Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, May 21, 2025

மன்னவரே 10

 


           அத்தியாயம் 10
   

       அமைச்சர் பொன்னுரங்கத்தின் வீடு, அரசியல்வாதியின் வீடு என்பதற்கு சான்றாக கரை வேட்டிகளும் சில காக்கிச்சட்டைகளும் வலம் வந்து கொண்டிருந்தது.


        கேட்டில் இருந்து பார்க்கும் போதே ஒரு குட்டி வெள்ளை மாளிகை போன்று, தோற்றத்தைக் கொண்டிருந்தது.


    வீடு முழுவதும் வெள்ளை மார்பில் கற்களால் இழைக்கப்பட்டிருந்தது.


    இது பல ரத்தக் கறைகளை மறைப்பதற்காகவே இப்படி போடப்பட்டதோ என்னவோ!

    நடு வீட்டில் சிரித்த முகத்தோடு சாந்த சொரூபமாக கைகளை கூப்பியபடி இருந்த, அமைச்சரின் புகைப்படம் நம்மை வரவேற்கின்றது.


  படிக்கட்டுகள் ஏறி மேல் பகுதிக்கு சென்று பார்த்தால், அமைச்சர் யாரோ இருவரை கலர் கலர் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் விகாரமான கோப முகத்தோடு,


  "ஏண்டா அறிவு கெட்டவனுங்களா உங்கள என்ன புடுங்கறதுக்காக அந்த ஊர்க்கு அனுப்பி வச்சேன்."


  "காட்டுக்கு பின்னாடி வழி அமைக்கிறதுக்கே பல மாசம் ஆகிப் போச்சு.


      அங்க பூஜை செஞ்சு மந்திர கட்டு போட்டு இருக்கோம் தெரியும்ல? இவனுங்க உள்ள போய் பார்த்தானுங்கன்னா கதையே  கெட்டிடும்.


      கண்டிப்பா இந்த விஷயம் குருஜி காதுக்கு போயிருக்கும். இது விஷயமா நான் அவர்கிட்ட பேசி தான் முடிவு எடுக்கணும்.


    ப்ச்சு ,இன்னும் நம்ம வேலையே அங்க ஆரம்பிக்கல, அதுக்குள்ள ஊர்காரனுங்க கொற்றவை கோவிலுக்கு போக போறதா சொல்லிட்டு இருக்க?


    ஏற்கனவே அந்த வெளிநாட்டுக்காரனுங்க வேற, எப்ப சரக்கு கைக்கு வரும்னு கேட்டுகிட்டே இருக்கானுங்க, இதுல இந்த பிரச்சனை வேறயா?


  ஊர்காரனுங்க ஒருத்தனோட நிழல் கூட அந்த காட்டுப் பக்கம் போகக் கூடாது.


  என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ அதெல்லாம்  எனக்கு தெரியாது. ஆனா, ஊர்காரனுங்க ஒருத்தனோட கால் கூட அந்த காட்டுக்குள்ள படக்கூடாது."


  "தலைவரே உங்களுக்கே தெரியும் யாரும் அந்த காட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு, ஊர்க்காரங்க சில பேர் சோலிய முடிச்சு அந்த பள்ளத்து கிட்ட போட்டு வெச்சோம்.


அதனால எவனும் காட்டுக்குள்ள வரவே பயப்பட்டான்.


  இப்படி திடீர்னு கோவில் மூலமா பிரச்சனை வரும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல தலைவரே."


    "எனக்கு அதெல்லாம் தெரியாது எவன வெட்டுவியோ எவனை குத்துவியோ, இல்ல நீயே போய் சாவையோ, ஒருத்தனும் அந்த காட்டுப் பக்கம் போக கூடாது. அந்த கோயில் பக்கமும் தான்.”


  அவன் தலையை ஆட்டிவிட்டு நகர,


      “டேய் ஒரு  நிமிஷம் இரு, இப்ப காட்டுக்குள்ள இருக்க கோவிலுக்கு போக கூடாதுன்னு பிரச்சனை பண்ணா, ஏன்னு ஒரு கேள்வி வரும்.


    அந்த ஊர்காரனுங்க இந்த விசயத்தில கண்டிப்பா சும்மா இருக்க மாட்டானுங்க.


  இதை வேற வழியா தான் போய் முடிக்கணும்.


  நம்ம கட்சியில் இருந்து அந்த ஊர் கோவிலுக்கு உதவி செய்ற மாதிரி பேசி, கடைசி நேரத்துல காட்டுக்குள்ள போக முடியாதபடி பண்ணிடுவோம்.


  அதுக்கு நம்ம ஆள் ஒருத்த அங்க  இருக்கணும்.ம்ம்ம்…. இதுக்கு அவந்தான் சரியா இருப்பான்."


அமைச்சர் தனது தொலைபேசியில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார். 

  

"தம்பி, ம்ம்ம் வணக்கம் ப்பா, நல்லா இருக்கியா? ம்ம்ம்."


"நான் கொஞ்சம் உன்னை நேர்ல பார்க்கணுமே. ம்ம்ம் ஆமா இப்ப வேண்டாம்.”


  “நீ நேரா சாயங்காலம் வீட்டுக்கு வந்துடு."


  "சரிப்பா ஞாபகம் இருக்கு, அதெல்லாம் நேர்ல பேசிக்கலாம் நீ வா. ம்ம்ம் சரி."


       நாச்சியம்மன் கோயில் திருவிழா வேடந்தூர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் இது முக்கியமான திருவிழாவாகும். 


