அத்தியாயம் 8
மதுரயாழினி தற்போது தான் தனது தோழி வினுவின் ஸ்கூட்டியில் வண்டி ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறாள்.
இது ஒரு வழிப்பாதை என்பதாலும் இந்த வழியில் போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தாலும், இந்த பாதையில் மட்டும் வினுவின் ஸ்கூட்டியை சில நாட்களாக தான் ஓட்டிப் பார்க்கின்றாள்.
திடீரென்று எதிரே வந்த வாகனத்தால் சற்று மிரண்டு தான் போனாள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து, நேராக சென்று, நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினாள்.
ஸ்கூட்டி காருடன் மோதுவதற்கு முந்தைய நிமிட இடைவேளையில் வண்டியிலிருந்து எதிர்ப்புறம் குதித்து விட்டாள்.
மது விழுந்ததை தூரத்திலிருந்து பார்த்த வினு பதறி ஓடி வருகிறாள்.
கைகளில் உண்டான சாருக்காயத்தின் வலியாலும், எங்கே இது பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், கோபமாக வேந்தனை நோக்கி வருகிறாள் மது.
"யோவ் கண்ணு என்ன பொடனீலயா வச்சிருக்கே? கார் ஓட்டுனா கண்ணு மண்ணு தெரியாதா உனக்கு.
இது என்ன உங்க அப்ப வீட்டு ரோடுன்னு நெனச்சியா இல்ல, கவர்மெண்ட் உனக்கு இந்த ரோட்டை பட்டா போட்டு கொடுத்துட்டாங்களா?
அதான் கொட்ட எழுத்துல நோ என்ட்ரி போர்டு வச்சிருக்காங்களே கண்ணு தெரியல?"
முதலில் அவள் கோப விழி பேசும் மொழிதனில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தவன், அவள் இதழ் பேசும் மொழிதனில் நிதர்சனத்திற்கு வந்தான்.
"அடிங்க ஏ அர டிக்கெட்டு, நின்னுட்டு இருக்க வண்டி மேல, நீ வந்து மோதிட்டு, என்னையவா கொற சொல்ற?
ஏதோ தவறுதலா ஒன்வேல வந்துட்டேன்னு அமைதியா போனா ஓவராவா பேசுற
உன்ன சொல்லி குத்தமில்ல, கால் கூட எட்டாத உன்கிட்ட போய் வண்டிய கொடுத்து அனுப்பி இருக்க, உங்க அப்பன சொல்லணும்."
அவ்வளவுதான் நம்ம மதுரயாழினி மகாகாளி அவதாரம் எடுத்துட்டா.
வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கிளம்பியவளை வினு அமைதி படுத்த முற்பட்டாள்
"விடுடி என்ன, அந்த மலை குரங்க ஒரு வழி பண்ணாம விட மாட்டேன், எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பேசுவான்."
இவர்களின் நேரமோ என்னவோ, ரவுண்ட்சிலிருந்த போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
"என்னம்மா பிரச்சனை இங்க, ஓ…ஆக்சிடன்ட்டா. ரெண்டு பேரும் சாவிய குடுங்க மொத. ம்ம்ம் எங்க பின்னாடியே ஸ்டேஷனுக்கு வந்து சேருங்க."
பிடுங்காத குறையாக இருவரின் வண்டி சாவியும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இவர்கள் என்ன கூறியும் கேளாமல் போலீசார் இரு வண்டிகளையும் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்ல முனைந்தனர்.
மதுவிற்கு தான் அதிக வருத்தம், தன்னால் தனது தோழியின் வாகனம் சேதமடைந்ததோடு, அவளையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விட்டோமே என்று கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது.
ஏனோ இதைக் கண்ட வேந்தனுக்கு மனது பொறுக்கவில்லை.
அவள் விழி நீரினை துடைத்து, தன் நெஞ்சினில் அவள் முகந்தனை தாங்கி, ஆறுதல் படுத்த நினைத்த தனது மனதை எண்ணி வியப்பாக இருந்தது.
அவள் பேசிய பேச்சுக்கு அவனுக்கு கோபம் தான் வர வேண்டும், ஆனால் ஏனோ அவள் விழிகளில் நீரைக் கண்டதும் இவன் உயிர்தனில் வலி தோன்றியது போன்று ஓர் உணர்வு.
உடனே அவசரமாக அவன் போனிலிருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
சிறிது நேரத்திலேயே அவர்களிடம் இருந்து வண்டி சாவியினை பறித்துச் சென்ற போலீசார் திரும்ப வந்தனர்.
"உங்கள பார்க்கவும் பாவமா தான் இருக்கு. பொம்பள பிள்ளைகளை ஸ்டேஷனுக்கு தனியா வர சொல்லவும் மனசு கேட்கல. சரி உங்க லைசென்ஸ் குடுங்க."
திடீரென்று லைசென்ஸ் பற்றி கேட்டதும் திருத்திருவென முழித்த மது சட்டென சுதாரித்து வினுவின் கைப் பையில் இருந்து அவளின் லைசென்ஸ்சை எடுத்துகொடுத்தாள்.
வினு கையில் ஹெல்மெட்டுடன் இருந்ததால், அவர்களும் வினு தான் வண்டியை ஓட்டி வந்ததாக எண்ணினர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அவள் விழிமொழிதனை கற்றுக் கொண்ட வேந்தனுக்கு, அவள் ஏதோ தில்லுமுல்லு செய்கிறாள் என்று தோன்றியது.
"சரிம்மா இந்தாங்க சாவி. நாளைக்கு உங்க பேரன்ட்ஸ்சோட வந்து ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் குடுத்திடுங்க, பயப்படாதீங்க ஒரு பார்மாலிட்டிக்கு தான்.
வண்டி இன்சூர் பண்ணி இருக்கீங்களா? இப்போதைக்கு அதை வச்சு க்ளைம் பண்ணிக்கோங்க. இவர்கிட்ட அப்பறம் காம்பன்செட் வாங்கி தர்றோம்."
"அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார், எங்களை இத்தோட விட்டாலே போதும். யார் பணமும் எங்களுக்கு வேண்டாம்."
"அது உங்க இஷ்டம் தான், சரி நீங்க கிளம்புங்க."
போலீசார் வேந்தனை நோக்கி செல்ல, வினு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
வினுவின் ஸ்கூட்டிக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை, முன்பக்க ஹேண்டில் சற்று வளைந்து இருந்தது அவ்வளவுதான்.
வினுவின் ஸ்கூட்டி அவள் ஓட்டி பழகுவதற்காக செகண்ட்ஹண்டில் வாங்கியது தான்.
ஓட்டுவதற்கு சுலபமாக இருந்ததால் இதையே இரண்டு வருடமாக உபயோகித்து வருகிறாள்
மது சற்று தள்ளி நின்று கொண்டு வேந்தனை முறைத்துக் கொண்டிருந்தாள்
வேந்தனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், இல்லை இல்லை அவளின் முறைப்பை ரசித்துக்கொண்டிருந்தான்.
சரியாக அந்த நேரம் மூர்த்தியும் தீபனும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்த போலீசர்களிடம் நன்றி கூறி அவர்களை அனுப்பிவிட்டு, வேந்தனின் முன்பு வந்து நின்றனர்.
இவன் பார்வையையும் இவன் பார்வை போன திசையையும் நோக்கி விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
"ஏண்டா தீபா நான் காண்றது என்ன கனவா இல்ல நெனவா ?, ஸ்ஸ்ஆஆஆ ஏண்டா கிள்ளுன?"
"ம்ம்ம் நடக்கிறது நிஜமான்னு கன்ஃபார்ம் பண்ணிக்க தா."
"அதுக்கு உன்னையே நீயே கிள்ளிக்கணும் பரதேசி, என்னை எதுக்கு டா கிள்ளுன?"
"ஈஈஈஈஈஈ."
"தயவு செஞ்சு வாய மூடு டா, இப்படி நீ பல்ல காட்டி பயமுறுத்துறதுக்கு பதிலா இன்னும் ரெண்டு கிள்ளுவேனா கிள்ளிக்கோ.
டேய்...ஒரு பேச்சுக்கு சொன்னா திரும்பவுமா கிள்ள வர தள்ளிப் போடா அங்குட்டு.
காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க இவம் பின்னாடி சுத்துச்சு, ஒருத்தியை கூட மதிக்கலையே டா இவே.
நம்ம சுமதி சித்தி புள்ள நிரஞ்சனா கூட, இவன பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு ஆசையா வந்து பேச வருமே டா, அத இவன் திரும்பி கூட பார்த்ததில்லையே?
ஆனா பாரு இந்த புள்ளைய வச்ச கண்ணு வாங்காம பாக்கறத, நம்ம கேங்குலயே இவன் தானடா முரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு திரிஞ்சான்."
வேந்தனின் பார்வை தன்னை ஏதோ செய்ய வேந்தனிடமிருந்து தனது பார்வையை திருப்பிக் கொண்டாள் மது.
இருந்தும் அவனது பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்து, கோபமாக அவனை நோக்கி திரும்பினால், கண்களாலேயே அவனை மிரட்டி முழியை நோண்டி விடுவேன் என்று செய்கையில் காட்டினாள்.
அவன் அதற்கும் ம்ம்ம் என்ற ராகத்தோடு தலை சாய்த்து, புருவ வில்தனை உயர்த்தி, ரசனையான பாவனையில் அவளை நோக்கி விழிமொழிதனில் கதை பேசிட, இவள்தான் மறுபடியும் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டி இருந்தது.
இவன் குறுஞ்சிரிப்போடு நிமிர்ந்து பார்க்கையில் தான் கவனிக்கிறான், அருகில் நின்று தன்னை அதிர்ந்து நோக்கும் தன் நண்பர்களை.
"டேய் நீங்க எப்ப வந்தீங்க?"
"நாங்க வந்து 30 வருஷம் ஆச்சு"
"மச்சான் இப்ப எனக்கு டைம் இல்ல, நாளைக்கு ஞாபகப்படுத்து மறக்காம சிரிக்கறேன்."
"எதே, கொழுப்ப பார்த்தியாடா அவனுக்கு."
"நீ சொன்ன பதில் எனக்கே காண்டாச்சு, இன்னுமாடா இதெல்லாம் ஜோக்குன்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்க."
இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.
இவர்கள் ஒரு சேர அதிர்ந்து, திரும்பிப் பார்க்க, அங்கு வேந்தனின் ஜாக்குவார் காரில் உள்ள ஹெட்லைட் கண்ணாடி, மதுவின் கை பட்ட கல்லால் உடைந்து நொறுங்கியது.
"இனி ஒரு தரம் என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிட்ட அடுத்து உடையறது உன் தல தான்."
No comments:
Post a Comment