அத்தியாயம் 7
இருள் கவ்விய அந்த நள்ளிரவு வேளையில் ஆஜான பாகுவான ஒரு உருவம், கரிய மைப்பூசிய தேகத்தோடு மோகினி பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த உருவத்தின் உதடுகள் விடாது மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க, கழுத்தில் மண்டை ஓடுகளால் ஆன மாலையும், வலது கையில் இருக்கும் கம்பின் கைப்பிடியில் மண்டை ஓட்டையும் தாங்கி நடந்து வந்து கொண்டிருந்தது.
அதன் இடது கையில் வைத்திருந்த குடுவைக்குள், மூலிகையால் ஆன ரத்த நிற திரவத்தை வைத்திருந்தது.
குருந்த மரத்தை வெறித்து கொண்டே பள்ளத்தை சுற்றியுள்ள அதன் வேரினை நோக்கி, தான் கொண்டு வந்த திரவத்தினை அது ஊற்ற முயன்ற போது, ஒரு அம்பு பறந்து வந்து அக்குடுவையை துளைத்து எடுத்து சென்று தூர எரிந்தது.
கணப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்வை சுதாரித்துக் கொண்டு, அவ்வுருவம் அம்பு வந்த திசையை நோக்கி தனது கண்களை திருப்ப, அங்கு வானிலிருந்த நிலவு மகள் கீழே இறங்கி வந்ததை போல, ஜொலிப்புடன் அலங்கார ரூபிணியாக கழுத்தினில் பொன்மஞ்சள் கயிறு மின்ன, நீல நயனங்களில் அனல் தெறிக்க நின்றிருந்தால், இந்த ஊர் மக்களின் குலதேவி அவள்.
"அடியே காட்டு பிச்சி, நீ எவ்வளவு முயன்றாலும் எனது மகள் உயிர்த்தெழுவதை உன்னால் தடுக்க முடியாது
நிச்சயம் அவள் காதலனுடன் இந்த ஜென்மத்திலாவது நான் அவளது காதலை சேர்த்து வைப்பேன்
அவர்கள் இணையப் போவது உறுதி, இது நான் வணங்கும் அந்தக் காலக்கோடனின் மீது சத்தியம்."
"முட்டாளே விதியை யாராலும் மாற்ற முடியாது, எமது அன்னை கொற்றவையும் இவ்வூர் காவல் தெய்வம் நாச்சியம்மனின் அருளும் உள்ளவரை, உன் மகள் உயிர்த்தெழ நான் விட மாட்டேன்.
அவள் சாபத்திற்குரியவள், தன் சுயநலத்திற்காக ஒரு ஊரையே அழிக்கத் துணிந்தவள்"
"போதும் நிறுத்து அவள் அப்படி செய்ததற்கு காரணமானவளே நீ தான், உன்னால் தான் என் மகள் வாழ்க்கையை இழந்து இப்படி சாபம் பெற்று நிற்கிறாள்"
"ஹா ஹா அப்படியா, நானா உன் மகளுக்கு துர்ப்போதனைகளை அளித்தேன்? நானா உன் மகளை தீய சக்திகளின் வழியில் திசை திருப்பினேன்?
ஒரு தந்தையாக உன் கடமையிலிருந்து நீ தவறி விட்டாய், பூ மணம் வீச வேண்டிய பிஞ்சு நெஞ்சில், கொடும் நஞ்சை கலந்து விட்டவன் நீ.
அது வளர்ந்து ஊருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் அதை வெட்டி தான் வீச வேண்டும்
அகிலம் ஆளும் அன்னையவள், திருந்துவதற்குகான வாய்ப்பினை இவளுக்கு அளித்தாள். ஆனால் இவள் தான் காலக்கோடனின் பிடியில் முழுதாக ராட்சசியாக மாறிவிட்டாளே, விதி பயன் யாரை விட்டது"
"வாயை மூடு என் மகள் ராட்சச உலகின் சக்கரவர்த்தினி"
"அப்படி என்றால் இந்த ஜென்மத்திலும் நீ திருந்துவதாக இல்லை அப்படித்தானே? இம்முறையும் என் மன்னவரது கைகளில் உள்ள வாளால் தான் உனக்கு மோட்சம்கிட்ட போகின்றது."
"ஹா ஹா ஹா அந்த வாள் அவன் கைகளில் கிடைத்தால் தானே இது சாத்தியம், அது எப்போதும் நிகழப்போவதே இல்லை.
இந்த ஜென்மத்தில் உன் கண்களின் முன்னே தான், அவன் என் மகளின் ஆன்மாவை தாங்கிய உடற்கூடுடன் வாழ போகிறான். இதுதான் நடக்கும், நடத்திக் காட்டுகிறேன் பாரடி."
" நீ என்ன முயன்றாலும் தெய்வ சக்திக்கு முன் தீய சக்தி என்றுமே ஜெயிக்காது.
இயற்கை அன்னை கொற்றவையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, உன்னை போன்ற விஷச் செடிகளை களை எடுக்க வீறு கொண்டு வருவாள் எம் அன்னை."
"அதையும் பார்க்கலாம் ஜெயிக்க போவது எமது தெய்வம் காலக்கோடனா, இல்லை அந்த கொற்றவையா என்று."
இவ்வாறு கூறியபடியே அக்கரிய உருவம் அங்கிருந்து சென்று விட்டது.
குலதேவி அவள் காட்டினை நோக்கி கை கூப்பி நிற்கிறாள்.
"தாயே எப்போதும் போல இம்முறையும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்."
வேந்தன் கூறியபடி அன்யூனிபார்மில் மூர்த்தியின் அச்சு ஆபீசுக்கு, சாதாரணமாக வருவது போல் வந்து சேர்ந்தான் தீபன்.
"என்னடா இந்த வேந்தனை இன்னும் காணோம், இவன் பார்க்கணும்னு சொன்னதாலதானே டியூட்டி டைம்னு கூட பாக்காம, வந்து இங்க உட்கார்ந்திருக்கேன்.
ப்ச்சு, போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான் என்னதான் பண்றது.
டேய் நான் இங்க புலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடா அங்க போன்ல நோண்டிட்டு இருக்கே."
"ப்ச்சு,என்னடா இப்ப உம்பிரச்சனை, இதே கேள்வியை எத்தனை தடவை தான் என்கிட்ட கேட்ப?
அவ எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் இன்ஃபர்மேஷனா கொடுத்துட்டு இருக்கான்?
அவன் தங்கச்சிக்காக மட்டும் எத்தனை நேரம் காத்திருக்க? உன் மச்சானுக்காகவும் கொஞ்ச நேரம் காத்திரு.
அடேய்யப்பா இப்படி மூஞ்சியை வச்சுக்கிட்டா நாங்க நம்பிருவோமா. நீ பதினோரு வயசிலேயே அந்த கவிப்புள்ளகிட்ட என்ன கட்டிக்கிறியான்னு கேட்கும் போது, கூட நின்னவன்டா நான். உன்ன பத்தி எனக்கு தெரியாது."
அதன் பிறகு எங்கே தீபன் பேசுவது, வேந்தனுக்கு போனில் அழைப்புவிடுவதை திரும்பவும் ஆரம்பித்தான்.
சிறிது நேரத்திற்கு முன் வேந்தன் மூர்த்தியின் அச்சு ஆபிசை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, தனக்கு முன்னால் தீபன் சென்று கொண்டிருப்பதை கண்டான்.
அவனை கூப்பிட முனையும்போது, அவனுக்கு பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில், இருவர் தீபனை பின் தொடர்வது போல் தோன்றியது.
வேந்தனும் தனது காரில் சிறிது இடைவெளி விட்டு அவர்களை கண்காணிக்க தொடங்கினான்.
மூர்த்தியின் ஆபீசை நெருங்கியதும் தீபன் இறங்கி உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமிகள் சற்று இடைவெளிவிட்டு மறைவான ஒரு இடத்தில் நின்று கொண்டனர் .
வேந்தனுக்கு தீபன் பிறரால் பின் தொடரப்படுகின்றானோ என்ற சந்தேகம் ஊர்ஜிதமானது. அவனும் அந்த ஆசாமிகளுக்கு தெரியா வண்ணம், மறைவாக இருந்து அவர்களை கவனிக்க தொடங்கினான்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே, ஒருவன் மட்டும் அங்கிருந்த பைக்கில் அவசரமாக கிளம்பினான்.
உடனே வேந்தனும் அவனை பின் தொடர்ந்து சென்றான்.
அந்த ஆசாமி இருசக்கர வாகனத்தில் சென்றதால், சந்து பொந்துகளில் நுழைந்தும் நடைபாதையின் மீது ஏறியும், சிக்னலில் நிக்காமலும் சென்று கொண்டிருந்தான்.
வேந்தன் காரில் பயணித்ததால் அவனை பின் தொடர்ந்து செல்ல சற்று கடினமாக இருந்தது.
இதனிடையே தீபனின் தொலைபேசி அழைப்பு வேறு அவனுக்கு வந்து கொண்டே இருந்தது.
"பக்கிப்பைய எப்படி போறான் பாரு, ஒரு சிக்னல்ல கூட நிக்கல, அங்க பாரு எப்படி நடப்பாத மேல ஏறி போறான் பாரு.
ஏற்கனவே ஒரு சிக்னல்ல மிஸ் பண்ணி புடிக்கிறதுக்குள்ளேயே ஒரு வழி ஆயிட்டேன், அடுத்த சிக்னல் வேற போட்டுட்டான் எப்படி அவனை பிடிப்பேன்னு தெரியவில்லையே? சிக்னல் வேற விழ மாட்டேங்குது இதுல இவன் வேற நொய் நொய்னு கால் பண்ணிட்டு இருக்கான்."
வேந்தன் சிக்னலில் நிற்கும் போது அந்த பைக்காரன், ஒரு பாதையில் நுழைவதை கண்டான்.
சிக்னல் விழுந்ததும் வேகமாக அதே வழியில் சென்று தேட முற்பட்டான், அவசரத்தில் அது ஒரு வழிப்பாதை என்பதை கவனிக்க தவறினான்.
தீபனிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்ததால், அதனை எடுக்க முற்பட்டான், அப்போது எதிரில் ஒரு டூவீலர் வந்ததை கவனித்து, சற்று தூரத்திற்கு முன்பே சடனாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விட்டான்.
ஆனால் டூவீலரானது நேராக வந்து, பலமாக காரின் முன்பக்கத்தின் மீது மோதி நின்றது.
அந்த டூவீலரை ஓட்டி வந்த மது ஒரு பக்கம் சரிந்து விழுந்து கிடந்தாள்.
No comments:
Post a Comment