Search This Blog

Followers

Powered By Blogger

Monday, June 9, 2025

மன்னவரே 29


 

             அத்தியாயம் 29


மது அந்த கோப்பினையே கோபப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வினு கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்துக் கொண்டிருந்தாள். 


    அந்தக் கோப்பினுள் வாய்ப்பாடு (tables) ஒன்றில் இருந்து இருபது வரை எழுதிப் பார்க்குமாறு போட்டிருந்தது.


  அதனைக் கண்டுதான் மது கோபத்துடனும் வினு சிரிப்புடனும் அமர்ந்திருந்தார்கள்.


  மது அதே பார்வையை வினுவின் புறம் திருப்பி,


  "பார்த்து பார்த்து ரொம்ப சிரிக்காத எருமை, பல்லு சுளுக்கிக்க போகுது. "


    "சுளுக்கிக்கிட்ட நான் டூத் பேஸ்டால நீவி, சுளுக்கு எடுத்துக்கிறேன்."


  என்று கூறி மதுவின் தோள்களைப் பிடித்து முன்னும் புறமும் ஆட்டி எதையோ தேட,


    "ப்ச்சு என்னடி பண்ற?"


      "அது... மது மதுன்னு ஒரு மானஸ்தி இருந்தா அவளை எங்கயாச்சும் பாத்தியா? வரும்போது என்னா பேச்சு பேசினா, ஓனருக்கு அவ பிபியை ஏத்த போறாளாம்? இப்ப அவளோட பிபியை செக் பண்ணா அந்த மிஷினே வெடிச்சிடும் போல ஹா ஹா ஹா."


      "இருக்கு டி  அவனுக்கு இருக்கு. எனக்கு இருக்க கோபத்துக்கு அவன் மட்டும் என் கையில சிக்கட்டும் அப்பறம் இருக்கு."


    சரியாக அந்த நேரத்தில்தான், வேந்தன் மதுவின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.


"ஹலோ யாருங்க?"


           "நான்... நான் மது பேசறேன்"


"மது???"


  "உங்க அர்ஜென்ட் பிஏவா ஜாயின் பண்ணி இருக்க, அதே மது தான்."


  "ஓ மிஸ் மதுரம் நீங்க கரெக்டான நேரத்தில் தான் கூப்பிட்டு இருக்கீங்க. உங்களால எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?"


அவன் குரலில் ஒரு வித பதட்டத்தை உணர்ந்த மது,


  "சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா உதவி செய்யறேன்."


        "நான் இன்னும் ஒரு ஒன் ஹவர்ல ஆபீஸ்க்கு வரேன். நீங்க கொஞ்சம் தயாரா இருக்க முடியுமா? என் கூட ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கும். என் பிரண்டோட லவ்வருக்கு ஒரு பிராப்ளம், நான் மட்டும் தனியா போய் பேச முடியாது அந்தப் பொண்ணு கிட்ட, அதனாலதான் உங்கள கூப்பிடறேன்."


   "ஓகே சார் நான் ரெடியா இருக்கேன்."


  "தேங்க்யூ மிஸ் மதுரம் நேர்ல பார்க்கலாம் பை."

     

  அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த வினு,


"இதுதான் உங்க ஊர்ல கோபமா பேசறதா?"


  "அது அது அவர் ஏதோ பிரச்சனைன்னு சொன்னாரு, அதோட அவர் ஏதோ பதட்டத்தில பேசற மாதிரி இருந்தது. இப்ப நேர்ல வரத்தானே போறார் அப்புறம் பேசிக்கறேன்."


  "ஓஓஓஓஓ கோபத்துல அவனா இருந்தவர் இப்போ அவரா மாறியாச்சு? நீ உங்க அவர் மேல காட்ட போற கோபத்தை, நானும் பார்க்கத்தானே போறேன் 


    சரி சரி...இந்தாம்மா குழந்தைபுள்ள, போய் வாய்ப்பாடு எழுது போ, டீச்சர் வந்தரப்போறாங்க. அப்புறம் இங்க பென்ச் கூட இல்ல, சேர் மேல ஏறி நிக்க வச்சுற போறாரு."


    வினு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இதனைக் கூற, அதற்கு பரிசாக மதுவின் கைகளால் மீண்டும் பல அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டாள்.


