Search This Blog

Followers

Powered By Blogger

Friday, May 23, 2025

மன்னவரே 12


 

           அத்தியாயம் 12


      சுந்தரமூர்த்தி தாத்தாவின் மறுப்பில் மனதில் கோபம் மூண்டாலும், அதை முகத்தினில் காட்டாமல் சிரித்துக் கொண்டே மாறன் மறுமொழி கூறினான்.


   "சரிதாங்கய்யா ஒரு கட்சிக்காரனா இல்லாம மேலூர்காரனா கொற்றவை தேவி கோயிலுக்கு போற ஊர்க்காரங்களுக்கு, உதவி செய்யவாவது எங்களுக்கு அனுமதி கொடுப்பீங்களா?"


    அவன் பேசிய தொனியிலேயே புரிந்தது, அவன் மனதின் கோபம். இதற்கு மேல் மறுப்பு கூற முடியாமல் சுந்தரமூர்த்தி தாத்தா சரி என்று தலையாட்டினார்.


தனது பிரதிபின்பமாக வளர்ந்து நிற்கும் பேரனை பார்த்து வேலப்பன் ஐயா கவலை கொண்டார் .


  அவரும் மாறனை போலவே இளம் வயதில் எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டையும் கவனிக்காமல் கட்சி அரசியல் என்று சுற்றி வந்தவர் தான். 


  பூவாத்தா தனது மூன்று மகன்களையும் வயது வந்த பெண்ணான நாத்தனாரையும் வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த போராட, அவர்களுக்கு துணையாக நின்றவர் தான் பூவாத்தாவின் அண்ணன் மருதுசாமி.

  

    வேலப்பன் ஒரு நாளும் தன் மைத்துனரை மதித்து நடந்து கொண்டது இல்லை. 


  அவர்தான் தன் குடும்பம் செயல்பட காரணமாக இருக்கிறார் என்று நினைத்துப் பார்த்ததும் இல்லை.


      வேலப்பனின் செயல்பாடுகளைக் கண்டு சுந்தரமூர்த்தியின் குடும்பம், அவன் தங்கையை பெண் எடுக்க தயங்கியது.


      மருதுசாமி தான் வடிவு தன் தங்கையை போன்றவள் என்றும் அவள்  குணநலன்களை எடுத்துக் கூறியும், சுந்தரமூர்த்தியின் குடும்பத்தில் பேசி இத்திருமணத்தை முடித்து வைத்தார்.


    மருதுசாமியின் மனைவி பிரசவத்திலேயே இறந்துவிட, அவர்  மகளை பூவாத்தா தான் கவனித்துக் கொண்டார்.


    பூவாத்தா தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசை கொண்டார்.


  இதை தன் அண்ணனிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். 


  ஒரு விபத்தில் மருதுசாமி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சேர்க்கப்பட்டார். 


    அவர் உயிர் பிரியும் நிலையில், தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து கலங்கினார்.


    தன் இரண்டாவது மகனுடன் மருத்துவமனைக்கு அண்ணனை காண வந்திருந்த பூவாத்தா, அழுது கொண்டு இருந்த அண்ணன் மகளின் கையை தன் மகனோடு சேர்த்து வைத்து, கண்ணீரோடு வாக்கு கொடுத்தார்.

   

"அண்ணே என்னைக்கு இருந்தாலும் எம்மவனுக்கு இவ தான்ணே பொண்டாட்டி, இவ என் மருமக இல்லண்ணே மகளப்போல பார்த்துப்பேன். இது சாமியா கும்படற அந்த குலதேவி மேல சத்தியம்."


  இதனைக் கேட்ட பிறகே அந்த உயிர், நிம்மதியாக தனது இறுதி யாத்திரையை தொடங்கியது.


    பூவாத்தா தனது அண்ணன் மகளை, தனது பாதுகாப்பிலேயே நன்கு வளர்த்து வந்தார்.


அவளுக்கு திருமண வயது வந்த போது வேலப்பனிடம் இந்த திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க, அவரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.


      அவர் தன் மகன்களுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய விரும்பினார். தன் மைத்துனர் செய்த உதவிகளை நினைக்க மறந்தார்.


    தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி தன் மகன்களுக்கு வெளி இடத்தில் பெண் தேடினார்.

   

    ஆனால் அவரது இரண்டாவது புதல்வன் அவர் பேச்சையும் மீறி தன் மாமன் மகளை கரம் பிடித்தார்.


  இதனால் ஆத்திரம் கொண்ட வேலப்பன், தம் இரண்டாம் புதல்வனை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார். 


    இதனால் மனமுடைந்த அவர் மனைவி பூவாத்தா, அன்று முதல் அவரிடம் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டார்.


  முதலில் நீ பேசாவிட்டால் எனக்கு என்ன என்று இறுமாப்பில் இருந்த வேலப்பன், தனது வயதான காலத்தில்தான் தன் துணையின் அருமையை உணர்ந்தார்.


    தனது தவறுகளும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தன் மனைவி தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட மாட்டாளா என்று ஏங்கினார்.


  தன் இரண்டாவது மகனையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை


    பூவாத்தா தனது மகன்கள் ஒருநாளும் அவர்களின் தந்தையின் வழியில் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.


