Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, June 18, 2025

மன்னவரே 38


 

             அத்தியாயம் 38


  மருத்துவமனை வளாகத்தில் ஐசியூவின் முன்பு, வேந்தன் மற்றும் மதுவின் மொத்த குடும்பமும், லட்சுமியம்மா கண் முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.


    அவர்களுக்கு சற்று தள்ளி, கண்களில் கண்ணீர் பெருக, ஐ சி யூ வின் கதவுகளை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தால் மது. அவளின் இந்த நிலையை பார்த்து, மனம் நொந்தவாரே வாசல் பக்கம் ஒரு பார்வையும் இவளின் மீது ஒரு பார்வையுமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்.


  இவளை இந்நிலையில் காணப் பொறுக்காமல், மதுவின் தோழியான வினுவிற்கு தொலைபேசியில் அழைத்து, இந்த ஹாஸ்பிடலில் முகவரியைச் சொல்லி, உடனே வந்து பார்க்குமாறு கூறியிருந்தான். அவளுக்காக தான் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 


    இப்போதைய சூழ்நிலையில் தன்னைவிட, அவளது தோழியின் துணையே அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்று உணர்ந்து, வினுவை அழைத்திருந்தான்.


      லட்சுமி அம்மாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து அனைவரையும் சத்தம் போட தொடங்கினார்.


  "நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே, அவங்களுக்கு மேல மேல பிரஷரை ஏத்தக்கூடாதுன்னு, திரும்பவும் ஏன் இப்படி பேசி பேசி அவங்க உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துறீங்க. இப்ப அவங்களை ஐ சி யு குள்ள கண்டிப்பா அட்மிட் பண்ணியே ஆகணும்."


  லட்சுமி அம்மா ஐ சி யு வில் அட்மிட் செய்யப்பட்டார் பல உபகரணங்களின் உதவியால் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.


    நடந்ததை நினைத்துப் பார்த்த மதுவிற்கு தன்நிலையை எண்ணி, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.


    பிறருக்கு நன்மை செய்ய வேண்டி ஒரு பொய்யை சொல்ல போக, அது தனக்கே இப்படி வினையாக முடியும் என்று, அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.


  அதைவிட தனது குடும்பம், தன் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா என்று என்னும்போது, அவளுக்கு மனம் கனத்துப் போனது.


  தனது வாய்மொழியாகவே கேட்டாலுமே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள்  என்று கூற வேண்டாமா? இது தான் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையா? என்று அவள் மனது அவளிடமே கேள்வி கேட்டது.


    அது மட்டுமா தன் உடன் பிறந்தோனும் தன்னை பெற்றெடுத்தவருமான தந்தையுமே, தன்னிடம் இன்னும் இது பற்றி, ஒரு வார்த்தை கேட்கவில்லையே, அவர்களும் என்னை நம்பவில்லையோ? என்று மனம் வெதும்பினால்.


    அமுதனால் இன்னும் நம்ப முடியவில்லை கோயிலில் பேசியது தனது தங்கைதானா என்று. அதுவும் தங்களுக்கு தெரியாமல் அவள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்று அவனால் நம்பவே முடியவில்லை.


  பூவுப்பாட்டிக்கு வடிவுப்பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, தளர்ந்து போய் அமர்ந்திருந்த, தனது தந்தையை ஆறுதல் படுத்த அவரோடு அமர்ந்திருந்தான் அமுதன். இதனால் தன் தங்கையிடம் சென்று பேச அவனால் முடியவில்லை.


  ஒருவேளை தனது தங்கைக்கும் வேந்தனுக்கும் முன்பே அறிமுகம் இருக்குமோ, என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமல் இல்லை.


    அவசரமாக மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த வினு, நேராக மதுவிடம் சென்று அமர்ந்தாள்.


    "என்னாச்சு மது?"


    "யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அது தெரிஞ்சதால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு."


  "கண்டிப்பா இருக்காது, எங்களுக்கு தெரியாம இதை நீ செஞ்சிருக்கவே மாட்டே, ஏதாவது ஒரு சிச்சுவேஷனா இருந்திருக்கலாம். அதனால நீ பொய் சொல்லி இருக்கலாம், அது தெரியாம அம்மா இதை உண்மைனு நினைச்சுட்டாங்களா? சரி விடு அம்மா திரும்ப வந்ததும் நம்ம சொல்லி புரிய வச்சுக்கலாம்."


  ஐ சி யூ வின் கதவுகளை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் பார்வை, வினுவிடம் திரும்பியது. அவளை கட்டிக்கொண்டு கதறி அழ  தொடங்கினாள்.


  வினு பேசியதை கேட்ட கனியமுதனுக்கு, தான் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை என்று, மனது உறுத்தியது.


    "அடடா மது குட்டி, எதுக்காக இப்போ டேமை இப்படி ஓபன் பண்ணிட்டு இருக்க, லட்சும்மா ரொம்ப தான் உன்னை திட்டிட்டாங்களோ, விடு அவங்க வந்ததும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அவங்களை ஒரு கை பார்த்துக்கலாம் சரியா அழக்கூடாது."


  தோழியை தனது சேய்யாக்கி தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் வினு. அவள் மன பாரம் போக்க, வேறு கதைகளை பேசி அவளை திசைதிருப்பத் தொடங்கினாள்.


வினுவின் வரவால் தனது மனதை நிலைப்படுத்திக் கொண்ட மதுவிற்கு, அப்போதுதான் நினைவு வந்தது.


  "ஆமா வினு நான் உனக்கு கால் பண்ணவே இல்லையே? உனக்கு எப்படி தெரியும், நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு? அண்ணா கூப்பிட்டு இருந்தானா?"


    தன் அண்ணன் தனக்காக வினுவை வரவழைத்து இருப்பானோ என்று ஆர்வத்தோடு மது கேட்க,


"இல்ல மது, வேந்தன் சார் தான் எனக்கு கூப்பிட்டு இருந்தாரு. உடனே இங்க என்னை வர சொன்னாரு."


  அப்போதுதான் மதுவிற்கு வேந்தனின் குடும்பமும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி வேந்தனை தேடியவள், தனக்கு சற்று தள்ளி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் வேந்தனை கண்டால்.


    அவனைக் கண்டவுடன் மறுபடியும் நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர, கண்களில் மீண்டும் கண்ணீர் சூழ்ந்தது. தனது உதட்டை கடித்த அழுகையை அடக்கி கொண்டவளை வேந்தன், சூழ்நிலை அறிந்து கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூற தொடங்கினான்.


    வேந்தன் அவனது வலது கையை நெஞ்சில் வைத்து, கண்களை மூடி திறந்து அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக விழி வழியே அவளுக்கு செய்தி அனுப்ப, புரிந்து கொண்டு சரியென்று அவளும் தலையை அசைத்தால்.


  இடது கையால் இதழ்களுக்கு நேராய் வைத்து ஸ்மைலி என்று சைகை அனுப்ப, அவளும் மென்னகை புரிந்தால்.


  இவர்களின் விழி மொழியினை அங்குள்ளவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஆனால் அனைவரின் மனதிலும் தோன்றியது ஒன்றுதான், ஒருவேளை லட்சுமி அம்மா கூறியது உண்மை தானோ என்று.


    இவ்வளவு நேரமும் ஒருவேளை லட்சுமி அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே தெரிந்தது, இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்.


  அப்போதே சுந்தரமூர்த்தி ஐயா ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை பற்றி மதுவின் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள, அவரை நோக்கி சென்றார்.


  வினு உள்ளே நுழையும் போதுதான் வேந்தனின் நண்பர்களும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.


    விஷயம் அறிந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேந்தனை முறைத்துக் கொண்டே அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.


    ஆனால் வேந்தன் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் மதுவின் மீது மட்டுமே இருந்தது.

Tuesday, June 17, 2025

மன்னவரே 37


 

             அத்தியாயம் 37


    குருஜியின் ஆசிரமத்தில் விஜயன், தன்னைச் சுற்றி, தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த, குருஜியின் சீடர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.


    "இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி அந்த பொண்ணை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே, இதுதான் நீங்க பொறுப்பா இருக்கற லட்சணமா?"


    "அந்தப் பொண்ணு பத்திரமா பாத்துக்கிறதை தவிர, உங்களுக்கு என்னடா வேலை? அப்படி என்ன வேலையை பார்த்து கிழிச்சீங்க?"


    "பொறு விஜயா சற்று அமைதி கொள்."


  "எப்படி குருஜி அமைதியா இருக்கிறது. நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள். அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமுன்னு உங்களுக்கே தெரியும். இவனுங்க இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறானுங்களே இனி எப்படி என் பொண்ணு நினைச்சதை சாதிப்பா.


  இதுக்காக நம்ம எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், கோயில்ல இருக்கிற சாமியை மந்திர கட்டால அடக்கி வைச்சிருக்கோம்.


  அந்த காட்டு பிச்சியை, அந்த காட்டை விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதபடி, மந்திரத்தால கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.


    அது மட்டுமா அந்த கோயில்ல சாமி ஆடுற பூசாரியை, குருந்த மரத்தடியில் இருந்து மண் எடுக்கணும்னு சொல்ல சொல்லி, மண்ணு எடுக்கிறது மூலமா அந்த காட்டு பிச்சியோட மிச்சம் இருக்கிற சக்தியை எல்லாம் முடக்கப் போறோம்.


        இத்தனையும் எதுக்காக, என் பொண்ணோட ஆசைக்காக தான், ஆனா அதுவே நடக்காம போயிடும் போல இருக்கே."


      "விஜயா நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேள். ஏற்கனவே அந்த பெண் நிரஞ்சனாவின் உடலில், உன் பெண்ணின் ஆன்மா ஒப்புவதற்கான வழிமுறைகளை செய்து விட்டேன்.


  இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி, நாளை உன் மகள் அந்த மோகினி பள்ளத்தில் இருந்து வெளிப்படும் போது, இந்த நிரஞ்சனா அந்த ஊரில் இருக்க வேண்டும்.


  இந்தப் பெண் நிரஞ்சனாவை, உன் மகளுக்காகவே உருவேற்றி வந்துள்ளோம். அவளைத் தவிர வேற யார் உடலிலும் உன் மகளின் ஆன்மாவால் உட்புக முடியாது.


  எனது கணிப்பு சரி என்றால் நம்மிடமிருந்து தப்பித்த அந்த பெண், நிச்சயமாக அவளது ஊரிற்குதான் சென்று கொண்டிருப்பாள்.


  அதனால் கவலை ஏதும் இல்லை, நீ அமைதி கொள் விஜயா, நிச்சயம் வெற்றி நமதே."


    லட்சுமியம்மாவுக்கு மதுவை வேந்தனுடன் கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறிக் கொண்டிருக்க, அவர் முற்றிலுமாக உடைந்து போனார்.


    நிரஞ்சனாவை பற்றி பூவுப்பாட்டி காலையில் தான் அவரிடம் கூறியிருந்தார். ஏற்கனவே தன்னால், தனது புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீராமல் அப்படியே இருக்க, மீண்டும் தான் பெற்ற மகளால், புதிதாக உருவாகி இருக்கும் இந்த பிரச்சினையை எண்ணி மனம் துவண்டார். 


    சரி விதி ஆடும் ஆட்டத்தில், யாருக்கு யார் என்பது இறைவன் போட்ட முடிச்சு, அதை யாரால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேலும் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றார்.


  அதுவும் அவள் தாலி மற்றும் குங்குமத்தை பற்றி கூறியது, தனது வளர்ப்பு பொய்த்து விட்டதோ என்று அந்த தாய் மனது நொறுங்கிப் போனது..


  அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கோவிலில் சரிந்தவரை, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 


    டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இது அவருக்கு மைல்டு அட்டாக் என்று கூறினர்.


    அவரின் மன அழுத்தமும், எதிர்பாராத அதிர்ச்சியும் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறினர். மீண்டும் இது போன்று அதிர்ச்சியான தகவல்கள் எதுவும் அவரை  நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.


  குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மியம்மாவை காண உள்ளே செல்ல, மெதுவாக கண்விழித்தவர் தன் மகளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு, கத்த தொடங்கினார்.


  "அவள வெளிய போக சொல்லுங்கத்தே. நான் யாரையும் இப்ப பார்க்க தயாரா இல்லை, என்னோட வளர்ப்பு சரியா இல்ல போல, அதனாலதான் பெத்தவங்க கிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்க அவ முடிவு பண்ணிட்டா.


