அத்தியாயம் 11
அமைச்சர் பொன்னுரங்கத்திடம் தொலைபேசியில் உரையாடியது மாறன் தான்.
மாறன் அமைச்சரை சந்திக்க தன் சகாக்களுடன் மாலை மரியாதையோடு சென்றிருந்தான்.
நேரே சென்று பணிவுடன் அமைச்சரின் கால்களில் விழுந்து வணங்கி, மாலை அணிவித்தான்.
அவனை வரவேற்று உபசரித்த அமைச்சர் சில பல விசாரிப்புகளுக்கு பிறகு, நேரடியாக அவனிடம் விஷயத்திற்கு வந்தார்.
"என்ன மாறா உன் ஊருல ஏதோ கோயில் திருவிழான்னு கேள்விப்பட்டேன்?"
"ஆமா தலைவரே நாச்சியம்மன் கோவில் திருவிழா, சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் அங்க தான் இருக்கும். நம்ம சைடுல இது பெரிய திருவிழா தான்."
"சரி, நம்ம கட்சி சார்பா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க."
மாறன் குழப்பத்தோடு அவரை பார்த்து,
"புரியலயே தலைவரே?"
"என்னப்பா நீ, இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வரப்போகுது, எம்எல்ஏ போஸ்ட் வேணும்னு கேக்குற, ஆனா மக்களை எப்படி கவர் பண்ணனும்னு தெரியலையே உனக்கு"
"என்ன சொல்ல வர்றீங்க தலைவரே."
"கோவில் திருவிழாக்கு நம்ம கட்சி சார்பாக பெருசா ஏதாவது உதவி செய்யணும்.
ஏன்னா உங்க ஊர்ல தான் நம்ம கட்சிக்கு ஓட்டு கம்மியா விழுகுது. அதை சரி செய்யணும்னா இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணும்."
இப்போதும் மாறன் பதில் ஏதும் கூறாமல் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு தன் பக்த கோடிகளுடன் பிரசன்னமானார் ஸ்ரீ ஸ்ரீ ஜகஷ்டக ஸ்படிகலிங்க சாமியார் என்னும் அமைச்சரின் குருஜி.
குருஜியாகபட்டவர் தூய வெண்ணிற ஆடையில் நெற்றியில் சந்தன பொட்டிட்டு மொட்டை தலையுடன் பூமாலைதனை தோள்களில் தாங்கி,ஒரு கையில் கமண்டலமும் மறுக்கையில் ஜெபமாலையும் வைத்திருந்தார்.
குருஜியை கண்டதும் அமைச்சர் எழுந்து நின்று கைகட்டி பயபக்தியுடன் அவரை வணங்கி நின்றார்.
மாறனும் இவர் அமைச்சரின் மரியாதைக்குரியவர் என்பதை புரிந்து கொண்டு அவரை வணங்கி நின்றான்.
தன் கூர்மையான கண்களால் மாறனை அளவிட்டவாரோ, புன்னகை சிந்திய படி ஆசனத்தில் வந்தமர்ந்தார் குருஜி
"குருஜி தம்பி பேரு மாறன். வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, நம்ம கட்சி சார்பில் நிறுத்தலாமான்னு ஒரு யோசனை. அது பத்தி பேச தான் தம்பிய கூப்பிட்டு இருந்தேன்."
"யோசனை என்ன ரங்கா? அவன் முகத்திலேயே தெரிகிறதே, அவன் ஒரு வெற்றி திருமகன் என்று.
உறுதிப்படுத்திக் கொள் உன் முடிவை. ஜெயமே அது நிச்சயம்."
சுவாமிஜியின் வார்த்தைகள் மாறனுக்கு பண குவியலுக்குள் விழுந்து எழுந்தது போல இருந்தது.
நேராக சென்று குருஜியின் காலடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்தான் மாறன்.
"சுவாமி நீங்கதான் என் தெய்வம். உங்க ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்."
அவன் சுவாமிஜியின் காலில் விழுந்த நேரம், குருஜியும் அமைச்சரும் ஒரு மர்ம புன்னகையுடன் கண்களில் சைகை செய்து கொண்டனர்.
"எழுந்திரு மகனே, எனது நல்லாசி உனக்கு என்றும் உண்டு."
"நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் மாறா குருஜியோட வாயால நல்ல வாக்கு வாங்கி இருக்க."
"எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் தலைவரே, நீங்க என்னை கூப்பிட்டு விட்டதால தான், இவ்ளோ பெரிய மகான நா சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது."
"யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது கிட்டயே தீரும்.
விதி பயனை யாராலும் மாற்ற முடியாது. உனக்கானது உன்னையே வந்து சேரும் மகனே."
"மாறா என்ன பொருத்தவரைக்கும் குருஜி பேச்சுக்கு மறுவார்த்தையே இல்லை.
