Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, May 15, 2025

மன்னவரே 04


              அத்தியாயம் 4

வேடந்தூரின் வடக்கு மூலையில் உள்ள முள்ளுக்காட்டில், கிராம மக்கள் அனைவரும் பதைபதைப்புடன் கூடி நிற்கின்றனர். 

    இந்த வருடமாவது மோகினி பள்ளத்திற்கு அருகே வீற்றிருக்கும் தம் குலதேவியை கோயிலில் சேர்க்க நினைத்திருக்க அதற்கு தடை வந்துவிடுமோ என்னும் அச்சத்துடன் குழுமியுள்ளனர். 

  இந்த பள்ளத்திற்கு பிற்பகுதியில் உள்ள காட்டை ஆடு, மாடு மேய்ச்சலுக்கும், விறகுகளை சேகரிப்பதற்க்காகவும் அவ்வூரார்  பயன்படுத்தி வருகின்றனர். 

  முற்காலத்தில் இக்காட்டில் மனிதர்கள் வாழ்ந்து வந்ததாகவும், ஒரு சாபத்தால் அவ்விடம் அழிந்து உரு தெரியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

          ஆனால் அங்கு செல்ல வேறு வழியை தான் உபயோகிக்கின்றனர். அந்த வழி சற்று சுற்றுப் பாதைதான், இருந்தும் பாதுகாப்புக்காக அவ்வழியை தான் பயன்படுத்துகின்றனர்.

  சிலசமயம் அங்கு சென்றவர்களை இப்பள்ளத்தின் அருகே, ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையிலும், சடலங்களாகவும் கண்டெடுத்ததுண்டு.

    மயக்கம் தெளிந்தபின்னும் அவர்களுக்கு சுய உணர்வின்றி, பிரம்மை பிடித்தது போல்தான் சுற்றிக் கொண்டிருப்பர். 

  அவர்களை நாச்சியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அம்மனின் அபிஷேக நீர் அவர்களின் மீது தெளிக்கபடும். 

    அதன்பிறகே அவர்கள்  சுய உணர்வை அடைவர். உணர்வு பெற்ற பின்னரும் அவர்களால், எவ்வாறு அந்த பள்ளத்திற்க்கு தான் சென்றோம் என்று  கூற இயலாது, ஏனெனில் அந்த விஷயம் அவர்களுக்கே தெரியாது.

  மோகனி பள்ளம் என்பது  ஆள்முழுங்கி பள்ளம் என்றும் அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. 

    இது பார்ப்பதற்கு மொட்டை கிணறு போன்ற அமைப்புடன், காட்டு செடிகள் சூழ அமைந்துள்ளது.  

      அதற்கு சற்று தொலைவில் உள்ள குருந்த மரத்தின் அடியில்தான், இவ்வூர் மக்கள் குறிப்பிடும் குலதேவி புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  குருந்த மரமானது கொத்தான வெண்ணிற மலர்களையும், உருண்டையான முள்ளுள்ள எலுமிச்சை வடிவுகொண்ட காய்களையும் கொண்டது. 

  இதன் வேர்களும் கிளைகளும் பள்ளத்தை சுற்றி அரண் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. 

  அப்பள்ளத்திற்கு அருகிலேயே வானை நோக்கி கண்கள் நிலைகுத்தி நின்றவாறு, அவ்வூரை சேர்ந்த மாரியப்பனின் உடல் சடலமாக கிடக்கின்றது. 

அவன் கைகளின் அருகே ஒரு எந்திர கோடாரியும் இன்னும் சில வெடி பொருட்களும் சிதறிக்கிடக்கின்றன.

    அங்கு விரைந்து வந்த மூர்த்தி தாத்தா தம் மக்களை விரட்டுகிறார். 

      "ஏய் பொடுசுகளா இங்கன என்ன ஜோலின்னு கேக்கேன்?  கிளம்புங்க மொத.

      ஏய் யப்பா யாராச்சும் போலீசுக்கு  தகவல் சொன்னீகளா இல்லயா ."

      "ஐயா, அரைமணிக்கு முன்னவே போன் பண்ணி சொல்லிட்டோமுங்க, இப்ப வந்துடு வாங்கன்னு நினைக்கிறேன்."