    அது மட்டுமா, எந்த நாட்டுல பிறந்துட்டு தாலியும் நெற்றி நிறைய வைக்கிற குங்குமமும் மதிப்பில்லைன்னு சொல்லிட்டா? எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, வெளியே போக சொல்லுங்க."


    "அம்மா நான் சொல்றதை கேளு,  அவர்கிட்ட சும்மா விளையாட்டுக்காக தான் சொல்லிட்டு இருந்தேன்."


    "எது விளையாட்டு, தாலி உனக்கு விளையாடும் விஷயமா? குங்குமமும் மாங்கல்யமும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரியுமா?  இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் அது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா?"


"அம்மா நான் சொல்றத கேளு."


  "இனி கேட்க என்ன இருக்கு, அதுதான் நீ சொன்னது எல்லாத்தையுமே என் காதால கேட்டுட்டேனே."


    "ஐயோ அம்மா..., நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு, நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. சில விஷயத்துக்காக நான் பொய் சொன்னேன்."


   வடிவுப்பாட்டி தான் மதுவிற்கு ஆதரவாக பேசினார்,


  "லட்சுமி மொதல்ல புள்ள சொல்றத, கொஞ்சம் காது கொடுத்து கேளு. அதுக்கு முன்னவே நம்ம புள்ளைய நாமலே சந்தேகப்படலாமா?"


  "இதுக்கு மேல என்ன கேட்கிறது. கண்ணால பாத்தாச்சு, அவ வாய்மொழியாகவே கேட்க வேண்டிய அளவுக்கு கேட்டாச்சு. இதுக்கு மேலயும் அவ என்ன சொல்லி, நான் என்னத்த கேட்க. இன்னைக்கு காலையில அவ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனது உண்மையா, பொய்யான்னு மட்டும் என் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க"


  "நான் போனது உண்மைதான். ஆனா…"


    "போதும் இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் கேட்க வேண்டாம். அத்தை நான் தான் சொல்றனே அவள வெளியே போக சொல்லுங்க. இங்கயே இருந்து என்னை உயிரோட கொல்ல வேண்டாமுன்னு சொல்லுங்க.


  அவள பெத்ததுக்கு எனக்காக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய சொல்லுங்க, என்னோட கடைசி ஆசையும் இதுதான்.


  இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் மாங்கல்யம் என்கிறது புனிதமானது. அதை கட்டிக்காம குடும்பம் நடத்துவது ஒரு தப்பான முறையா போய்விடும். தயவு செய்து அவர் கையால, இவ கழுத்துல மாங்கல்யம் வாங்கிட்டு, என் பொணத்தை வந்து பார்க்க சொல்லுங்க.


  அப்படி இல்லைனா, அவ என்னை பாக்கவே வரவேண்டாம் வெளிய போக சொல்லுங்க."


    பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, மூச்சுக்களை பெரிது பெரிதாக இழுத்து விட ஆரம்பித்தார்.


  உடனே டாக்டரும் நர்ஸ்களும் அழைக்கப்பட்டு, அவருக்கு மறுபடியும் சிகிச்சை ஆரம்பமானது.

Monday, June 16, 2025

மன்னவரே 36


 

              அத்தியாயம் 36


      "எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ. "


    ராகுல் அவரை புரியாமல் பார்க்க, அவர் புன்னகை சிந்தினார்.

   

"தவறி விழப் போறா பாருப்பா, கெட்டியா பிடிச்சுக்கோ"


      "நல்லா தான் பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு தெரியலம்மா."

 

      "முதல்ல அவள தூக்கிட்டு கோவிலுக்குள்ள வாப்பா. அந்த மரத்தடியில் இருக்கிற பைப்கிட்ட அவ கையையும் காலையும் நல்லா அழுத்தி கழுவு. அவள பிடிச்சது நீரோட போகட்டும்."


    அவர் சொன்னது போலவே செய்தவன், பிறகு நிரஞ்சனாவை கைகளில் தூக்கிக் கொண்டு கோவிலினுள் நுழைந்தான்.


  "இப்படி மண்டபத்துல அவள படுக்க வைப்பா, நான் இதோ வரேன்."


    ராகுலும் அவர் கூறியபடியே கோவில் மண்டபத்தில் அவளைப் படுக்க வைத்தான். அவனுக்கு அவளை எங்கோ பார்த்தது போன்று நினைவு, தன் நினைவடக்குகளில் எவ்வளவு தேடியும், எவ்வளவு யோசித்தும் விடைதான் கிடைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் அருகே அமர்ந்து விட்டான்.


      "அவ தலையை எடுத்து உன் மடிமேல வச்சு, அந்த அம்மனை வேண்டிக்கிட்டு, இந்த தீர்த்தத்தை அவளுக்கு புகட்டுப்பா."


  அவனும் அவர் கூறியது போலவே நிரஞ்சனாவிற்கு தீர்த்தத்தை புகட்டினான்.


    அவர் கண்களை மூடிக் வேண்டி கொண்டு, தன் கையில் இருந்த நீரை அவள் முகத்தினில் தெளிக்க, நிரஞ்சனாவின் இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் அசயத் தொடங்கியது.


  பின்பு சிறிது நேரத்திலேயே மெதுவாக நிரஞ்சனா தன் கண்களை திறந்தால். அவள் கண் திறந்ததும் முதலில் பார்த்தது, தன் தலையை மடிமீது தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த ராகுலைத்தான்.


    பதறி எழ முயன்றவள், தன் உடலின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், மீண்டும் அவன் மடியையே தஞ்சம் அடைந்தால்.


    "என்னம்மா உடம்புல தெம்பு வந்ததும், உதறிட்டு போலாம்னு பாத்தியோ. எல்லா நேரமும் தாங்கி பிடிக்க தம்பி இருக்குமுன்னு தைரியமா? எப்பவும் அவசரம் கூடாது, நிதானமாவே துணையோடு எழுந்து நில்லும்மா"


  "முதல்ல இந்த சேலையை வாங்கிக்கோம்மா, அதோ அந்த மறைவுக்கு பின்னாடி போய் மாத்திக்கிட்டு வா போ."


  அவள் புடவையை வாங்கிக் கொண்டு செல்ல, ராகுல் தனது அலைபேசியிலிருந்து ஓனரான வாசுதேவனுக்கு அழைத்தான்.


    அவரிடம் சுருக்கமாக நடந்தவைகளை கூறினான்.


    "நீ இருக்கிற இடத்தை எனக்கு லொகேஷன் அனுப்பு ராகுல், நான் உடனே என் வீட்டு டிரைவரை கார் எடுத்துட்டு அங்க அனுப்பி வைக்கிறேன்.


    அவன் கிட்ட வேனை கொடுத்துட்டு நீ அந்த பொண்ணை கூட்டிட்டு, அவங்க ஊர்ல கொண்டு போய் பத்திரமா இறக்கி விட்டுட்டு வா. பார்த்து பத்திரம், ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கூப்பிடு."


  அவன் அவருக்கு நன்றி கூறி அழைப்பை துண்டித்து விட்டு, வாட்ஸ் அப்பில் அவன் இருந்த லொகேஷனை அவருக்கு அனுப்பி வைத்தான்.


    பிறகு அவனது தாய்க்கு அழைத்தான், எங்கே நடந்தவற்றை கூறினால் அவர் பயந்து விடுவாரோ என்று நினைத்து, வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், அதனால் தனக்காக காத்திருக்காமல் உணவினை உண்டு விட்டு, நிம்மதியாக உறங்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.


  நிரஞ்சனா தான் அணிந்திருந்த தாவணியை கலைந்து விட்டு, புடவை உடுத்தி வந்தாள்.


  "ரெண்டு பேரும் இப்படி அம்மன் முன்னாடி வந்து நின்னு, கெட்டது எதுவும் நெருங்க கூடாதுன்னு நல்லா மனதார வேண்டிக்கங்க."


  அவர்களும் அவர் சொன்னது போலவே செய்தனர். அவர் அவர்கள் இருவரின் கைகளிலும் ஒரு தாயத்தினை கட்டினார்.


    "எந்த நேரத்திலும் இது உங்க கைய விட்டு, எப்பவும் நீங்க கூடாது. இது உங்க கையில இருக்கிற வரைக்கும், எந்த கெட்டதும் உங்க ரெண்டு பேரையும் நெருங்காது, நல்லபடியா ஊர் போய் சேருங்க."

