அத்தியாயம் 6
மது கீழிறங்கி வரும்போது லட்சுமியம்மா இவளுக்கு மதிய உணவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.
"என்னம்மா உன் சீமந்த புத்திரன் கிளம்பியாச்சுப் போல, வீடே அமைதியா இருக்கு."
லட்சுமியம்மா அவள் தலையில் கொட்டி,
"அண்ணங்காரன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்காப்பாரு. அவன் எப்பவுமே அமைதியானவந்தான்டி.
நீ பிறந்ததுக்கு அப்பறம் தான் உன் கூட சேர்ந்து இப்படி பேச ஆரம்பிச்சுட்டான்."
"ஆமா உம்புள்ள பச்ச கொழந்த பாரு. ஏந்தான் இந்த அம்மாக்கள் எல்லாம் இப்படி இருக்கீங்களோ.
அவ ஊமை மாறி இருந்து எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கான், நான் பொறந்து தான் உம்புள்ள பண்ற ஏமாத்து வேலையெல்லாம் கண்டுபிடிச்சுட்டு இருக்கனாக்கும் தெரிஞ்சுக்க."
மறுபடியும் ஒரு கொட்டு இலவசமா விழுந்தது அவளுக்கு.
"ம்மா நா ஏற்கனவே உயரம் கம்மி, நீங்க வேற இப்படி கொட்டிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்பறம் ஒருத்தனும் என்னைய கல்யாணம் பண்ணிக்க வரமாட்டாம்மா.
அப்பறோம் இன்னும் பத்து பவுன் அதிகமா போட்டுத்தான் என்னை கட்டி கொடுக்க வேண்டி இருக்கும் பாத்துக்க."
"கவலப்படாத செல்லம் உன்ன குள்ளமணிக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா போச்சு."
இப்படி சொல்லிக் கொண்டே வீட்டின் உள்ளே வருகிறாள் மதுவுடைய உயிர் தோழியான வினு என்கிற வினோதினி.
எல்கேஜுயில் ஆரம்பித்த இவர்களது சிநேகம், வேலைக்கு சேர்ந்த பிறகும் கூட தொடர்கிறது.
இருக்காதா என்ன, வேற டிபார்ட்மெண்ட்டில் சேரச் சென்ற வினுவை ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கி கொடுத்தே இவளது டிபார்ட்மெண்ட்டில் சேர்த்துக் கொண்டாள்.
மதுவுடைய குடும்பம் கொஞ்சம் கட்டுப்பாடானது. வினுவுடையதோ கொஞ்சம் சுதந்திரமானது, பிள்ளைகள் விருப்பம் தான் முக்கியம் என்று கூறுபவர்கள்.
மது வேலைக்கு செல்வதாக சொன்னதும், அவள் அப்பா சலித்து எடுத்து அவரா கொண்டு வந்தது தான் இந்த வேலை. சந்தோஷ் சுப்பிரமணியம் போல ஆப்ஷனே கிடையாது.
வினுவுக்கு வெளியூரில் வேறு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது.
ஆனால் வினுவுடைய அப்பா, அம்மாவை மூளை சலவை செய்து, இவளுடைய கம்பெனியிலயே அவளும் சேருமாறு செய்து விட்டாள் மது.
வினுவுக்கும் மதுவை விட்டு பிரிந்து இருக்க முடியாது. அதனால் இப்போது மதுவோடு சேர்ந்து வினுவும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.
"எனக்கு நீ குள்ளமணியைப் பார்த்தா, உனக்கு அதே ஊருல ஒரு தவக்களைய பார்க்கறேன்டி என் செல்லமே."
"அடிப்பாவி கல்யாணம் பண்ணிகிட்டுப் போற இடத்துலயும் கூட, என்னையும் இழுத்துட்டு போவய்யா? உன் தொல்லையில் இருந்து நான் மீள்வதற்கு வழியே இல்லையா என் தெய்வமே."
"நோ என் செல்லமே, நான் உன்னை விட்டு பிரிவதும் இல்லை, என் நிழல் உன்னை விட்டு விலகுவதும் இல்லை."
"போயும் போயும் உன் வாயாலையா இந்த டயலாக்கை நான் கேட்கனும்."
"வேணும்னா உன்னோட கனவு நாயகனை சொல்லச் சொல்லவா"
"ஏய் ரெண்டு பேரும் இப்படியே பேசிகிட்டே இருக்க போறீங்களா என்ன? லேட் ஆகலயா உங்களுக்கு?"
பிறகு தான் ரெண்டு பேரும் அடித்து பிடித்து ஆபீஸிக்கு கிளம்பினர்.
கமிஷனர் அலுவலகம், தீபன் தனக்கு முன் இருக்கும் கமிஷனரிடம் தன் கோபத்தை வெளிக்காட்டாமல், தன்னை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.
"உன்ன யாரு மேன் என்னை கேக்காம இதுல இன்வால்வு ஆக சொன்னது.
எதுக்காக அந்த காட்டுக்குள்ள போய் சர்ச் பண்ணி பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்க?
அந்த இடத்திலே மர்டர் நடக்கறது உங்க ஊர்ல வழக்கம் தானே."
"சார் இது பர்ஸ்ட் டைம் கிடையாதுதான், ஆனா இப்படியே தொடர்ந்துகிட்டே இருக்கு, இதை நாம வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு இருக்கறதா சார்?
எப்படி எல்லாரும் ஒரே போல அதிர்ச்சில இறந்து போனதாவே போஸ்ட்மாட்டம் ரிபோர்ட் வருது?
அப்ப அங்க ஏதோ ஆபத்து இருக்குன்னுதானே சார் அர்த்தம். நாம இப்படியே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலைன்னா எப்படி சார்?"
"என்ன ஓவரா பேசரே? உங்க ஊர்காரங்க சும்மா இல்லாம புதையல் தேடறேன், பொக்கிஷம் தேடறேன்னு போய் செத்தா, அதுக்கு டிபார்ட்மெண்ட் என்ன பண்ணும்.
அது பாரஸ்ட் ஏரியா அங்கே பாரஸ்ட் ஆபீஷர்ரோட அனுமதி இல்லாம, நாமளா போய் சர்ச் பண்ண முடியாது புரிஞ்சுதா?
மொதல்ல ஹெல்த் ப்ராப்ளம்னாலதா அந்த ஆள் செத்தான்னு கேஸ் க்ளோஸ் பண்ணு."
"சார் ஆனா"
"யோவ் உன்கிட்ட இது கொலைனு நிரூபிக்க ஏதாச்சும் ஆதாரம் இருக்கா? இல்லல்ல சோ நான் சொன்னத மட்டும் செய் புரிஞ்சுதா?
இதுக்கு மேலயும் நீ இதுல இன்வால்வு ஆனா நான் உம்மேல சிவியர் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும், அண்டர்ஸ்டேண்ட் யூ கேன் கோ நௌ."
தீபன் விறைப்புடன் சல்யூட் வைத்து விட்டு வேக நடையுடன் வெளியேறினான்.
அவன் வெளியேறியதை உறுதி செய்து விட்டு, கமிஷனர் யாருக்கோ அவசரமாக போன் செய்தார்.
"சார் நீங்க சொன்ன மாறியே தீபனை இந்த கேஸை முடிக்க சொல்லிட்டேன். இதுக்கு மேல இது விஷயமா இன்வஸ்டிகேட் பண்ண கூடாதுன்னும் சொல்லிட்டேன் சார்."
அந்த பக்கம் என்ன கூறப்பட்தோ,
"சார் சார் சார் இல்ல சார் அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க."
"கண்டிப்பா இனிமே இதுபோல எதுவும் நடக்காது."
"பாரஸ்ட்குள்ள எல்லாம் அவனை போக கூடாதுன்னுதான் சொல்லி வெச்சு இருக்கேன் ப்ளீஸ் நம்புங்க."
"ஓகே சார் ஓகே சார் ஷியோர் சார் வைக்கட்டுங்களா ம்ஹம்."
பேசி முடித்து தன் நெற்றியில் பூத்த வியர்வை துளிகளை பதற்றத்துடன் துடைத்து கொண்டார் கமிஷனர்.
தீபனுக்கு அவ்வளவு கோபமாக வந்தது. கண்களுக்கு முன்னே நடக்கும் குற்றங்களை ஆதாரங்கள் இல்லாததால் எடுத்து கொள்ள மறுக்கின்றனர்.
இது முதல்முறை அல்ல ஒவ்வொரு முறையும் அந்த இடத்தில் சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்படாமலே முடிக்கபடுகிறது.
விசாரணை கூட ஆரம்பிக்க விடாமல் கேஸ் முடக்கப்படுவது கண்டிப்பாக இங்கு ஏதோ தவறு நடப்பது போல் தோன்றியது.
தன்னால் எதுவும் செய்ய முடியாது நிற்பது வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்தது.
அப்போது அவனுக்கு வேந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லு வேந்தா ஏதாச்சும் முக்கியமான விசயமாயென்ன இல்லாட்டவேலை நேரத்துல நீ கூப்பிட மாட்டயே."
வேந்தன் சிரித்து கொண்டான் அவன் கூறிய பதிலில்,
"நேத்து உன் வீட்ல யாரோ உன்ன கண்காணிக்கறதை பார்த்ததுல இருந்து, ஏனோ மனசுக்கு சரியாபடல டா.
அதான் நான் நம்ம எல்லா கம்பெனிலயும் மாரியப்பத்தி விசாரிச்சேன், நம்ம கருப்பட்டி காய்ச்சர முனியண்ணா அவனை யாரோ ஒருத்தன் கூட காட்டுக்குள்ள போனதை பார்த்திருக்காரு.
இவரு யாரது புதுசா ஊருக்குள்ளன்னு கேட்டதுக்கு, ஏகத்தாளமா பேசியிருக்கான் போல."
"எது காட்டுக்குள்ளயா?"
No comments:
Post a Comment