          இன்ஸ்பெக்டர் தீபன் தன் மீசையை முறுக்கியபடி கம்பீரமாக தமது காக்கி உடைதனில், போலிஸ் வாகனத்திலிருந்து டாக்டர் குழுவுடன் வந்து இறங்குகிறார்.

          தன் லேசர் கண்களால் சுற்றுபுறத்தை ஆராய்ந்தபடியே சடலத்தை நோக்கி செல்கிறான்.

          சிறிது நேரம் சடலத்தையும் சிதறிகிடக்கின்ற வெடி பொருட்களையும் பார்த்து, தமக்கு தோன்றிய சிலபல  சந்தேகங்களையும் கருத்துகளையும் தமது உதவியாளருடன் விவாதிக்கின்றான்.

       பின் தம்முடன் வந்த தடையவியல் மற்றும் டாக்டர் குழுவிற்கு  தலையசைத்து அனுமதி வழங்க, அவர்கள் தத்தமது பணிகளை தொடங்குகின்றனர்.

      கூட்டத்தினில் மூர்த்தி தாத்தாவை கண்டு கொண்டு முகம் மலர அவரை நோக்கி வருகின்றான். 

      தீபன், மூர்த்தி தாத்தாவின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. வேந்தனின் பெரியம்மா மல்லிகாவிற்க்கு தீபனின் தந்தை ஒருவகையில்  தம்பி முறை.

        தீபன் வீட்டுக்கு ஒரே வாரிசு. இவனுக்கு பத்துவயதுள்ள போது, இவனின் அன்னை பார்வதி விஷ காய்ச்சல் கண்டு இறந்துவிட்டார்.

      மனைவி இறந்த துக்கத்தில் இவனின் தந்தை பூபதி எங்கு செல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே மறந்து, நினைவிலந்து ஊருக்குள் சுற்றி கொண்டிருந்தார்.

    ஒருநாள் இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை இவரை மோகினி பள்ளத்துக்கு பக்கத்தில் மயங்கிய நிலையில் கண்டறிந்தனர்.

      மயக்க நிலையில் இருந்து, தெளிந்த பின் தன்னை மௌனசிறைதனில் பூட்டிக் கொண்டார் பூபதி.

        அன்று முதல் காவி உடைத்தரித்து ஊரின் எல்லையில் உள்ள ஊர்க்காவல் தெய்வமாம், அய்யனார் அப்பரின் கல்மேடைதனில் அமர்ந்து கொள்வார். அல்லது நாச்சியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்திடுவார்.

        தீபனிடம் கூட, அவருக்கு தோன்றும் போது மட்டுமே பேசுவார்.

      தாயில்லாது, தகப்பன் இருந்தும் பயனில்லாது போன, அப்பிள்ளையை மூர்த்தி தாத்தாவின் குடும்பம் தன் பிள்ளை போன்று ஏற்று கொண்டது.

அக்குடும்பம் மொத்தமும் இவனுக்கு சொந்தமானது.

  மல்லிகாவும் நாயகியும் தாயன்பை வாரி வழங்கினர். வடிவு மூர்த்தி தம்பதியரின் செல்ல பேரன் ஆனான். உயிர் தோழர்களாக மூர்த்தி மற்றும் வேந்தன் இருக்க, கவி மட்டும் முறைப்பு பெண்ணாகி போனாள்

          ஆமாம் பின்ன இருக்காதா, கடைக்குட்டியான தன்னிடம் பாசத்தை பொழிந்த குடும்பம், இப்படி இவனை தாங்க சற்று பொறாமை எட்டிப் பார்ப்பதில் விந்தை ஒன்றும் இல்லையே.

      நாள்முழுவதும் இங்கு இருந்தாலும் இரவு தன் தந்தையை காண வேண்டியே அவனது இல்லத்திற்கு திரும்பி விடுவான். சில சமயம் மூர்த்தியும் வேந்தனும் கூட அவனுக்கு துணையாக தீபனது இல்லத்தில் தங்குவர்.

      தன்னைநோக்கி வரும் தீபனைப் பார்த்து நின்ற மூர்த்தி தாத்தா அவன் அருகில் வரவும்.

      "மெட்ராஸ்ல இருந்து எப்பப்பு வந்தே? அங்கன எதோ மீட்டிங்கு அது முடிய நாளாகுமுன்னு சொன்ன?"

      "ஆமா ஐயா அங்க வேலை கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு, அதான் கிளம்பிட்டேன். நேரா வீட்டுக்குதா போய்ட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த நியூஸ், அதா இங்க வந்துட்டேன்."

      "அய்யாவு இதுநாள கோயில் திருவிழாவுக்கு எதுவும் பிரச்சினை வந்துடாதே?

      இந்த ஊருக்காக தன்னையே குடுத்த நம்ம குலதேவிய, இந்த வருஷமாவது கோயில் சேர்த்திடுவோமாப்பா."

    தழுதழுத்த குரலில் அவர் கேட்க அவனுக்கு தாளவில்லை.

        "ஐயா அதெல்லாம் ஒன்னு ஆகாது. நீங்க வெசனப்படாதீங்க இந்த வருஷம் நல்லப்படியா திருவிழா நடக்கும்."

      குருந்த மரம் இவ்வூர் மக்கள் பக்தியுடன் வழிபடும் குலமகளின் உறைவிடம். இங்கு உள்ள மரத்தை சுற்றி குங்குமமும் மஞ்சளும் கொட்டி கிடக்கிறது. 

  மரத்தைச்சுற்றி மஞ்சள் வண்ண புடவை சுற்றப்பட்டுள்ளது. 

  சில வருடங்களாக இப்பகுதியில் உயிர் பலியினை காண முடிகிறது. அத்தோடு தீய மாந்திரீகர்களின் நடமாட்டமும் தென்படுகிறது. 

  இதற்கு தீர்வு காண சாமியாடி குறி கேட்டனர்.

    "குலதேவியால உருவாக்கப்பட்ட மந்திர தகடுக்கு சக்தி குறைஞ்சுட்டு வருதுடா. மாந்திரீகத்தாள அவள கட்டி வைக்க பார்க்கறாங்கடா. "

      "  இது தொடர்ந்தா அதில அடைக்கப்பட்ட தீய சக்தி வெளியவந்து ஊரையே அழிச்சிடும் டா."

        "ஐய்யோ தாயே இதில இருந்து மீள வழியே இல்லையாம்மா?"

          "இருக்கு கண்டிப்பா இருக்கு , அங்க குலதேவியோட விக்கிரகத்தை வைக்கனும்."

            "அதுக்கு குருந்த மரத்துக்கு அடியில இருக்க மண் எடுத்து  குலதேவியோட உருவம் செஞ்சு, நாப்பத்தி எட்டு நாள் நாச்சியம்மன் கோயிலில வைச்சு ஹோமம் மற்றும் பூஜை செய்யனும். "

      "அந்த விக்ரகத்த குருந்த மரத்தடியில பிரதிஷ்டை செய்யனும். அப்பதான் அந்த தீயத அழிக்க அவளுக்கு சக்தி கிடைக்கும்."

    "  சரிங்க ஆத்தா நீங்க சொல்ற படியே செய்யறோம்."

          ஆனால் இன்றுவரை அது முயர்ச்சியாக மட்டுமே உள்ளது.

      ஒவ்வொரு முறையும் இதுபோன்றே பல தடங்கல்கள் அதுவும் உயிர்பலிகள். 

          இப்போதெல்லாம் இந்த பள்ளத்திற்கு சுற்று வட்டாரத்தில் கூட எவரும் வருவதில்லை.

      தீபனின் அருகில் வந்த அக்குழு நபர்கள் தயங்கி நிற்க,

      "சொல்லுங்க ஹரி, இவர் இந்த ஊர்தலைவர்தான், கண்டிப்பா நாம இந்த ஊர்காரங்களுக்கும் பதில் சொல்லிதான ஆகனும்."

      "சார் அந்த டெட்பாடிக்கிட்ட வெடி மருந்து மட்டும் இல்ல, கைல இந்த லிக்விட்டும் இருந்துச்சு. "

      "என்னதிது?"

அவர் கூறிய பதிலில் தீபன் மட்டுமல்ல மூர்த்தி தாத்தாவும் அதிர்ந்து நின்றார்.

No comments:

Post a Comment