 

    திருநீற்றினை இருவரது நெற்றியிலும் வைத்து ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பி வைத்தார். 


    வாசுதேவன் ராகுலுக்கு அழைத்து தனது கார் டிரைவர் அங்கு வந்து விட்டதாக கூறினார். உடனே ராகுல் அங்கு சென்று, டிரைவரிடம் நன்றி கூறி வேன் சாவியை கொடுத்துவிட்டு, கார் சாவியை வாங்கி வந்தான்.


    பிறகு இருவரும் அம்மனை நன்றாக வேண்டிக்கொண்டு தமது பயணத்தினை தொடங்கினர்.

  நிரஞ்சனாவிடம் அவளது ஊர் பெயரினை கேட்டு அறிந்து கொண்ட ராகுல் தமது அலைபேசியில்  அங்கு செல்வதற்கான வழியினை மேப் மூலம் அறிந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


வழியில் நிரஞ்சனாவிற்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் அவன் மறக்கவில்லை.

 

    வேடந்தூரில் மாலையில் ஆரம்பித்த ஊர் மக்களின் பொதுக்கூட்டமானது, சச்சரவுகளினோடே இன்னும் நடந்து கொண்டிருந்தது.


    "அட நிறுத்துங்கப்பா இன்னும் எவ்வளவு நேரம் தான் இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்க போறீங்க. சாயந்திரம் ஆரம்பிச்ச கூட்டம் அர்த்த ராத்திரி ஆயிடும் போல இருக்கு, எப்ப தான்யா முடிப்பீங்க?"


  "சுந்தரம் ஐயா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல, அவரு வெளியூர் போயிருக்கிறதுனால தானே, இப்போ யோசிக்க வேண்டியதா இருக்கு."


    "ஆமா பின்ன என்ன பண்றது அவர் ஏதோ அவசரம்னு வெளியூர் போனவர் இன்னும் திரும்பல."


    "நாளைக்கு வேற, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண் எடுக்க வேணும். ஏற்கனவே நாள் குறிச்சிட்டோமே அதனால நீங்களே பாருங்கன்னு அவர் சொல்லிட்டாரு."


    "அவர் ஹாஸ்பிடல்ல இருக்கிறதால இப்போதைக்கு அங்கிருந்து வர முடியாதாம். நம்ம வேலப்பன் ஐயா குடும்பத்திலயும் அந்த பொண்ணு ஓடிப் போனதால எல்லாரும் சங்கடத்தில் இருக்காங்க, அவங்களும் யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்." 


    "அதுதான் ஐயாவே சொல்லிட்டாரே அதனால கண்டிப்பா நாளைக்கு, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண்ணெடுத்து, நம்ம குல தேவிக்கு சிலை செய்யப் போறோம், எல்லாருக்கும் இதுல சம்மதம் தானப்பா?"


  "அப்புறம் என்ன நாளைக்கு இங்க கோவில்ல வேலை முடிஞ்சதும், நேரா கொற்றவை கோயிலுக்கு போய் அங்க பார்த்துட்டு வந்துடலாம், என்னப்பா சொல்றீங்க? ஏற்கனவே அவங்க பாதை போடுற வேலையெல்லாம் முக்கால்வாசி முடிஞ்சிடுச்சு."


    "நாம எல்லாரும் கோயில் வரைக்கும் போய், வேற என்ன தேவைப்படுதுன்னு ஒரு பார்வை பாத்துட்டு வந்துடுவோம் அப்பதான் திருவிழாவின் போது என்ன தேவைப்படும் என்கிறது தெரியும்."

Sunday, June 15, 2025

மன்னவரே 35


 

            அத்தியாயம் 35

     

          திக்கு தெரியாமல் நெடுஞ்சாலைதனில் ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சனா, தூரத்தில் ஏதோ வாகனம் வரும் வெளிச்சப் புள்ளி தெரிய, அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.


    வழியெங்கும் மரங்கள் சூழ்ந்த இருளின் நடுவே, குத்து மதிப்பாகதான், அந்த தார் சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள்.