  இங்கே சப்தகன்னியரும் காட்சி தருகின்றனர்.


  வீட்டில் சுபகாரியங்கள் நிகழ வேண்டும் என்றாலோ, அந்த முறை விவசாயம் செழிக்க வேண்டும் என்றாலோ,சப்தகன்னியர்களுக்கும் நாச்சியம்மனுக்கும் புது வஸ்திரம் சார்த்தி தீபாராதனை காட்டினால், அதில் மனம் குளிர்ந்து பூமியையும் இல்லத்தையும் நிறைக்க செய்வாள் இந்த அன்னை என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.


  வம்சத்தைக் காப்பவள் என்றும் மக்களால் போற்றப்படுகிறாள்.


    நாச்சியம்மன் கோயில் பிரகாரத்தில் வேடந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பிற ஊர் பொதுமக்களும் ஊர் பெரியவர்களும் கூடி இருந்தனர். 


  வேலப்பன் ஐயாவும் அவர்களின் இரு மகன்களும் கூட அங்கு தான் இருந்தனர்.


  பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வைபவங்களுக்கான பொறுப்பாளர்களையும், வழிநடத்தி செல்லும் உறுப்பினர்களையும், ஒவ்வொரு ஊரின் சார்பாகவும் தீர்மானித்து கொண்டு இருந்தனர். 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருந்து பூச்சட்டி மற்றும் அலகுகுத்தி, நேர்த்தி கடன் செலுத்துதல் போன்றவை நடைபெறும்.


    இத்தோடு மாவிளக்கு,முளைப்பாரி மற்றும் கரகம் எடுத்து வருதல் போன்றவையும் நடைபெறும்.


    இங்கு கோயிலின் இதுவரையிலான வரவு செலவுகளும், அனைவரது முன்பும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.


    அடுத்து அம்மன் அழைத்து வருதல் பற்றி பேச்சு எழும்போது,  முந்தைய தினம் நடந்த நிகழ்வுகள் விரிவாக அனைவரின் முன்பும் தெரிவிக்கப்பட்டது. 


  ஒவ்வொரு கூட்டத்திலும் பிறர் கருத்துக்களை புரிந்து கொண்டு, ஒத்துப் போவோரும் உண்டு. வேண்டும் என்றே எதிர்மறையாக கருத்துக்களை கூறி வழக்காடுபவர்களும் உண்டு.


    அவர்களில் ஒருவன் பற்றவைக்க ஆரம்பித்தான்.


    "ஏப்பா சாமி சொல்லுதுங்கிறதுக்காக எங்களை எல்லாம் காட்டுக்குள்ள போய் சாகச் சொல்றீங்களா?


    ஏற்கனவே காட்டுக்குள்ள போனவங்க எல்லாம் பள்ளத்துக்கிட்ட செத்து கிடக்கிறதா புரளி இருக்கு.


    இதுல தெரிஞ்சே போய் சாக சொல்றீங்களா?


    எப்பா யாராச்சும் ஏதாச்சும் பேசுங்கப்பா? எல்லாரும் இப்படி வாய மூடிக்கிட்டு இருந்தா எப்படி?”


      "இங்க பாருப்பா வாசு, உன்னை யாரும் வந்து இங்க சாக சொல்லல, சும்மா எல்லாரையும் ஏத்தி விட்டுக்கிட்டு இருக்காத."


        "உன்ன பத்தி இந்த ஊருக்கே தெரியும். இது அம்மனோட வாக்கு, அவ சொல்லு தான் எங்களுக்கு எல்லாம் வேத வாக்கு. அதை நிறைவேத்த வேண்டியது எங்க கடமை."


    "அப்போ நீங்களாவே பாத்துக்கறீங்கன்னு சொல்றீங்க."


  "எப்பா சும்மா குதர்க்காம பேசிட்டு 

இருக்காதே, இது நம்ம நாச்சியம்மனோட கட்டளை இதை கண்டிப்பா  நிறைவேத்தனும். வேடந்தூர் சார்பா நாங்கள் இதுக்கு ஒத்துக்கறோம்.


  மத்த ஊர்க்காரங்க எல்லாரும் இது வேணாம்னு ஒதுங்கிக்கிட்டாலும் சரி இல்ல பக்கபலமா எங்களோட நின்னாலும் சரி .

   

      இது அந்த ஆத்தா  உத்தரவுப்படி கண்டிப்பா நடக்கும் நடத்திக் காட்டுவோம் ஆத்தா சொல்ல மீறி இந்த ஊர்ல எதுவும் நடக்காது."

 

      அந்த நேரத்தில் கோயிலின் முன்பு கிரீச்சிட்ட சத்தத்துடன் வந்து நின்ற கருப்பு டாடா சுமோவின் மேல், அனைவரது கவனமும் செல்கின்றது.


  மாறன் சில கரைவேட்டிக்காரர்களுடன் பக்கா அரசியல்வாதியாக அதிலிருந்து இறங்கி வருகிறான்.


வேலப்பன் ஐயா சற்று குழப்பத்துடன் தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


  கோவில் பக்கமே தலை வைத்து படுக்காதவன் இப்படி தன் புடை சூழ கோவிலை நாடி வந்திருப்பது, அவர் மனதிற்கு ஏனோ நெருடலாக இருந்தது.  

 

  அவர் அறிய மாட்டாரா தனது பேரனை பற்றி, நெற்றியில் புருவ முடிச்சுக்கள் விழ அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment