Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, May 20, 2025

மன்னவரே 09

 


              அத்தியாயம் 9

     

       நாச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில், சாமி ஆடி குறி சொல்வது வழக்கமான ஒன்று.


  வேடந்தூரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து குறி கேட்பதற்க்காகவும் பிரச்சனைகளை சொல்லி பரிகாரம் கேட்பதற்க்காகவும் நிறைய மக்கள் இங்கு வருவதுண்டு.


    இந்த முறை திருவிழாவை பற்றி கேட்க ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்.


     திருவிழாவை பற்றி கேட்டதுமே சாமி வந்து ஆடிக் கொண்டிருந்த பூசாரி, ஆங்காரமாக ஆட ஆரம்பித்து விட்டார்.


  என்ன செய்தும் அவரை அமைதி படுத்த முடியவில்லை.


  பெண்கள் குலவையிட்டு வேண்டிட ஆரம்பித்தனர்


       "ஆத்தா மகமாயி, ஆயிரம் கண்ணுடையாளே உம் பிள்ளைங்க மேல இத்தனை கோபம் வேண்டா தாயி, அது இந்த ஊரையே அழிச்சிடும் "


       "நாங்க ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அதை மன்னிச்சு அருள் புரிங்க தாயே."


மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை மற்றும் சூடம் ஏற்றி காட்டப்பட்டது, கொஞ்சம் கொஞ்சமாக மனம் இறங்கி வந்தால் அன்னையவள்.


"இந்த வருஷம் கொற்றவை தேவி கோவில்ல இருந்துதான் எனக்கு சீர் வரணும்.


       கெட்ட  சக்திங்க ரத்த காவு கேக்குதுடா, அதை தடுக்கனும்னா எத்தனை தடை வந்தாலும் இது மட்டும்தான் நடக்கணும்." 


அருள் வந்த பூசாரி வாயில் எரியும் சூடத்தை போட்டுக் கொண்டு மலை இறங்கி மயங்கி விழுகிறார்.


  ஊர்மக்கள் அதிர்ந்து தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர் 


     "இதெல்லாம் சாத்தியமாப்பா?."   


       "ரொம்ப வருஷம் ஆயிடுச்சே காட்டுல இருந்து சீர் கொண்டு வர்றதை நிறுத்தி."


        "அந்த இடத்துல உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு தானே இந்த நடைமுறைய நமக்கு முன்னே இருந்தவங்க மாத்தினாங்க?” 


  திருவிழாவின் ஒரு பகுதியான அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி முன்பெல்லாம் காட்டினில் அமைந்துள்ள, கொற்றவை கோயில் இருந்து தான் நடைபெறும்.


  ஆனால் காலப்போக்கில் இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்ததால், சில உயிர் இழப்பை சந்திக்க வேண்டி இருந்தது. அதனால் இம்முறை கைவிடப்பட்டது.


  அதற்கு பதிலாக வேடந்தூரின் பக்கத்து கிராமமான, மேலூரில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நடைபெறுகிறது.


  கொற்றவை தேவி கோயிலின் அருகே காட்டில் வசித்த மக்கள், இந்த மேலூர்க்கு சில காரணங்களால் புலம்பெயர்ந்தனர்


  அதனால் மேலூரில் உள்ள ஊர் தலைவரான வேலப்பன் ஐயா அவர்களின் இல்லத்தில் இருந்து  தான், அம்மன் அழைத்து வருதல் வைபவம் நடைபெறுகின்றது. 


  மேலூரை சேர்ந்த சில ஊர் பெரியவர்களும் அங்கு தான் இருந்தனர். 


ஆனால் வேலப்பன் ஐயா குடும்பத்தில் சார்பாக ஒருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


    வேலப்பன் ஐயா குடும்பத்திற்கும் சுந்தரமூர்த்தி தாத்தா குடும்பத்திற்கும் இடையே, பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் வழிவழியாக இருந்து வந்தது. 


    வடிவுப்பாட்டியும், வேலப்பன் ஐயாவும் கூட உடன் பிறந்தவர்கள் தான். வடிவுப்பாட்டியின் மகள்களான சுமதியும் சுகந்தாவும் வேலப்பன் அய்யாவின் மருமகள்கள்.


  வேலப்பன், பூவாத்தா தம்பதியருக்கு மூன்று புதல்வர்கள் மூத்தவர் தாமோதரன். 


  இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகள் மாறன் மற்றும் நிரஞ்சனா. 


  ஆளுங்கட்சியின் இம்மாவட்ட செயலாளரான மாறன் பாதி நாட்கள் வெளியூரிலும், பாதி நாட்கள் உள்ளூரிலும் வசிப்பவன். இவன் ஒரு அதிரடி பேர்வழி.


    அரசியல் என்ற போர்வையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவன்.


இவன் மனைவி காயத்ரி அவனுக்கு நேர் எதிர், அமைதியின் சொரூபம்.


  இவர்களுக்கு நான்கு வயதில் ஆதித்யன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.


நிரஞ்சனா கல்லூரி முடித்து வீட்டில் தான் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறாள்.


  வேலப்பன் ஐயாவின் கடைசி புதல்வர் வாசுதேவன், இவர் மனைவி சுகந்தா இவருக்கு மகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள். 


  மகேந்திரன் கல்லூரியிலும் மணிகண்டன் பள்ளியிலும் படித்துக் கொண்டிருக்கின்றனர்


  வேலப்பன் ஐயாவின் இரண்டாவது புதல்வர் தனது தாய் மாமாவிற்கு கொடுத்த சத்தியத்திற்காக, அவரது மகளை கை பிடித்ததால் தனது தந்தையின் கோபத்திற்கு உள்ளாகி, அவரால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார். 


  சுந்தரமூர்த்தி ஐயாவின் வீட்டில் மதிவாணன் நிரஞ்சனாவை விட பத்து வயது மூத்தவர். 


  பெரியவர்கள் எல்லோரும் திருமணத்தை பொறுத்தவரை இந்த வயது வித்தியாசம் சாதாரணம்தான் என்று எடுத்துக் கூறினாலும், 


  "ஆசிரியராக இதை ஒரு நாளும் என்னால் ஏற்க முடியாது. நான் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர அதை விடுத்து தவறான பாதையை காட்டக்கூடாது." என மறுத்துவிட்டார்.


      அடுத்து யுவேந்திரனுடன் திருமணம் செய்ய பேச்செடுக்க அதை யுவேந்திரன் முற்றிலுமாக மறுத்து விட்டான்.


     கவிநிலாவிற்கு திருமணம் முடிக்காமல், தான் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான். 


  இதில் வேலப்பன் ஐயா குடும்பத்திற்கு சற்று வருத்தம்தான்.


  நாச்சியம்மன் கோயில் வேடந்தூர் மட்டும் அல்லாது அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் பொதுவான ஒரு திருத்தலம். 


  ஆகவே அனைத்து ஊர் மக்களுக்கும் நாச்சியம்மன் கோவில் பிரகாரத்தில் திருவிழாவை பற்றி கலந்து ஆலோசிக்க, முறையாக அழைப்பு விட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.


  வேந்தனது கார் இனிமையான காதல் பாடல்களால் மிதந்து கொண்டிருந்தது. 


  வேந்தன் தனது காரில் பின் இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி, தலைக்கு ஒரு கையை முட்டுக் கொடுத்து இன்னொரு கையால்  மணிகள் கோர்க்கப்பட்ட ரப்பர் பேண்டை சுற்றிக்கொண்டே, அலெக்சாவுக்கு அடுத்தடுத்து காதல் பாடல்களை ஆணையிட்டு கொண்டிருந்தான். 


  மூர்த்தி காரை ஓட்டிட தீபன் அவன் அருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான். 


  இவர்கள் ரோட்டை ஒரு பார்வையும், இவனை ஒரு பார்வையுமாக தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


    இவர்களின் மனதில் சற்று முன் நடந்த நிகழ்வுதான் ஓடிக்கொண்டிருந்தது.


மதுவின் கைவண்ணத்தில் வேந்தனது ஜாக்குவார் தனது ஒற்றைக் கண்ணை இழந்தது.


     வேந்தன் சுதாரிக்கும் முன்பே மது  வினுவின் ஸ்கூட்டியை நோக்கி ஓட ஆரம்பித்தால்,


"அடியே எலி குஞ்சு என் கையில மாட்டுன செத்தடி நீ."


           "போடா கடுவன் பூனை."


  வேந்தன் மதுவை நெருங்கும் முன்பே, அவள் வினுவின் ஸ்கூட்டியில்  சென்று அமர்ந்து விட்டாள்.

  

  வேந்தன் அவளை எட்டிப் பிடித்திட முனைகையில், அவள் கூந்தலின் நுனி தான் கைக்கு கிட்டியது.


  ஸ்கூட்டி நகர்ந்திடவே அவளின் நுனி முடியில் இருந்த ரப்பர் பேண்ட் அவன் கைக்குள் வந்து சேர்ந்தது.


      அதை கைக்குள் வைத்துக் கொண்டு காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்தவன் தான்.

  

மூர்த்தியும் தீபனும் தான் தாங்கள் வந்த வண்டியை தெரிந்தவரை அழைத்து கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.


  "டேய் தீபா இவனுக்கு எகத்தாளத்தை பாத்தியா, அவன் காருக்கு நம்மள செக்யூரிட்டி ஆக்கிட்டு, வேந்த மகராசா காதல் உலகத்துல பவனி வர்றார் பாரு."


  "அந்த புள்ள செஞ்ச வேலைக்கு இவ ருத்ர தாண்டவம் ஆடுவான்னு பார்த்தா, இவன் என்னடா காதல் மன்னனா மாறி கிருஷ்ண அவதாரம் எடுத்து நிக்கிறான்."


  "மேலூர்காரனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது ரணகளம் தான் போ." 

நாங்களும் அத பாக்க தான் ஆவலோட காத்திருக்கோம்.


No comments:

Post a Comment