  இங்கு வேந்தனோ வரவேற்பறை சுவற்றில் மாட்டியிருந்த மதுவின் புகைப்படத்தை, தன் அலைபேசியில் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து கொண்டு, குடும்பத்தாரிடம் சென்றான்.


    வேந்தன் வந்து பார்க்கும் போது, சிவராமன் தனது தாயின் மடியில் தலை வைத்து அவரின் கால் அடியில் அமர்ந்திருந்தார். அங்கு ஒரு பாசப் போராட்டம் நடந்ததை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.


  அந்தக் காலத்திலேயே தனது தாயின் வாக்குறுதிக்காக, தன் தந்தையை எதிர்த்து நின்ற இவரை வேந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது.


      வேந்தனை வடிவுப்பாட்டி அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அமுதனுடன் சிறிது நேரத்திலேயே சரளமாக பேச ஆரம்பித்து விட்டான்.


    "அம்மா நான் மதுவுக்கு போன் பண்ணி வரச் சொல்லவா? அவ மட்டும் வீட்ல இல்லாதது ஒரு மாதிரி இருக்கு. பாட்டிங்களும் அவளை பார்த்த மாதிரி இருக்குமே."


  அச்சச்சோ நான் இங்க இருக்கிறதை உன் தங்கச்சி பார்த்தா என் பிளான் எல்லாம் என்ன ஆகிறது என்று எண்ணிய வேந்தன்,


    "ஒன்னும் அவசரம் இல்ல. பாட்டிங்க இரண்டு பேரும் இரண்டு நாளைக்கு இங்கதான் தங்க போறாங்க. உங்க தங்கச்சி பொறுமையா வந்தால் போதும்."


    "என்ன ராசா நீங்க வாங்கன்னுட்டு, உனக்கு அமுதேன் மச்சான் முறை தானே, அவனை மச்சான்னே கூப்பிடு. நீ மாப்பிள்ளைன்னு கூப்பிடனும் அமுதா. உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டால் தானே நல்லா இருக்கும். "


    இருவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டி கொண்டனர்.

 

  ஒரு கோர ராட்சச அரக்க சிலையின் முன் படுக்க வைக்கப்பட்டிருந்தால் நிரஞ்சனா.


  அவளைச் சுற்றி ரத்தத்தால் மந்திர கோடுகள் வரையப்பட்டிருந்தது.   


    எப்போதுமே வெள்ளை உடை அணிந்து கொண்டிருக்கும் குருஜி, சிவப்பு வண்ண ஆடை அணிந்து கருப்பு மையை அங்கங்களில் எல்லாம் பூசி, மண்டை ஓடுகளால் ஆன மாலை அணிந்து வேள்வி தீயினை வளர்த்துக் கொண்டிருந்தான்.


  அவனைச் சுற்றி அவனைப் போலவே உடைய அணிந்து, மை பூசிய மனிதர்கள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.


  காற்றில் எங்குமே ரத்த வாசம் பரவி துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.


  ரஞ்சிக்கு தன்னைச் சுற்றி ஏதோ நடக்கின்றது என்று உணர முடிந்தது. ஆனால் என்ன முயன்றும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை.


  ஏதோ ஒரு பாரம் தன் உடம்பை போட்டு அழுத்துவது போல உணர்ந்தால், அவளால் தனது கை கால்களை எவ்வளவு முயன்றும் அசைக்க முடியவில்லை. காதுகளில் ஒலிக்கும் மந்திரங்கள், செவி நரம்புகளை வெடிக்கச் செய்வது போல் இருந்தது.


அவ்வப்போது அவள் மீது தெளிக்கப்பட்ட ரத்த துளிகளால், அவளின் உடல் அதிர்ந்து கொண்டேயிருந்தது.


    ஒரு அலங்கரிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மையானது ரத்தத்தில் தோய்த்து எடுத்து, வேள்விக்கு அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.


  குருஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவன் மந்திரங்களை விடாமல் முழங்கிக் கொண்டிருக்க,  ஒருவன் அந்த பொம்மையை எடுத்து ரஞ்சியின் மணிக்கட்டில் வைத்து அழுத்தினான்.


    அவளின் உடல் ஒரு அடிக்கு மேலே காற்றில் மிதந்தது. அவளது கண்கள் திறந்து, பார்வையானது மேலே நிலைக்குத்தி நின்றிருந்தது.

No comments:

Post a Comment