  எனவே சற்று கண்டிப்புடனும் நற்பண்புகளுடனுமே அவர்களை வளர்த்து ஆளாக்கினார்.


    சுந்தரமூர்த்தி தன் மகள்களை இக்காரணத்திற்காகவே, அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.  


  ஏனோ மாறனை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வேலப்பன் ஐயாவின் குணத்தை ஒத்து இருப்பதாலோ என்னவோ?


    மதுவின் அறையில் அவள் கட்டிலில் துணி குவியல்களுக்கு நடுவே, கன்னத்தில் கை கொடுத்து மதுவின் அட்டகாசங்களை தாங்க முடியாமல், அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் வினு.


    மது ஒவ்வொரு துப்பட்டாவாக எடுத்து தன் தலை மீது முக்காடு போல போடுவதும், பிறகு அது சரியில்லை என்று கட்டிலின் மீது வீசிவிட்டு அடுத்ததை எடுப்பதுமாகவே இருந்தாள். 


  ஒரு கட்டத்தில் அவளின் அக்கப்போர் தாங்காமல் வினு பொங்கி விட்டாள். 


  "அடியே அதுதான் ஹெல்மெட் போட்டு தானே வண்டி ஓட்டுறோம்."


  "அப்புறம் எதுக்கு துப்பட்டாவால முகத்தை கவர் பண்ணிட்டு அதுக்கு மேல ஹெல்மெட் போட சொல்ற?"


      "நீ எல்லாம் என்னத்த தான் படிச்சியோ, வெயிலில் இருந்து நம்ம முகத்தை பாதுகாக்க தான் இந்த துப்பட்டாவ முக்காடு மாதிரி போடச் சொல்றேன்."


    "வெயிலில இருந்து பாதுகாத்துக்கவா இல்ல, வெளி ஆளுங்க யாரும் நம்ம முகத்தை அடையாளம் கண்டுபிடிச்சிடக் கூடாதுங்கறதுக்காகவா?"


  "இவ்வளவு பயம் இருக்கவ எதுக்குடி அவர் கார் மேல கல்லை தூக்கி போட்ட?"


"எது பயமா? யாருக்கு பயம்? இதுக்கு பேரு முன் ஜாக்கிரதைடி செல்லம்."


"ஓஹோ அப்புறம் எதுக்கு நல்லா இருந்த வண்டிய மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு, ரெண்டு பேர் வீட்லயும் பைக் ரிப்பேர்னு பொய் சொல்லி அடுத்த நாள் பஸ்ஸில் போனோம்."


    "சரி அத விடு, இப்போ பைக்ல போகும்போது ஹெல்மெட் போதுமே நீ எதுக்கு முகத்தை மறைச்சிகிட்டு முகமூடி கொள்ளைக்காரி மாதிரி வெளியே சுத்துற?"


    "யோசிக்கிறேன்னு சொல்லி இல்லாத மூளைய ரொம்ப கசக்கற போலயே வினு குட்டி. அந்த மல குரங்கு என்ன பேச்சு பேசுறான்? எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அப்பாவ திட்டுவான்? அதனால தா நா அப்படி செஞ்சேன்."


    இவள் தான் முதலில் பேசவே ஆரம்பித்தது என்பதை வசதியாக மறந்துவிட்டாள்.


  "ஹம்ம்ம், ஆமா மது நம்ம இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுனோமே, அங்கிருந்து கூட ஆர்டர் வந்து இருந்துச்சே, அத பத்தி வீட்ல பேசுனியா?"


  "ப்ச்சு, எங்க அப்பா வேற வேலைக்கு போறதா இருந்தா நீ வீட்டிலேயே இருந்துக்கம்மான்னு சொல்லிட்டாரு.


  என் கூட பிறந்த தடிமாட்ட அண்ணன்னு சொல்லி ஐஸ் எல்லாம் வச்சு எனக்காக அப்பாகிட்ட பேச சொன்னேன்.


      அந்த எருமை மாடு அப்பா கிட்ட இதுக்காக ஒரு வார்த்தை கூட பேசலயே.


    ஆனா அப்பா உன் நல்லதுக்காக தான் பாப்பா சொல்லுவாருன்னு அவர் முன்னாடியே ஒரு பெர்ஃபாமன்ஸ வேற போட்டுட்டான்."


  "இது தெரிஞ்ச விஷயம் தானே, உங்க அப்பா தான் உன்ன கூண்டுக்கிளி மாதிரி தானே வளர்க்கறாரு.

   

    சரி சரி முறைக்காத, இந்த துப்பட்டா அவதாரம் எத்தனை நாளைக்கு? இத போட்டுகிட்டு எத்தனை நாளைக்குடி சுத்துறது?"


    "ஒரு இரண்டு நாள் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ செல்லம். அதுக்குள்ள கண்டிப்பா அவன் நம்மள மறந்திடுவான்."


    மிஸ் மதுரயாழினி உங்க கணிப்பு ரொம்பபப தப்பு. வேந்தன் ஆல்ரெடி உங்களுக்கு  ஸ்கெட்சு போட்டுட்டான். அத என்னன்னு பாக்க நாங்களும் வெயிட் பண்றோம்.

No comments:

Post a Comment