அதனால வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, உன்னையவே மேலிடத்தில் சிபாரிசு பண்றேன்.
நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் மாறா.
உனக்கு உதவி செய்றதுக்காக நம்பிக்கையான நம்ம கட்சி ஆளுங்க அஞ்சு ஆறு பேரை, அங்க அனுப்பி வைக்கிறேன். ம்ம் இப்ப நீ கெளம்பு."
"ரொம்ப நன்றிங்க தலைவரே."
அவன் மீண்டும் ஒரு முறை அமைச்சரின் காலிலும் குருஜியின் காலிலும் விழுந்து வணங்கி விட்டு சென்றான்.
"குருஜி நான்தான் சொன்னேன்ல, இந்த முட்டாப் பய அடிதடிக்கு தான் லாய்க்குன்னு."
"ரங்கா நீ கேள்விப்பட்டதில்லையா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று, இவன் நமக்கு நிச்சயம் தேவைப்படுவான்.
நமது திட்டத்துக்கு சிந்தித்து செயல்படும் புத்திசாலி தேவையில்லை, சொல்வதை செய்து முடிக்கும் முரட்டு முட்டாள் தான் தேவை."
மாறன் நாச்சியம்மன் கோவில் பிரகாரத்தில் நுழைந்த போது, அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் கோயிலில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையில், வேடந்தூர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தான். பின்ன வேடந்தூர்ல வாக்காளர் எண்ணிக்கை ஜாஸ்தியாச்சே.
அங்கிருந்தவர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு தான் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.
எதிர்ப்பு குரல் தெரிவித்த ஒரு சிலரும், மாறனின் ஆதரவிற்கு பிறகு வாயை திறக்கவில்லை.
அவனின் கட்டப்பஞ்சாயத்து தான் ஊரறிந்த விஷயமாயிற்றே.
"ஐயா கொற்றவை தேவி கோவில்ல இருந்து சீர் கொண்டு வர்றது முதல்ல நாம கடைப்பிடிச்சிட்டு இருந்த வழக்கம் தானே.
ஏதோ இப்ப இடையில சில காரணத்தால பழக்கம் மாறிடுச்சு.
ஆத்தாவே இப்ப திரும்ப அந்த நடைமுறையை கேட்கறா, அப்ப நம்மளும் மாறி தானே ஆகணும்.
இதுல என்ன உதவி வேணும்னாலும் தயங்காம எங்க கிட்ட கேளுங்க, இல்ல ஏதாச்சும் செய்யணும்னாலும் நாங்க ரெடி தான்."
சுந்தரமூர்த்தி ஐயா மாறனை பார்த்து நாசுக்காக பேச ஆரம்பித்தார்.
"ரொம்ப சந்தோஷம்பா. நீங்க உதவி செய்றேன்னு சொன்ன அந்த ஒரு வார்த்தையே எங்களுக்கு போதும்.
இது ஜாதி, மதம், கட்சின்னு பாகுபாடில்லாம ஊரே சேர்ந்து கொண்டாடுற திருவிழா. கண்டிப்பா உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு எப்பவும் வேணும். உதவி தேவைப்படும்போது கண்டிப்பா கூப்பிடுறோம்."
கூட்டத்திலிருந்து தள்ளி வந்து வேந்தனுக்கு தொலைபேசியில் அழைத்தான் வெற்றிச்செல்வன் என்னும் வெற்றி.
வெற்றி, வேந்தன் மற்றும் தீபனுடன் பள்ளியில் படித்த அவர்களின் தோழன் ஆவான்.
தன் மண்ணின் மீது கொண்ட பிடிப்பினால், அக்ரி படித்து இயற்கை விவசாயம் செய்யும், வளர்ந்து வரும் ஒரு இளம் விவசாயி.
இங்கு கோயிலில் நடந்தவற்றையும், மாறனின் வரவையும் அவன் கூறிய அனைத்தையும் வேந்தனிடம் தெரிவித்தான்.
"சரி வெற்றி, நீ அங்க போய் கவனி. ஏதாச்சும் ஒன்னுன்னா எனக்கு உடனே கூப்பிடு."
"சரி வேந்தா நான் பார்த்துக்கிறேன்."
வேந்தன் தீபனுக்கு தொலைபேசியில் அழைத்தான்.
"தீபா நாம நெனச்சபடி எலி எலிப்பொறிய நோக்கி வந்துகிட்டு இருக்கு, கூடிய சீக்கிரமே பொறியில சிக்கிடும்."
"அதுக்குத்தானே வேந்தா நாம காத்திருந்தோம்,அதை ஒரு கை பார்த்திடுவோம்."
இவனுங்க பேசிக்கிறத பார்த்தா ஏற்கனவே இது பத்தி தெரியும் போலையே…
No comments:
Post a Comment