    அதே ரோட்டில்தான் எதிர் திசையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அடங்கிய மினி வேனினை, ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான், மதுவினால் கூகுள் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ராகுல்.


  கட்டுமான பொருட்கள் அடங்கிய மினி வேனை, பத்திரமாக தமது கம்பெனியின் அருகே இருக்கும் குடோனில் நிறுத்திவிட்டுதான், ஆபீஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பைக்கை எடுத்துக்கொண்டு இவனது இல்லம் செல்ல வேண்டும். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்.


    வண்டியை ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்த ராகுலுக்கு, யாரோ ரோட்டில் ஓடி வருவது போல் தெரிந்தது.


  அருகே வரவர தான் அது ஒரு பெண் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.


  வேனினை கண்டவுடன் கைநீட்டி அதை நிறுத்த முயற்சி செய்தால் நிரஞ்சனா, அந்த முயற்சிக்கு பலனாக வேனும் நின்றது.


    அதிலிருந்து இறங்கிய ராகுல், அவளின் தோற்றத்தை கண்டு அதிர்ந்து நின்றான்.


        இவ்வேளையில் உடையெங்கும் இரத்தப் புள்ளிகள் சூழ்ந்திருந்த அவளது தோற்றத்தை கண்டு, இந்த குளிர்கால இரவு நேரத்திலும் அவனுக்கு வியர்வை பூத்தது.


      "சார் சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. இங்கிருந்து என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ். என்னை கடத்தி வச்சிருந்தவங்க என்னை காணோம்னு துரத்திட்டு வந்தாலும் வந்துடுவாங்க."


  ராகுலுக்கு அவளின் தோற்றம் வித்தியாசமாக பட்டாலும், அவள் வேதனையில் அழும்போது, அவனால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. 


          இந்த இரவு நேரத்தில் பணம் பறிப்பதற்காக, இவ்வாறு சிலர் நடிப்பதை அவன் கேள்விப்பட்டதுண்டு. சில சமயம் அவனும் கூட அதில் ஏமாந்து போனதும் உண்டு. 


          பாவம் பார்த்து வண்டியை நிறுத்தியதனால் ஏற்பட்ட, பல வழிப்பறிகள் பற்றிய செய்திகள், ஏனோ இந்த சமயம் அவன் நினைவுக்கு வந்தது.


       இருந்தும் அவளின் முகத்தில் தெரிந்த பதட்டமும் கவலையும் இவனுக்கு உண்மை என்றே கூறியது.


  "முதல்ல பதட்டப்படாம தெளிவா  என்ன நடந்ததுன்னு சொல்லுங்க."


    நிரஞ்சனா அழுகையினூடே கூறத் தொடங்கினாள்.


  "யாரோ மந்திரவாதிங்க சிலர் என்னை கடத்திட்டு வந்துட்டாங்க. நான் எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியல. என் ஃபேமிலி கிட்ட போகணும், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்."


  பதட்டத்தோடு இவள் வந்த பாதையினை திரும்பி திரும்பி பயத்தோடு பார்த்துக் கொண்டே, இவனிடம் பேச, ராகுலும் அவளை வண்டியினுள் ஏறுமாறு கூறினான்.


    அவளை வேனின் பின்பக்கத்தில் பொருட்களோடு பொருட்களாக ஏறி அமர்ந்து கொள்ள சொல்லி,  வெளியே தெரியாத வண்ணம் அவளின் மீது, ஒரு தார்பாயை போட்டு மூடினான்.


    "இந்தக் காட்டத் தாண்டுற வரைக்கும் இப்படியே இருங்க, வெளியே என்ன சத்தம் கேட்டாலும் சரி, வண்டி  நின்னாலும் இல்ல ஏதாவது பேச்சு குரல் கேட்டாலும் சரி, தயவு செய்து இந்த தார்பாயை விலக்கிப் பார்த்திடாதீங்க."


  ராகுல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வண்டியினை கிளப்பி சிறிது தூரமே சென்றிருப்பான், அப்போது சில கட்டுமஸ்தான ஆட்கள் காட்டுப் பாதையில் இருந்து ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


  வந்தவர்கள் இவனது வண்டியை நிறுத்தி,


  "இந்த வழியா ஏதாவது ஒரு பொண்ணு போனதை பார்த்தியா?"


