அடிக்குது?"
அவள் திரு திருவென முழிக்க மது தான் மறுமொழி கூறினால்,
"சில எருமத் தோலுக்கெல்லாம் அது உரைக்காதுன்னு சொல்லுடீ வினு."
"ஏன், உன்னோட உயிரை எடுக்கிற தோழி என்கிட்ட நேரடியா சொல்ல மாட்டாங்களாமா?"
"சொன்ன வாக்கை காப்பாத்தாதவன் கிட்ட எனக்கு பேச்சு இல்லைன்னு சொல்லுடி, அம்மா நா வரேன்."
நின்றால் எங்கே இன்னும் கேள்வி கேட்டு குடைவானோ என்று, வினுவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினால் மது.
"ஏய் மது மது நில்லு, இந்த பொண்ணு என்னடா கூப்பிட கூப்பிட கேட்காம இப்படி போறா.
ஒருவேளை நேத்து பேசிட்டு இருந்தாளே ஏதோ புது வேலையை பத்தி, அதுக்கு நீ அப்பா கிட்ட அவளுக்காக சப்போர்ட் பண்ணலைன்னு கோவிச்சுட்டு போறாளோ?"
"அவ கேக்காம போகல ம்மா, நாம ஏதாச்சும் கொஸ்டின் கேட்டுருவமோன்னுட்டு எஸ்கேப்பாகி ஓடுறா. ப்ச்சு இருந்தாலும் உன் வீட்டுக்காரர் ரொம்ப ஸ்ட்ரீட் அப்பாவா இருக்காரு ம்மா
அவ படிச்சு படிப்புக்கு வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போனா, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா? அதோட அவளுக்கும் கௌரவமான ஒரு வேலையா இருக்கும்
ஆனா அப்பா தான் வேண்டவே வேண்டாம்னு மதுவை இந்த வேலைல சேர்த்துவிட்டுட்டார்.
இப்ப அவளாவேதன் திறமையை பயன்படுத்தி ஒரு புது வேலையை, அதுவும் நல்ல கம்பெனியா தேடிப்பிடிச்சு செலக்ட் ஆயிருக்கா.
அந்த கம்பெனிக்கு மதுவ வேலைக்கு அனுப்புனா என்னம்மா தப்பு? அவ கேட்கிறதும் நியாயம் தானே."
"நானும் எவ்வளவோ அப்பா கிட்ட இது விஷயமா பேசிட்டேன் ஒத்துக்கவே மாட்டேங்கறார் டா.
காரணம் இல்லாம உங்க அப்பா இப்படி சொல்லுவாரா அமுதா."
"அதுதான் என்னன்னு கேட்கிறேன், ம்ம்ம் உடனே அமைதியாயிடுவீங்களே என்னமோ பண்ணுங்க."
அவன் கிளம்பி சென்றதும் லட்சுமியம்மா தனது நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்
மது அவர் வயிற்றில் நிறை மாதமாக இருந்தபோது, கனியமுதன் சிறுவன்.
தனது சொந்த ஊரை காண ஆசை கொண்ட லட்சுமி, தம் கணவரை வற்புறுத்தி தன் மகனையும் கூட்டிக் கொண்டு, தனது சொந்த ஊருக்கு வாடகை காரில் கிளம்பினார்.
திடீரென்று பாதி வழியில் சொன்ன தேதிக்கு முன்னாதாகவே பிரசவ வலி கண்டது.
பாதி வழியில் ஒரு கோயிலின் அருகே அவர்கள் சென்ற காரும் பழுதாகி நின்றது.
அந்த கோயிலில் நின்றிருந்த ஒரு வயதான பெண்மணி லட்சுமியை உள்ளே அழைத்து வருமாறு கூறினார்.
சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட, தன் மனைவி மற்றும் மகனுடன் கோவிலின் உள்ளே சென்றார்.
பார்ப்பதற்கு தெய்வ கடாட்சமாக இருந்த அந்த வயதான பெண்மணி தான் லட்சுமிக்கு பிரசவம் பார்த்தார்.
மது பிறக்கும்போது லட்சுமி அரை மயக்க நிலையில் இருந்தார்.
அப்போது சிவராமன் அந்த வயதான பெண்மணியுடன் ஏதோ பேசி கொண்டு இருந்தார். ஒரு சில வார்த்தைகள் தான் அவரால் கேட்க முடிந்தது.
"நீ ஏதாவது எனக்கு செய்யணும்னு ஆசைப்பட்டா எனக்கு ஒரு வாக்கு கொடு தம்பி.
எக்காரணம் கொண்டும் இந்த குழந்தையோட ஜாதகத்தை வெளியே யாருக்கும் காட்டக்கூடாது. அதோட இப்போதைக்கு நீ இருக்க ஊரை விட்டு வெளியே எங்கேயும் போக வேண்டாம், அது இந்த குழந்தையோட உயிருக்கு ஆபத்தா முடியும்."
அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவராமன்
"எதுக்காக இப்படி சொல்றீங்கம்மா."
"உலகத்தை காக்கும் கடவுளே ஆனாலும் கிரகணத்தின் போது கோயில் கதவை மூடி தான் ஆகணும்.
சாதாரண மனுசங்க நாம, தீய சக்தியோட கை ஓங்கி இருக்கும் போது நம்மள பாதுகாத்துக்க விலகி இருப்பதுல தப்பில்ல.
ஆனா ஒரு கட்டத்துக்கு மேல உன் பொண்ணு உன் கைய விட்டு போறத நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது. அவ பிறந்த லட்சியத்தை முடிக்க அதை நோக்கி போயே தீருவா."
லட்சுமி தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தபோது அப்பெண்மணி லட்சுமியை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு காற்றிலே மறைந்து போனார்.
அவர் சொன்ன வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் தனக்குள் உழன்று கொண்டிருந்த சிவராமன் தன்னிலைக்கு வந்து பார்த்தபோது அவர் அங்கே இல்லை
வேலப்பன் ஐயாவின் வீடு, பொருட்கள் எல்லாம் அறையெங்கும் சிதறி கிடக்க தன்னை சூழ்ந்து நின்ற உறவுகளிடம் கத்திக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.
"நீங்க எல்லாரும் சொன்னது என்ன இப்ப செஞ்சிருக்கறது என்ன? என் கல்யாணத்தை பத்தி ஒருத்தருக்கும் இந்த வீட்டில அக்கறை இல்ல."
"தாத்தா நீங்க என்ன சொன்னீங்க? இந்த திருவிழால நம்ம சீரை காரணமா வச்சு என் கல்யாணத்தை உறுதி செய்கிறதா சொன்னீங்களா இல்லையா?
இப்போ கொற்றவை கோவிலிலிருந்து சீர் போகுதுன்னு சொல்றாங்க. அப்போ என் கதி? எனக்கு தெரியாது அத்தானோட என் கல்யாணம் இந்த வருசம் முடிஞ்சே ஆகணும்."
வீட்டில் உள்ள ஒருவராலும் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை.
வண்டியிலிருந்து இறங்கிய மாறன், வீட்டினில் இருந்து வரும் குரலைக் கேட்டு தங்கையின் அறை நோக்கி சென்றான்.
அங்கிருந்தவர்களை வெளியே செல்ல சொல்லி விட்டு, தன் தங்கையின் அருகே அமர்ந்தான்.
"ரஞ்சி என்னைக்கிருந்தாலும் வேந்தன் உனக்கு தான். என்னை நம்பு.
உன்னை தவிர வேற யாரையும் அவன் கல்யாணம் செய்ய முடியாது. மறந்துட்டியா நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற வழக்கத்த.
வடிவு பாட்டி கையில இருக்க அந்த பெட்டி, கண்டிப்பா உன் கைக்கு தான் வந்து சேரும். அதை விட்டா அவங்க குடும்பத்துக்கும் வேற வழி இல்ல."
ஆம் சுந்தரமூர்த்தி தாத்தாவின் குடும்பத்தில் பரம்பரையாக ஒரு பெட்டியை பாதுகாத்து வருகின்றனர். தமது மன்னவரின் வீரவாளும் தேவியின் ஆபரணமும் அதில் உள்ளதாக கூறப்படுகிறது.
குலமகள் அவளின் கைகளில் இதை சேர்ப்பிக்க வழி வழியாக பாதுகாத்து வருகின்றனர். இதுவரை ஒருவரும் அதில் உள்ள பொருட்களை கண்டது இல்லை.
தமது தேவி அவளின் வருகைக்காகவே அவைகள் அந்த பெட்டிக்குள் சிறைப்பட்டுள்ளன.
தேவி அவளின் பொற்கரம் பட்டால் சிறை தானாகவே திறந்து விடும்.
அப்பெட்டியை வேலப்பன் ஐயாவின் குடும்பத்திலிருந்து தமது வீட்டிற்கு மருமகளாக வருபவரிடம் ஒப்படைக்கின்றனர்.
திருமணத்திற்கு முந்தைய நிச்சயத்தின்போது அப்பெட்டியானது மணமகள் கையில் கொடுக்கப்படும்.
அன்றிலிருந்து இப்பெட்டி அவர்களின் பாதுகாப்பிற்குரிய பொக்கிஷமாக மாறுகிறது.
அவர்களைத் தவிர வேறு யாராலும் அதை நெருங்க இயலாது முயன்றால் அதன் பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்
அக்காலத்தில் இதன் மதிப்பை உணர்ந்து கவர்ந்து செல்ல முயன்ற பலர் இம்மண்ணுலகை விட்டு பிரிந்த கதைகளும் பல உண்டு.
No comments:
Post a Comment