  "கியா? தும் கியா பாத் கரேகோ, ஹமே ஹமே சமஜ்னையாத்தா?"


  "என்னடா இவன் கியாமுயாங்கிறான் ஆள பாத்தா வெளியூர்க்காரன் மாதிரி இருக்கிறான், கண்டிப்பா அந்த பொண்ணு இவன் வண்டியில ஏறி இருக்காது. பின்னாடி எல்லாம் ஒரே கட்டிட பொருளுங்களா தான் கிடைக்குது. அது எங்கயாவது இந்த காட்டுக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கனும்."


  "அதுதான் பாதிப்பேர் காட்டுக்குள்ள தேடிக்கிட்டு இருக்காங்களே, வா நாம அந்தப் பக்கம் போய் தேடி பார்க்கலாம்."


  அவர்கள் இவன் வண்டியை தாண்டி மறுபக்கம் இருந்த காட்டினுள் தேட சென்றனர்.


  ராகுல் வண்டியை இயக்கி அங்கிருந்து நகரத் தொடங்கினான்.


  அங்கிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் தாண்டி தான் வண்டியை நிறுத்தினான்.


  வண்டியின் பின்புறம் வந்து தார்ப்பாயை விளக்கியவன்,


"வெளிய வாங்க பயப்படாதீங்க, நாம அங்க இருந்து தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்சம் தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும். உங்க பேரன்ட்ஸ் நம்பர் இருந்தா சொல்லுங்க நான் போன் பண்ணி தரேன்." 


    "அது எனக்கு நினைவுல இல்லயே, எல்லாரோட நம்பரும் என் போன்லதான் இருக்கு. நான் எதையும் மனப்பாடம் செஞ்சு வச்சுக்கல."


  "என்னங்க இது, ஒருத்தரோட நம்பர் கூடவா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரல? எப்பவும் கையிலயே போனை வச்சுக்கிட்டு இருப்பீங்களோ?"


  தான் கூறியதைக் கேட்டு அவள் முகம் போன போக்கை பார்த்து அதற்கு மேல் எதுவும் அவனால் கூற முடியவில்லை.


    "சரி இன்னும் கொஞ்ச தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும் நான் உங்களை அங்க இறக்கி விட்டுடவா? இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல வேணா விட்டு விடவா?"


  "வேண்டாம் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பயமாதான் இருக்கு, ப்ளீஸ் சார் என்னை நீங்களே என் வீட்டில் கொண்டு போய்  விட்டுடறீங்களா?"


    ராகுலுக்கும் அவளின் இக்கட்டான நிலமை புரிந்தது. ஆனாலும் தன்னிடம் உள்ள கட்டுமான பொருட்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே, இதை இப்படியே வைத்துவிட்டு எவ்வாறு இவளுடன் செல்ல முடியும்.


        அத்தோடு அவள் இருக்கும் கோலத்தை முதலில் கலைக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே சுற்றி முற்றி தேடினான்.


        அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தூரம் தள்ளி ஒரு கோயில் இருந்ததை கண்டான்.


      அங்குள்ள நீரால் முதலில் இவள்மேல் உள்ள  ரத்த துளிகளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அவளை அழைத்துக்கொண்டு அக்கோவிலை நோக்கி சென்றான்.


    கோவிலை நெருங்கும்போது ஏனோ நிரஞ்சனாவால் தெளிவாக நடக்க முடியவில்லை. அவள் மேல் உள்ள செய்வினை விளைவால் நிற்க முடியாமல் தள்ளாடத் தொடங்கினாள்.


    சரியாக கோயிலின் வாசற்படியை மிதிக்கும் போது மயங்கி சரியப் போனவளை ஒரு கை கொண்டு ராகுல் பிடித்துக் கொண்டான். அவளின்   மற்றொரு புறத்தை கோவிலின் உள்ளிருந்து வந்த இன்னொரு கரம் தாங்கியது.


    ராகுல் நிமிர்ந்து பார்த்தபோது அங்கே மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய குங்குமம் வைத்து தெய்வம்சம் பொருந்திய ஒரு பெண்மணி கோவிலின் உள்ளிருந்து நிரஞ்சனாவை ஒரு புறம் தாங்கிக் கொண்டிருந்தார்.


      "எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ."